குரங்குகளின் கையில் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய ஓநாய் மனிதன்

0
286

குரங்குகளின் கையில் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய ஓநாய் மனிதன்

ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக சாக்ஷிஅகர்வாலும் முக்கிய வேடத்தில் ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் சைக்கோ த்ரில்லர் என வழக்கமாக வெளிவரும் திரைப்படங்களில் இருந்து சற்றே மாறுபட்டு அனிமல் திரில்லர் என்கிற ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் அதை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. புன்னகை இளவரசி நடிகை சினேகா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இணைந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை இயக்கியுள்ள ரங்கா புவனேஷ்வர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான “ஆறாவது வனம்” என்கிற படத்தை இயக்கியவர்.

அதன்பிறகு மலையாள திரையுலகிற்கு சென்று அங்கே இரண்டு படங்களை இயக்கியவர், அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படம் ஒன்றையும் இயக்கி உள்ளார். விரைவில் அந்த படம் ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் தமிழுக்கு வந்துள்ள ரங்கா புவனேஷ்வர் அனிமல் திரில்லர் என்கிற ஜானரில் ஓநாய் மனிதன் என்கிற வித்தியாசமான கதைக்களத்தில் இந்த “கெஸ்ட்” படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்திற்கு ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார். படத்தொகுப்பை சியான் கவனிக்கிறார்.

இந்த படம் பற்றி இயக்குநர் ரங்கா புவனேஷ்வர் கூறும்போது, “இன்றைக்கு இதுபோன்ற வித்தியாசமான திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது.

நல்ல வியாபாரத்திற்கான அம்சங்களும் இருக்கின்றன.. அதுமட்டுமல்ல இந்த ஓநாய் மனிதன் என்கிற கதைக்களம் இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக இப்போதுதான் முழுமையாகக் கையாளப்படுகிறது.

இதற்கு முன்னதாக இந்தியில் எழுபதுகளின் காலகட்டத்தில் ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் ஓநாய் மனிதன் என்கிற உருவத்தை அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சாதாரணமாகவே கையாண்டு இருந்தார்கள்.

ஆனால் இந்த படத்தில் ஓநாய் மனிதன் உருவாக்கத்தில் விஎஃப்எஸ் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது.

அதிலும் இங்கே இந்தியாவில் இந்த ஓநாய் மனிதன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு விஃஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதியில்லை என்பதால் ஹாங்காங்கில் வைத்து இந்த படத்தின் விஃஎப்எக்ஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளோம்.

கொடைக்கானல் மற்றும் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள அடர்ந்த காடு ஆகியவற்றில் கிட்டத்தட்ட 45 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

இப்படத்தின் கதாநாயகி சாக்ஷி அகர்வால் அத்தனை நாட்கள் அந்த காட்டுப்பகுதியில் தங்கியிருந்து படப்பிடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கலந்துகொண்டு நடித்தது பாராட்டுக்குரியது.

அதுமட்டுமல்ல இதுவரை நகைச்சுவை நடிகையாக பார்த்து வந்த மதுமிதா இந்த படத்தில் தனது வேறொரு நடிப்பு முகத்தைக் காட்டியுள்ளார்.

படத்தின் இரண்டு நாயகர்களும் கூட மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் ரன்வீர் குமார் மும்பையை சேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதால் எங்களுக்கு இன்னும் வசதியாக இருந்தது.

படத்தின் கதையே இந்த நால்வரை சுற்றித்தான் பின்னப்பட்டுள்ளது..

இந்த நான்கு பேரில் ஒருவர்தான் ஓநாய் மனிதராக மாறுகிறார்.. அது யார் ? எதற்காக ஓநாய் மனிதராக மாறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை
.
மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் குட்ஹோப் பிக்சர்ஸ் சார்பாக D கோகுல கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். படத்திற்கான எல்லா தேவைகளையும் தயாரிப்பாளர் வசதியாக செய்துகொடுத்தது படம் மிகச் சிறப்பாக வர உதவியது.

வனப் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திகில் அனுபவம் கிடைத்தது.

திருவனந்தபுரம் காட்டுப்பகுதிகளில் எப்போதுமே காலை பத்து மணிக்கு வெயில் வரும் வரை காட்டெருமைகள் சுற்றிக்கொண்டே இருக்கும். அவைகள் அங்கிருந்து சென்ற பின்னரே எங்களால் படப்பிடிப்பை நடத்த முடிந்தது.

அதுமட்டுமல்ல இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக டம்மியாக ஓநாய் உருவத்தில் பொம்மைகள் செய்து வைத்திருந்தோம். அப்படி ஒரு பொம்மையை வைத்து விட்டு மறைவாக நின்று படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது எங்கிருந்தோ திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் அங்கே படையெடுத்து வந்து அந்த ஓநாய் பொம்மையை இழுத்துச்சென்று கடித்து குதறி சின்னாபின்னப் படுத்தி விட்டன.

அதற்கு முன்னதாக அவைகள் ஓநாய் என்கிற மிருகத்தை அந்த காட்டிலே பார்த்தது இல்லை என்பதுதான் இதற்குக் காரணம்.

அதனால் அடுத்த நாளிலிருந்து விகாரமான பயமுறுத்தும் தோற்றம் கொண்ட சோளக்கொல்லை பொம்மை கொன்றை மரத்தில் கட்டி வைத்து விட்டு அதன்பின் ஓநாய் பொம்மையை வைத்து படப்பிடிப்பு நடத்தியபோது குரங்குகளின் தொல்லை ஏற்படவில்லை. எங்களது இந்த டெக்னிக்கை பார்த்து வன அதிகாரிகளே வியந்துபோய் பாராட்டினார்கள்” என்று கூறியுள்ளார் இயக்குநர் ரங்கா புவனேஷ்வர்.

நடிகர்கள் ; சாக்ஷிஅகர்வால், விது பாலாஜி,
மதுமிதா, ரன்வீர் குமார்,

தொழில்நுட்பக் கலைஞர்கள்

தயாரிப்பு ; குட்ஹோப் பிக்சர்ஸ் D. கோகுல கிருஷ்ணன்.

இயக்கம் ; ரங்கா புவனேஷ்வர்

ஒளிப்பதிவு ; ரமேஷ் ஜி

இசை ; அன்வர் கான் தாரிக்

படத்தொகுப்பு ; சியான்

ஆக்சன் ; மாஃபியா சசி

மக்கள் தொடர்பு ;
A. ஜான்