எனக்கு என்டே கிடையாது திரைப்பட விமர்சனம் : எனக்கு என்டே கிடையாது மெய்சிலிர்க்கும் அனுபவத்தை கொடுக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
321

எனக்கு என்டே கிடையாது திரைப்பட விமர்சனம் : எனக்கு என்டே கிடையாது மெய்சிலிர்க்கும் அனுபவத்தை கொடுக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

ஹங்கிரி வுல்ஃப் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் புரொடக்ஷன்ஸ் எல் எல் பி பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘எனக்கு என்டே  கிடையாது’.

இதில் விக்ரம் ரமேஷ், கார்த்திக் வெங்கட்ராமன், ஸ்வயம் சித்தா, சிவக்குமார் ராஜு, முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கலாச்சரண் இசையமைத்திருக்கிறார். எடிட்டிங்-முரண்வேல், சண்டை- ஒம் சிவபிரகாஷ்,  இந்தத் திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் எனும் பட நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் ஜெனிஷ் வெளியிடுகிறார். மக்கள் தொடர்பு ஏ.ஜான்.

ஒரு நள்ளிரவு நேரத்தில் கால் டாக்சி ஓட்டுநர் சேகர் இளமையும் வசீகர அழகும் நிறைந்த தொழிலதிபர் ஊர்வசியை; பாரிலிருந்து பிக்கப் செய்து அவரது இல்லத்தில் ட்ராப் செய்வதற்காக செல்கிறார். இந்த இடைப்பட்ட பயணத்தில் ஒருவருக்கொருவர் பொதுவான அறிமுக உரையாடலுடன் மகிழ்ச்சியாக தொடர்கிறது. சேகரின் அன்றைய கடைசி சவாரி என்பதால், டாக்ஸி வீட்டின் வாசலில் நின்றதும், ஊர்வசி காரிலிருந்து இறங்கி தன்னுடன் மது அருந்த வருமாறு சேகரை அழைக்கிறாள். முதலில் சேகர் திகைத்து மறுக்க தன் கணவன் வெளியூர் சென்றிருப்பதாக ஊர்வசி கூற பின்னர் மனம் மாறி சேகரின் மனதில் மது அருந்தும் ஆசை பெருக இதற்கு சம்மதிக்கிறான். ஊர்வசி சேகரை ஹாலில் அமர வைத்து விட்டு ஆடையை மாற்ற செல்கிறாள். பின் கவர்ச்சியான ஆடையில் ஊர்வசியை காணும் போது மெய் மறந்து போகிறான். சேகரும் ஊர்வசியும் சேர்ந்து டகீலா  மதுபானம் அருந்தும் போது போதை தலைக்கேற அனைவரும் எதிர்பார்த்த சம்பவம் நடக்கிறது. போதை தெளிந்ததும் கிளம்ப தயாராகும் போது சேகர் தற்செயலாக இன்னொரு அறையில் ஒரு 60 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலத்தைக் காண்கிறான். பயத்தில் உறைந்து போன சேகர் இந்த மோசமான அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், எதிர்பாராத விதமாக ஊர்வசியும் அவன் கண் முன்னே இறந்து விடுகிறாள். வீடு செக்யூரிட்டி லாக் சிஸ்டம் ஊர்வசிக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவனால் வீட்டிலிருந்து வெளியேர முடியவில்லை. அவனுடைய பேராசையால் வசமாக மாட்டிக் கொண்டதை அறிந்து அதிர்ச்சியில் இருக்கிறான். ஒரு மணி நேரம் கழித்து டேவிட் என்கிற திருடன் ஒருவன் வீட்டிற்குள் நுழைகிறான்.  அடுத்து  மஸ்தான் என்கிற அரசியல்வாதியும் ஊர்வசியை காண அந்த வீட்டிற்குள் நுழைகிறான். சேகர், டேவிட், மஸ்தான் ஆகிய மூன்று பேருக்கு இடையே ஒரு சிறிய போராட்டம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அந்த வீட்டுக்குள் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களும் அன்றைய அந்த இரவு அவர்களுடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது. அதன் பின்; எதிர்பாராத சம்பவங்களால் 4 பேர் இறக்கிறார்கள். முதலில் ஊர்வசிக்கு அந்த இறந்து கிடந்த நபருக்கும் என்ன சம்மந்தம்? ஊர்வசி இறக்க காரணம் என்ன? செக்யூரிட்டி லாக் சிஸ்டம் உள்ள வீட்டுக்குள் திருடன், அரசியல்வாதியும் எப்படி உள்ளே நுழைந்தார்கள்? எதற்காக? இவர்கள் எதிர்பாராத ஒருத்தர் அங்கே வர அவர் யார்? அந்த இரவில் நடந்த சம்பவங்களால் ஏன் 4 பேர் இறக்கின்றனர்? இவர்களில் சேகர் மட்டும் எப்படி உயிர் பிழைத்தான்? போலீஸ் விசாரணைக்கு பின் சேகர் விடுதலை செய்யப்பட்டானா? என பல கேள்விக்குறிகளுக்கு எனக்கு என்டே கிடையாது படம் பதில் சொல்லும்.

