1000 திரையரங்குகளில் ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் ‘ஆளவந்தான்’ – டிசம்பர் 8-ம் தேதி ரீ-ரிலீஸ்!

0
172

1000 திரையரங்குகளில் ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் ‘ஆளவந்தான்’ – டிசம்பர் 8-ம் தேதி ரீ-ரிலீஸ்!

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியானத் திரைப்படம் ‘ஆளவந்தான்’. படம் வெளியான சமயத்தில் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்று இருந்தது. தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ இந்தப் படத்தைத் தயாரித்து இருந்தது.இந்த நிலையில், இந்தப் படம் மீண்டும் டிஜிட்டல் வெர்ஷனில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஆளவந்தான்’ திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த படத்தை வரும் டிசம்பர் 8-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்வதாக கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் எஹெசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் பிரம்மாண்டமாகவும் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்பதால் படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள், வெளிநாட்டிலிருந்து கருவிகள் கொண்டுவரப்பட்டு படமாக்கியிருப்பார்கள். அனிமேஷன் காட்சிகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று இந்திய சினிமாவில் தனித்துவமான முயற்சியில் இறங்கி பார்வையாளர்களுக்கு வித்யாசமான மற்றும் பிரம்மாண்டமான உணர்வை கொடுப்பதற்காக படக்குழு இறங்கியது.

கமல்ஹாசன் எழுதிய ‘தாயம்’ என்ற கதையை மையமாகக் கொண்டு, அவரே நாயகனாகவும், வில்லனாகவும் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் நடிப்பில் மிரட்டியிருப்பார். உளவியல் சிக்கலைப்பேசும் இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு நவ. 15-ம் தேதி வெளியானது. படம் வெளியாகி 22 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில், “எழிலோடும்.. பொழிலோடும்.. ‘ஆளவந்தான்’ விரைவில் வெள்ளித்திரையில்.” என பதிவிட்டிருந்தார்.

அந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் விதமாக, புதிய போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். அதில், படம் டிசம்பர் 8-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பகிர்ந்துள்ள போஸ்டரில் உலகமெங்கும் 1000 திரையரங்குகளில் படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.