டைனோசர்ஸ் (Die No Sirs) விமர்சனம் : டைனோசர்ஸ் ரவுடிகளின் சாம்ராஜ்ஜியத்தில் புதிய கோணத்தில் விறுவிறுப்பான திருப்பங்களுடன் அத்தி பூத்தார் போல் மணம் வீசும் புத்தம் புது வசந்தம் | ரேட்டிங்: 4/5

0
698

டைனோசர்ஸ் (Die No Sirs) விமர்சனம் : டைனோசர்ஸ் ரவுடிகளின் சாம்ராஜ்ஜியத்தில் புதிய கோணத்தில் விறுவிறுப்பான திருப்பங்களுடன் அத்தி பூத்தார் போல் மணம் வீசும் புத்தம் புது வசந்தம் | ரேட்டிங்: 4/5

கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிட டைனோசர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.ஆர்.மாதவன்.

இதில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் ப்ரியா தேவா, மனேக்ஷா, ஜானகி, அருண், அருள் பாலாஜி, கவின் ஜெய்பாபு உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்திருக்கும் திரைப்படம் டைனோசர்ஸ்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-போபோ சசி , ஒளிப்பதிவு -ஜோன்ஸ் வி ஆனந்த், எடிட்டிங்-கலைவாணன், சண்டை-ஸ்டன்னர் சாம், பாடல்கள்-எம்.ஆர்.மாதவன், கலை-வலம்புரிநாதன், ஒப்பனை-தசரதன், நடனம்-தஸ்தா, த யாரிப்பு மேற்பார்வை-சஞ்சய் கிருஷ்ணன், தயாரிப்பு நிர்வாகி-கோகுல் ராம், பிஆர்ஒ-சதீஷ் ஏய்ம்.

சின்னகுழந்தையின் (ஜானகி) மகன்கள் தனா(ரிஷி) மற்றும் ஆற்றல்மண் (உதய்கார்த்திக்). தையல் தொழில் செய்யும் தனாவின் உயிர் நண்பன் துரை(மாறா) ரவுடி சாலையாரின் (மானேக்ஷா) அடியாள். சாலையாரும், கிளியப்பனும்(கவன் ஜெய் பாபு) இரண்டு கும்பலின் தலைவர்கள் என்பதால் பகை எப்போழுதும் இருக்கிறது. கிளியப்பனின் தங்கை கணவரை சாலையாரின் அடியாட்களுடன் சேர்ந்து துரை கொலை செய்கின்றான். இந்த கொலை நடந்து பல மாதங்களுக்கு பிறகு தனா நண்பன் துரைக்கு திருமணம் செய்து வைக்க அதன் பின்னர் ரவுடிஸத்தை விட்டு விட்டு சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்கிறான் துரை.இதனிடையே போலீஸ் கெடுபிடியால் சாலையாரிடம் கொலை செய்த எட்டு பேரை சரணடைய சொல்கின்றனர். வேறு வழியில்லாமல் சாலையார் எட்டு பேரையும் சரணடைய சொல்ல, அதற்கு திருமணம் செய்த காரணத்தால் துரை மறுக்கிறான். இதை கேள்விப்படும் தனா, நண்பன் துரையை காப்பாற்ற ஆள் மாறாட்டம் செய்து ஜெயிலுக்கு செல்கிறான். நண்பன் துரையை பார்த்துக் கொள்ளுமாறு தனா தன் தம்பி மண்ணுவிடம் சொல்கிறான். இந்நிலையில் கிளியப்பன் சாலையாரிடம் சமரசம் பேசி தர வேண்டிய வசூல் பணத்தை எடுத்துச் செல்லுமாறு கூற துரையும் கூட்டாளிகளும் அங்கு செல்கின்றனர். முதலில் கிளியப்பனுக்கு துரை யார் என்று தெரியாமல் இருக்க, பின்னர் துரை தான் தன் தங்கை கணவரின் சாவிற்கு காரணம் என்பதை தெரிந்து கொள்கிறான். அதன் பின்னர் துரையை கிளியப்பன் பழி வாங்கிறான், அதற்கு மண்ணுவும் ஒரு மறைமுக காரணமாக அமைந்து விடுகிறான். இறுதியில் துரை கொல்ல காரணமாக இருந்தவர்களை மண்ணு கண்டுபிடித்தானா? அவர்களை பழிக்கு பழி வாங்கினானா? கொலை செய்யாமல் அதை எப்படி சாமர்த்தியமாக செய்தான்? என்ன தண்டனை கொடுத்தான்? என்பதே க்ளைமேக்ஸ்.

ஆற்றல் மண் கதாபாத்திரத்தில் உதய் கார்த்திக் எதற்கும் அசராத குணம் கொண்டு எந்த ஒரு குற்ற பின்னணியிலும் சிக்காமல் பார்த்துக் கொள்ளும் திறனுடன் வலம் வரும் நக்கல் நய்யாண்டி செய்யும் குறும்புக்கார இளைஞனாக சிறப்பாக செய்துள்ளார். முதலில் சாதாரணமாக தோன்றினாலும், காட்சிகள் நகர படத்தில் நடை, உடை, பேச்சு, சண்டை, குத்தாட்டம் என்று நடிப்பில் விஸ்வரூபமெடுத்துள்ளார். சாலையாரை பழி வாங்க எடுக்கும் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செயல்படுத்தும் போது காமெடியில் அசத்தியுள்ளார். இவர் இந்தப் படம் போல் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் வருங்காலத்தில் நல்லதொரு இடத்தை நிச்சயம் பிடிப்பார்.