கால் டாக்சி டிரைவராக விக்ரம் ரமேஷ் கதையின் நாயகனாகவும் படத்தின் இயக்குனராகவும் களமிறங்கியிருக்கிறார். முதலில் சாதரரணமாக தொடங்கும் டாக்சி பயணம் தன் சபலத்தால் எவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பதை தன் யதார்த்தமான நடிப்பில் அதனை ஏற்படுத்தியுள்ளார்.இறுதியில் ஒரு ட்விஸ்ட்டையும் கொடுத்துள்ளார்.

பெண் தொழில் அதிபர் ஊர்வசியாக ஸ்வயம் சித்தா தன் காந்த கண்களாலும் கவர்ச்சியாலும் இளவட்டங்களை சுண்டி ஈழுத்தாலும் தன் கஷ்டத்தையும் அவரின் இயலாமையும், மனஉளைச்சலும் தெரியும் போது பரிதாபமே ஏற்படுகிறது.

டேவிட் கதாபாத்திரத்தில் திருடனாக கார்த்திக் வெங்கட்ராமன் சமயம் பார்த்து பணத்தை கொள்ளையடிக்க உள்ளே வந்து பின்னர் அங்கு பார்க்கும் கொலைகளை கண்டு அதிர்ச்சியாகி தப்பிக்க முடியாமல் தவிக்கும் தவிப்பை அனுபவ நடிகர் போல் தன் நடிப்பால் தடம் பதித்துள்ளார்.

மற்றும் மஸ்தான் கதாபாத்திரத்தில் சிவகுமார் ராஜு இவரின் அளப்பரையும், அதற்கு பின் நடக்கும் போராட்டமும் தான் கதையை முன்னெடுத்து செல்கிறது என்பதால் படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளார். தேவராஜ் கதாபாத்திரத்தில் முரளி சீனிவாசன், போலீஸ் அதிகாரியாக சக்திவேல் மற்றும் அனைத்து இணை, துணை கதாபாத்திரங்கள் திரைக்கதையை விறுவிறுப்பாக நகர உதவியுள்ளனர்.

டாக்சி பயணம், ஒரே வீட்டினுள் நடக்கும் சம்பவங்கள் அதை நேர்த்தியாக தன் காட்சிக்கோணங்களில் விறுவிறுப்பையும், தெளிவையும் ஒரு சேர கொடுத்து அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம்.

ஓம் சிவபிரகாஷின் ஸ்டண்ட் கோரியோகிராபி ஒரே இடத்தில் நடப்பதை தத்ரூபமாக கொடுத்துள்ளார். பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைத்து அடுத்தது என்ன நடக்கும் என்பதை பதட்டத்துடன் கொடுத்திருக்கிறது முகன்வேலின் எடிட்டிங். கலாசரணின் இசையும் பின்னணி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பிரத்யேகமாக முக்கிய பங்கு வகிக்கும் மாடர்ன் லாக் சிஸ்டத்துடன் கூடிய வீட்டை வடிவமைத்திருக்கும் கலைஇயக்குனர் சூர்யாவிற்கு பாராட்டுக்கள்.

ஒரு டாக்சி ஒட்டுனர் எதார்த்தமாக சந்திக்கும் பெண் பயணியால் தனக்கு ஏற்படும் சிரமங்கள், பிரச்சனைகள் அதனால் எதிர்பாராமல் நடக்கும் கொலைகள், போலீஸ் விசாரணை என்று இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு வெற்றிகரமாக விடுபட்டார் என்பதைக் சொல்லும் கதைக்களத்தை ஒரே வீட்டில் ஒரே இரவில் நடப்பதை விறுவிறுப்பாகவும், இந்தப் படத்தில் நடக்கும் கொலைகள் எதிர்பாராமல் நடப்பதை வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கும் விதமும் படத்தின் திருப்பங்களையும் நன்றாக கையாண்டு ஒரு த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்து புது முகங்களை அறிமுகம் செய்து அசால்டாக இயக்கியுள்ளார் இயக்குனர் விக்ரம் ரமேஷ்.

மொத்தத்தில் ஹங்கிரி வுல்ஃப் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் புரொடக்ஷன்ஸ் எல் எல் பி என்ற பட நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள எனக்கு என்டே கிடையாது  – புது முகங்கள், நேர்த்தியான தொழில் நுட்ப கலைஞர்கள் பங்களிப்புடன் மெய்சிலிர்க்கும் அனுபவத்தை கொடுக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் த்ரில்லர்.