விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

0
180

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

‘யதார்த்த நாயகன்’ நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார். பின்னணியிசைக்கும் முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்காக ‘வலிமை’ படப் புகழ் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார். ‘டான்’ பட புகழ் நாகூரான் ராமச்சந்திரன் பட தொகுப்பு பணிகளை கையாள, பிரமிப்பை உண்டாக்கும் சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்கிறார். ஒப்பனைக்காக தேசிய விருதுப்பெற்ற மூத்த கலைஞர் ‘பட்டணம்’ ரஷீத் இந்த படத்தில் சிறப்பு ஒப்பனைக்காக பிரத்யேகமாக பணியாற்றுகிறார். படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் வில்லன் நடிகருக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய அளவிலான ( PAN INDIA ) திரைப்படங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரிடப்படாத முதல் படைப்பின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட குழுவினருடன் நந்தகுமார் ஐ ஏ எஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம், ராம்நாத் பழனிக்குமார்  ‘டோரா’ தாஸ் ராமசாமி, ‘நெருப்பு டா’ அசோக்குமார், ‘மஞ்சப்பை’  என். ராகவன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவ்விழாவில் www.greenativefilms.com என்ற இந்த குழுமத்தின்  திரைப்படப்பிரிவிற்கென பிரத்யேக இணையத்தள சேவையும் தொடங்கப்பட்டது.

தமிழில் தயாராகும் காவல்துறையினரின் புலனாய்வு விசாரணை பாணியிலான  சைக்கோ திரில்லர் திரைப்படம் இது என்பதால், தொடக்க விழாவின்போதே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.