காதலி மீது காதலனுக்கு ஆச்சர்யம் தீருகிற போது காதல் தீர்ந்து போகிறது..! கவிபேரரசு வைரமுத்து..!

0
137

காதலி மீது காதலனுக்கு ஆச்சர்யம் தீருகிற போது காதல் தீர்ந்து போகிறது..! கவிபேரரசு வைரமுத்து..!

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.

புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,

சினிமாவை நேசித்ததால் ஏதோ ஒரு வகையில் நம்மை அது நேசித்துக் கொண்டிருக்கும். அதற்கு உதாரணம், முதலில் இயக்கினேன், தயாரித்தேன், விநியோகித்தேன், இப்போது இந்த வயதில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். அதில், நிறைய பணம் சம்பாதித்திருக்கிறேன். ஆனால், தங்கர் பச்சான் மாதிரி பெயரை சம்பாதிக்கவில்லை. அவர் விவசாயத்தில் மட்டுமல்ல, படத்திலும் கலப்படமில்லாமல் ஆர்கானிக்காகத் தான் படம் எடுப்பேன், நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அவரின் இயக்கத்தில் இந்த வயதில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரே காலகட்டத்தில் ஒரே ஊரில் இருந்து சினிமாவிற்கு நானும் பாரதிராஜாவும் வந்தோம். ஆனால், அவர் முதலில் இயக்குநராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார். விஜயை நடிகராக்க வேண்டும் என்று ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டு சென்றேன். என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்? நீயே பெரிய இயக்குநர் தானே, நீயே இயக்கிக் கொள் என்று மறைமுகமாக மறுத்துவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. என் பையனை அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், அதுவும் நடக்கவில்லை. ஆனால், தங்கர் பச்சான் ஒரே படத்தில் எங்கள் இருவரையும் நண்பர்களாக நடிக்க வைத்துவிட்டார். இவரைப் போலவே கௌதம் மேனனிடமும் ஆல்பத்தை கொண்டு சென்றேன். அவரும் மறுத்துவிட்டார். அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இல்லையென்றால் விஜய் கமர்ஷியல் நாயகனாக ஆகியிருக்கமாட்டார். அதற்காக கடவுளுக்கும் நன்றி என்றார்.

கருமேகங்கள் கலைகின்றன பட வெற்றிக்கு ‘அப்பா’ பாடல் ஒன்றே போதும் .. இயக்குநர் பேரரசு!

இயக்குனர் பேரரசு..

எனக்கு பிடித்த இயக்குநர் தங்கர் பச்சான் அண்ணன் தான். நமக்கு பிடித்த மாதிரி படம் எடுத்து அதை வெற்றிப் படமாக தருவது தான் தங்கர் பச்சானின் சிறப்பு. அதிலும் அவர், கலச்சாரம், பண்பாடு, வாழ்வியல் போன்ற விஷயங்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். அதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். நான் எப்போதும் தமிழை நேசிப்பேன் என்று பிடிவாதமாக இருப்பார். தமிழ் மொழி மீது பற்றுக் கொண்டவர். பொது மக்களுக்கும் குரல் கொடுப்பார், பொதுவெளியிலும் ஆக்ஷனோடு இருப்பவர் தங்கர் பச்சான். சினிமாவிற்கு வந்தோம், இயக்கினோம், சம்பாதித்தோம் என்பது முக்கியமல்ல, முத்திரை பதிக்க வேண்டும். அதற்கு அழகி என்ற ஒரு படமே போதும், தங்கர் பச்சானைப் பற்றி கூறும்.

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நான் வாய்ப்பு தேடி இருக்கிறேன். ஆளுங்கட்சிக்கு எதிராக படம் இயக்கி புரட்சி செய்தவர் தான் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சார். ஆனால், மிகவும் தன்னடக்கமாக இங்கே பேசியிருக்கிறார். இவரைப் போல இயக்குநர் மகேந்திரனும் முத்திரைப் பதித்திருக்கிறார்.

நான் பார்த்து வியந்த இயக்குநர்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார், தங்கர் பச்சான். அதிதி பாலன் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்பட வெற்றிக்கு அப்பா பாடல் ஒன்றே போதும் என்றார்.

ஒரு பார்வையிலேயே அசத்திய அதிதி பாலன்..! நடிகர் டெல்லி கணேஷ்

நடிகர் டெல்லி கணேஷ்..

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அருமையாக பேசிவிட்டார். இதற்கு மேல் நான் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்த விழாவிற்கு தங்கர் பச்சான் என்னை அழைத்தார். இந்த படத்தில் என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இயக்குநர்கள். இவ்வளவு பெரிய ஜாம்பாவான்களின் இடையில் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். மிகவும் கோபக்காரர். தன்னுடைய கருத்தில் இருந்து சிறிதும் மாறமாட்டார். இப்படத்திற்காக பல சிறந்த இடங்களைத் தேடி பிடித்து எடுத்திருக்கிறார்.

அதிதி பாலனுக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன், இப்படத்தில் ஒரு காட்சியில் நான் தப்பு செய்துவிடுவேன், வசனமே இல்லாமல் அதிதி பார்வையிலேயே அர்த்தத்தோடு நடித்திருக்கிறார்.

