சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான திரீ எக்ஸ் த்ரீ கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு ஆடவர் மற்றும் கேரளா மகளிர் அணிகளுக்கு இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தலா 3 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கினார்

0
195
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான திரீ எக்ஸ் த்ரீ கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு ஆடவர் மற்றும் கேரளா மகளிர் அணிகளுக்கு இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தலா 3 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கினார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக  த்ரீ எக்ஸ் த்ரீ தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்  போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 22 ஆம் தேதி தொடங்கியது.
இந்த தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் மொத்தம் 56 அணிகள் பங்கேற்றன. இந்திய கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் இணைந்து நடத்திய இந்த போட்டியின் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்பொட்டிகள் இன்று நடைபெற்றன.
இதில் தமிழ்நாடு ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் உட்பட 16 அணிகள் பங்கேற்றன.
ஆடவர் அரையிறுதி போட்டிகளில் கேரளா அணியை வீழ்த்திய பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியை வென்ற தமிழ்நாடு அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
 இதில் தமிழ்நாடு அணி பஞ்சாப் அணியை 17க்கு 16 என்கிற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.
மகளிர் அரையிறுதியில் டெல்லி அணியிடம் வெற்றியை பறி கொடுத்த தமிழ்நாடு அணி நான்காம் இடம் பிடித்தது.
மகளிர் பிரிவு இறுதிப்போட்டியில் கேரளா அணி டெல்லி அணியை 20 க்கு 15 என்ற புள்ளிகணக்கில் வென்றது.
ஆடவர் பிரிவில் முதல் மூன்று இடங்களை முறையே தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் கேரளா அணிகள் கைப்பற்றின.
 அதே போல பெண்கள் பிரிவில் கேரளா, டெல்லி மற்றும் ரயில்வே அணிகள் முதல் மூன்று இடங்களை தட்டி சென்றன.
முதலிடத்தை பிடித்த அணிக்கு ரொக்கப் பரிசாக 3 லட்சம் ரூபாயும், 2 வது இடம் பிடித்த அணிக்கு 2 லட்சம் ரூபாயும், மூன்றாவது இடம் பிடித்த அணிக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன.
கோப்பைகள் மற்றும் பரிசுகளை இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா, உயர்நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் பட், கரண் சிங்,  செல்வகணேஷ் ஐ ஆர்.எஸ், ஸ்காட் ஃபிளெமிங்  பொது செயலாளர் குல்விந்தர் சிங் உள்ளிட்டோர் வழங்கினர்.
இந்த தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ள 37 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.