“உதயநிதி நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல” : அடிமைக் கும்பலின் கதறலுக்கு பூச்சி முருகன் பதிலடி!

0
150

“உதயநிதி நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல” : அடிமைக் கும்பலின் கதறலுக்கு பூச்சி முருகன் பதிலடி!

மண் புழுவாய் தவழ்ந்து, மேஜைக்கு கீழ் பர்பி தேடி, பதவியை வாங்கிவிட்டு பின்னர் முதுகில் குத்திய துரோகியும் அல்ல, உதயநிதி என்பவர் இன்றைய மற்றும் எதிர்கால தமிழின இளைஞர்களின் நம்பிக்கை என தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் பூச்சி எஸ். முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பூச்சி எஸ். முருகன் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:-

“கடந்த சில நாட்களாக சங்கி மற்றும் அடிமைக் கும்பலின் கதறல் அதிகமாக இருக்கிறது. என்னடா என்று காது கொடுத்து கேட்டால், வழக்கமான அதே எரிச்சல் பேச்சுதான். இத்தனை ஆண்டுகளாக தி.மு.கவின் மேல் அவர்கள் காட்டி வந்த அதே வன்மமும், அறியாமையும் கலந்த பேச்சுதான். உதயநிதி ஸ்டாலினுக்கு எப்படி முக்கியத்துவம் தரலாம்? என்பது.

இந்த இடத்தில் அவர்களுக்குப் புரியும்படி நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஓ.பி.எஸ் மகன் 39 வயதில் எம்.பி, சசிகலாவின் அக்கா மகன் 38 வயதில் எம்.பி, இதையெல்லாம் விட ஜெயக்குமாரின் மகன் 27 வயதில் எம்.பி, இவர்களுக்கெல்லாம் என்ன தகுதி இருந்தது வாரிசு என்பதை தவிர…

ஆனால், எங்கள் தளபதியின் மகன் கழகப் பணிகளுக்கு பின் 42 வயதில் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் அமோகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டப்பேரவையில் நுழைந்தது எந்த விதத்தில் தவறு?

இப்படி வழக்கம்போல், பொய்யும் புரட்டும் கலந்து அவதூறு பரப்புவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். உதயநிதி என்பவர் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல.

மண் புழுவாய் தவழ்ந்து, மேஜைக்கு கீழ் பர்பி தேடி, பதவியை வாங்கிவிட்டு பின்னர் முதுகில் குத்திய துரோகியும் அல்ல, உதயநிதி என்பவர் இன்றைய மற்றும் எதிர்கால தமிழின இளைஞர்களின் நம்பிக்கை. எங்கள் கழக நம்பிக்கை சுடரொளி அவர்.

ஒற்றை செங்கல்லால் மத்தியில் ஆளும் மக்கள் விரோத கட்சிக்கும், மாநிலத்தில் அதற்கு கூழை கும்பிடு போட்ட கட்சிக்கும் மரண அடி கொடுத்தவர்.

சட்டசபையில் அவர் ஆற்றிய உரை ஒன்றே போதும் எங்கள் இளைய தளபதியாக அவர் மாறி விட்டார் என்பதற்கு.

சட்டமன்ற உறுப்பினராக அவர் ஆற்றும் பணிகள் மற்ற உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

பள்ளிப்பருவம் முதல் பகுத்தறிவு உணர்வு பெற்று, கல்லூரி நாட்களிலிருந்தே கழகப் பணிகளில் ஈடுபட்டு, முத்தமிழ் அறிஞர், தளபதி என 2 பாசறைகளில் அரசியல் பாடம் படித்தவர். நீங்கள் தாக்க தாக்க தான் அதை உரமாக்கி மென்மேலும் வளர்வார். காரணம் அது அவர் தாத்தாவின் ரத்தத்தில் இருந்து வந்தது.

இனியும் இதுபோன்ற பொய்களைப் பேசாமல் நேரடி அரசியல் செய்ய முடிந்தால் வாருங்கள் பேசலாம். அது எப்படி முடியும் உங்களால்?

எங்கள் முத்தமிழ் அறிஞர் காலந்தொட்டே உங்கள் அரசியல் பாணி இதுதானே. கவலையில்லை, நீங்கள் எத்தனை எத்தனை அவதூறு பரப்பினாலும் அதற்கு பதிலடி கொடுத்துக்கொண்டே இருப்போம். காரணம் நாங்கள் பெரியாரின் பேரன்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.