சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்க ஆதரவு கிடைப்பதில்லை: சமுத்திரகனி ஆதங்கம்

0
183

சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்க ஆதரவு கிடைப்பதில்லை:
சமுத்திரகனி ஆதங்கம்

இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார்.

விழாவில் படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர், நடிகர்கள் ‘பருத்திவீரன்’ சரவணன், சமுத்திரகனி, நடிகைகள் சாக்ஷி அகர்வால், இனியா, குழந்தை நட்சத்திரம் டயானாஸ்ரீ , தயாரிப்பாளர் பி. டி .செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சமுத்திரகனி பேசுகையில்,

” இயக்குநர் எஸ்ஏசி இந்த வயதிலும் இளமைத் துடிப்புடன் பணியாற்றுவதைப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படும். உங்களைப் போன்றவர்களைப் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வது எங்களது கடமை. இதற்காகத்தான் நீங்கள் அழைத்தவுடன் உடனடியாக ஓடோடி வந்தேன். படப்பிடிப்பு தளத்தில் எனக்கும் நடிப்பு சொல்லித் தந்திருக்கிறார். காலையில் வேலை செய்யத் தொடங்கி அன்று இரவு வரை உற்சாகம் குறையாமல் பணியாற்றுவார். அவருடன் பணியாற்றிய நாட்கள் மகிழ்ச்சியானவை.

படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிடுமாறு நான் பரிந்துரை செய்தது உண்மைதான். ஏனெனில் திரையரங்குகளில் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறிய பட்ஜெட் படங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ‘அப்பா’ என்றொரு படத்தை நான் தயாரித்து இயக்கி வெளியிட்டேன். அந்தப் படம் வெளியாகி நான்கு நாட்களுக்குள் பெரிய படம் ஒன்று வெளியாகிறது என்று சொல்லி என் படத்தைத் திரையரங்கிலிருந்து எடுத்து விட்டனர். இதுபோன்ற படங்களுக்கு மக்கள் முதல் நாளில் வரமாட்டார்கள். மக்களால் பேசப்பட்டு.. பேசப்பட்டு… பிறகுதான் திரையரங்கிற்கு வருவார்கள். பத்து நாளுக்குப் பிறகுதான் இது போன்ற படங்களுக்கு வசூல் அதிகரிக்கும்.

‘வினோதய சித்தம்’ என்று ஒரு படத்தை இயக்கினேன். அந்தப் படம் டிஜிட்டல் தளத்தில் இருக்கிறது என்று தைரியமாகச் சொல்வேன். ஆனால் திரையரங்கில் வெளியாகி இருந்தால், அந்தப் படத்தை நான் எங்கு சென்று பார்க்க வைப்பது? அதனால்தான் நான் இயக்குநரிடம் டிஜிட்டல் தளத்தில் வெளியிடுமாறு பரிந்துரை செய்தேன். எஸ் ஏ சி சார் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பதில் உறுதியாக இருந்தார். திரையரங்க அனுபவம் என்பது முற்றிலும் வேறு. அதை நானும் அனுபவித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன்.

இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு கிடைக்கக்கூடிய ஆதரவு என்பது மிகவும் குறைந்து விட்டது என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது.

மறைந்த என்னுடைய குருநாதர் கே. பாலச்சந்தர் சாருக்கு வழங்கக்கூடிய அதே மரியாதையையும் அதே அன்பையும் இன்றும் எஸ் ஏ சி சாரிடமும் வைத்திருக்கிறேன்.

தோல்வி அடைந்த என்னை நிமிர வைத்து, மீண்டும் என்னை உற்சாகப்படுத்தி வளரச் செய்தவர் இயக்குநர் அமீர். என்னை டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக்கியதும் அவர்தான். என்னை நடிகராக்கியதும் அவர்தான்.

நாடோடிகள் படம் பார்த்த பிறகு இயக்குநர் கே. பி, என்னிடம் ‘இயக்குநர் அமீரின் தாக்கம் உன்னிடத்தில் நிறைய இருக்கிறது’ என்று குறிப்பிட்டார். என்னுடைய படைப்பில் வன்முறை புகுந்ததற்குக் காரணம் அவர்தான். அதனால் இறுதிவரை அமீர் அண்ணனுக்கு அன்புக்குரிய தம்பியாகத்தான் நான் இருப்பேன்.” என்றார்.