அட்டு ரிஷி நட்பை உயிராக மதிக்கும் தனாவாக தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

அடியாள் துரையாக மாறா படத்தில் சைலன்ட்டாக தோன்றினாலும் வைலன்ட்டாக இன்டர்வெல் பிளாக்கில் திருப்பத்தை தரும் போது கை தட்டல் பெறுகிறார். நண்பனின் பாசத்திற்காக நல்லவனாக மாற நினைக்கும் நேரத்தில் கிளியப்பன் இடத்திற்கு சென்று மாட்டிக் கொண்டதை சாதுர்யமாக கண்டுபிடித்து தப்பிக்க நினைக்கும் போது நேரும் நெருக்கடி, அதிலிருந்து தப்பிக்க முடியாவிட்டாலும் உயிர் விடும் வேளையில் விடுக்கும் சவால் என்று தைரியம் மிக்க அடியாளாக வாழ்ந்துள்ளார். முதல் பாதி வரை தான் இவரின் கதாபாத்திரம் வந்தாலும், அதன் பின்னர் வரும் காட்சிகளில் இவர் இருப்பது போன்ற பிரம்மயை ஏற்படுத்தி விடுவதில் மாறா வெற்றி பெற்று விடுகிறார். வெல்டன்.

காதலியாக தீபா அழகு பதுமையாக சாய் ப்ரியா தேவா வந்து போகிறார்.

வில்லத்தனத்தில் மனேக்ஷா, கவின் ஜெய்பாபு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர். இதில் குறிப்பாக மனேக்ஷா கண்களை சொருகிக் கொண்டு பார்க்கும் பார்வை மற்றும் பேசும் வசனங்கள் அச்சத்தை ஏற்படுத்துவதோடு, மிரட்டலும்ஆக்ரோஷம் நிறைந்த வில்லனாக படத்தில் அதகளம் பண்ணி தூள் பரத்துகிறார். கவின் ஜெய்பாபு கிளியப்பனாக வீட்டிலேயே துரையை பிளான் போட்டு தூக்க நினைக்கும் அமைதியான, ஆனால் அதட்டல், உருட்டலுடன் மிகையில்லா நடிப்பு கச்சிதம்.

தாயாக ஜானகி இறுதிக்காட்சியில் தெறிக்கும் வசனம் அசத்தல். மற்றும் அருண், அருள் பாலாஜி உள்ளிட்ட பலர் படத்தில் தெரியாத முகங்கள் என்றாலும் நடிப்பில் அறிந்த முகங்களாக முன்னிறுத்தி வெற்றிக்கு வழி வகை செய்துள்ளனர்.

பாடல்களில் போபோ சசியின் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

ஜோன்ஸ் வி ஆனந்த் பஸ்ஸில் ஆரம்பிக்கும் பயணம் தொடர்ச்சியாக தன் காட்சிக்கோணங்களால் இறுதி வரை விறுவிறுப்புடன் கொடுத்து வட சென்னையை வேறு கோணத்தில் பிரதிபலித்து ரத்தம்தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகளில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார்.

எடிட்டிங்-கலைவாணன் இடைவேளைக்குப் பிறகு வரும் நகைச்சுவையை கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம். மற்றபடி சூப்பராக கொடுத்துள்ளார். சண்டை-ஸ்டன்னர் சாம் ஆக்ஷன் காட்சிகளில் பரபரப்புடன் அமைத்துள்ளார்.

டைனாசர்ஸ் என்பது கதாநாயகனின் செல்லப்பெயர்.மற்றபடி டைனாசர்ஸ் ரவுடிகளின் பிடியில் சிக்காமல் சம்பவம் செய்யாமல் தப்பிக்க நினைக்கும் ஒரு சாதாராண இளைஞனின் அசாதாரண நோக்கமான உண்மைக்கும் உயிர் இருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளார் இயக்குனர் எம்.ஆர்.மாதவன். நல்ல புதுமுக கதாபாத்திர தேர்வு, நெத்தியடி வசனம், தேர்ந்த திரைக்கதை, அதிரடி ஆக்ஷன், காதல், நட்பு என்று அனைத்தும் மாஸாக  கிளாஸாக நகைச்சுவையுடன் கலந்து ரவுடியாக இறக்க விரும்பவில்லை நல்லவனாக வாழ நினைக்கிறேன் என்ற நல்ல நோக்கத்துடன் கொடுத்து வெற்றி வாகை சூடியுள்ளார் இயக்குனர் எம்.ஆர்.மாதவன்.

மொத்தத்தில் கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிட டைனோசர்ஸ் ரவுடிகளின் சாம்ராஜ்ஜியத்தில் புதிய கோணத்தில் விறுவிறுப்பான திருப்பங்களுடன் அத்தி பூத்தார் போல் மணம் வீசும் புத்தம் புது வசந்தம்.