வெள்ள பாதிப்புக்கு நிதி: பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

0
158

வெள்ள பாதிப்புக்கு நிதி: பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வேண்டும் என்று மத்திய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இதற்கிடையே, மத்தியக் குழுவும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு டெல்லி சென்றிருக்கிறது. இன்னும் ஒரு சில திட்டங்கள் இந்த மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 தென்மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது.

இந்த நிலையில், நேற்று கோவையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றிருந்தார். ஏற்கனவே, அவர் மழை வெள்ள நிவாரண நிதி சம்பந்தமாக பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தார்.

கோவையில் இருந்தபோது, அதற்கான அனுமதி கிடைத்ததால், அங்கிருந்தே விமானம் மூலம் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், அங்கிருந்தபடி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக பேசி, மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதேபோல், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடனும் மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

சந்திப்பின்போது, மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்கிறார். மேலும், தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் இடைக்கால நிவாரண நிதி கோருவதுடன் மத்திய குழுவையும் பார்வையிட அனுப்பிவைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடியை வலியுறுத்த இருக்கிறார்.

முன்னதாக மாலை 3 மணிக்கு ‘இந்தியா’ கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.