ககன்யான் மிஷனின் ‘க்ரூ மாட்யூல்’ சிஸ்டத்தின் ஆளில்லா விமான சோதனைக்கு இஸ்ரோ தயாராகிறது

0
104

ககன்யான் மிஷனின் ‘க்ரூ மாட்யூல்’ சிஸ்டத்தின் ஆளில்லா விமான சோதனைக்கு இஸ்ரோ தயாராகிறது

விண்வெளி வீரர்களுடன் பயணிக்க தயாராகும் ககன்யான் சோதனை முயற்சிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சரித்திரம் படைத்தது. அதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. இந்த உத்வேகத்துடன், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்ட செயல்பாடுகளை இஸ்ரோ துரிதப்படுத்தி உள்ளது. பூமியின் தாழ்வு வட்டபாதையில் 400 கி.மீ. உயரத்தில் ககன்யான் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு, 3 நாட்கள் ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று, மீண்டும் அவர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வருவதற்கு ‘க்ரூ மாட்யூல்’ (குழு தொகுப்பு) கட்டமைப்பு அவசியம். இதற்கான சோதனைகளுக்காக, சென்னையில் உள்ள கே.சி.பி. நிறுவனத்திடம் ‘க்ரூ மாட்யூல்’ மாதிரிகள் வடிவமைக்க இஸ்ரோ அறிவுறுத்தியது. அதன்படி, 2 ‘க்ரூ மாட்யூல்’கள் வடிவமைக்கப்பட்டு, இஸ்ரோவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதில் 3 விண்வௌி வீரர்கள் அமருவதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ககன்யான் திட்ட சோதனைகளுக்காக ஒற்றை நிலை கொண்ட ‘டிவி-டி1’ என்ற சோதனை ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ‘க்ரூ மாட்யூல்’ கட்டமைப்பு பொருத்தப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும்.

பூமியில் இருந்து 17 கி.மீ. உயரத்துக்கு ராக்கெட் சென்றதும், ‘க்ரூ மாட்யூல்’ பிரிக்கப்படும். பூமியை நோக்கி க்ரூ மாட்யூல் வரும்போது, அதன் வேகத்தை குறைக்க பாராசூட் பயன்படுத்தப்படும். அதனால், மிதமான வேகத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் வங்கக்கடல் பகுதியில் ‘க்ரு மாட்யூல்’ பத்திரமாக தரையிறங்கும். இந்த சோதனையை இந்த மாத இறுதியில் மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு பயணம் செய்யும் வீரர்கள், பாதுகாப்பாக தரை இறங்குவதற்கு, இந்த சோதனை முயற்சிகள் கொடுக்கும். தரையிறங்கும்போது, அதில் காணப்படும் அழுத்தம், வெப்ப நிலை குறித்து அறிந்து கொள்ள இந்த சோதனை முயற்சி பெரிதும் உதவும் என்றும், இந்த முயற்சி வெற்றி அடைந்தால் ககன்யான் திட்டத்தில் இது ஓர் மைல்கல் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது, ககன்யான் முதல் திட்டத்துக்கு பெரிதும் வழிவகுக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.