புதுச்சேரி கள நிலவரம்: 8 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

0
197

புதுச்சேரி கள நிலவரம்: 8 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தின் வழக்கட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மூன்று கட்டங்களாக வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 30 தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. அதில் புதுச்சேரி பிராந்தியத்தில் 23 தொகுதிகளும், காரைக்கால் பிராந்தியத்தில் 5 தொகுதிகளும், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் தலா ஒரு தொகுதிகளும் உள்ளடக்கி உள்ளன.

2021 தேர்தலை நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (என்.ஆர்.காங்கிரஸ்), பாஜக மற்றும் அதிமுக ஒரு கூட்டணியாகவும் அகில இந்திய காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றொரு கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்தித்தன.

இந்நிலையில் 30 தொகுதிகளில் முதற்கட்டமாக மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜ் நகர், இலாசுப்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, மாஹே மற்றும் ஏனாம் ஆகிய 12 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது.

இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக ஒரு தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

புதுச்சேரியில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற அரசியல் கட்சிகள் மொத்தம் 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள 18 தொகுதிகளில் 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணி பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணி மாலை 6 முதல் இரவு 11 மணி வரை நடைபெற உள்ளது.