உன்னை வைத்தே ஒரு படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் இயக்குநர் தங்கர் பச்சான் கூறியிருக்கிறார். அது நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நான் ஒரு சிறிய பாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன், நான் கேமராவை நேசிப்பேன் என்றார்.

தங்கர் பச்சான், எனக்கு மிகவும் பிடித்த வார்த்தையான பண்பாளர் என்று என்னை குறிப்பிட்டிருக்கிறார், நன்றி.. என்றார்.

காதலி மீது காதலனுக்கு ஆச்சர்யம் தீருகிற போது காதல் தீர்ந்து போகிறது..!
கவிபேரரசு வைரமுத்து..!

இதில் வைரமுத்து பேசிதாவது,

தங்கர் பச்சான் தோற்கக்கூடாத கலைஞன், தங்கர் பச்சானை இயக்குநராக மட்டும் அறிவீர்கள். ஆனால், சினிமாவை டிஜிட்டலில் கொண்டு வருவதற்கு முன்பு “காகிதம்” பத்திரிகையில் சிறந்த படைப்புகளை கொடுத்திருக்கிறார். எனது அருமை நண்பர் வீரசக்தி, தயாரிப்பாளர் ஆவதற்கு முன்பு திருச்சியிலிருந்து எனக்கு தோழமை கொண்டவர் வீரசக்தி.

ஒரு படம் தயாரிப்பது துயரமான சம்பவம். ஒரு முட்டையின் மீது பாறாங்கல்லை தூக்கி வைப்பது போல தான் இப்போது சினிமா இருக்கிறது. அருமை நண்பர் ஜி.வி.பிரகாஷ், இளமைக்கு இளமையானவர், முதிர்ச்சிக்கு முதிர்ச்சியானவர், நடிகருக்கு நடிகர், இசையமைப்பாளருக்கு இசையமைப்பாளர்.
இவர் இத்தனையிலும் இந்த போடு போடுகிறாரே.. இசையில் மட்டுமே இருந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இசையமைப்பார்.

இன்று இசை மாறியிருக்கிறது என்று சொல்லுகிறார்கள், மாறியிருப்பது வெறும் ஓசைகளாக, வெறும் அதிர்வலைகளாக, வாத்திய கூத்துகளாக இருந்துவிடக் கூடாது. அவை மனதில் மீட்டப்படுகிற மெல்லிய வீணை என்பதை இப்படத்தின் அத்தனை பாடல்களும் உணர்த்துகின்றன.

எல்லா தலைமுறையிலும் 5 படிகள் இருக்கின்றன. அந்த 5 படிகளுக்கும் ஆட்கள் இருக்கின்றார்கள். வல்லிசைக்கு சிலர், துள்ளிசைக்கு சிலர், மெல்லிசைக்கு சிலர், என்று சமூகம் பிரிந்து கிடக்கின்றது. ஆனால், 3 தலைமுறைக்கும் பாடலாக இப்படத்தின் பாடல்கள் அமைந்துள்ளது.

ஒருவன் பெண் பிள்ளையை தத்தெடுக்கிறார், உறவுகளற்ற உலகத்தில் நீ ஒருத்தி தான் உறவு என்று கொஞ்சுகிறான். அந்த பிள்ளையை பிரிந்துவிட்டால் வாழ்வே அறுந்துவிடும் என்று அஞ்சுகிறான். அப்போது அவர்களுக்கான பாடல், “என்னை விட்டு போய்விடாதே” என்ற பாடல். நான் தங்கர் பச்சனிடம் யார் இந்த பாடலுக்கான நடிகர் என்று கேட்டேன். அந்த தந்தை யார் என்றேன், யோகி பாபு என்றார்கள். அவர் சிகையை மாற்றுவாரா என்றேன். இல்லை என்றார்கள். அதை வைத்து பாடல் வரிகளை இப்படி அமைத்தேன்…

என் பறட்டைத் தலையிலே, சுருட்டைத் முடியிலே கூடு கட்டு குயிலே… காட்டு விட்டு தந்த மயிலே… என் கண்ணனுக்கு ஒளி தந்த வெயிலே. என்று எழுதினினேன் தங்கர் பச்சான் மகிழ்ந்துவிட்டார்.

தங்கர் பச்சானிடம் பிடித்த விஷயம், எதைக் கண்டாலும் ஆச்சரியப்படுவார். ஒரு பூவைப் பார்த்தால் ஆச்சர்யப்படுவார், பறவை பறந்தால் ஆச்சர்யப்படுவார், நீரை டம்ளரில் ஊற்றும் போது நுரை வந்தால், அடடே! நுரை என்று ஆச்சர்யம். காபி ருசியாக இருந்தால் ஒரு ஆச்சர்யம், என்னைப் பார்த்தால் ஆச்சர்யம். எனக்கு அவரைப் பார்த்தால் ஆச்சர்யம்.

ஆச்சர்யம் தீர்ந்துபோகும் போது வாழ்க்கைத் தீர்ந்து போகிறது. எப்போது வாழ்க்கை சலிப்படைக்கிறது தெரியுமா? வாழ்க்கையில் மனைவியின் மீதான ஆச்சர்யம் தீர்ந்துபோகிற போது கணவனுக்கு வாழ்க்கை முடிந்து போகிறது, காதலி மீது காதலனுக்கு ஆச்சர்யம் தீருகிற போது காதல் தீர்ந்து போகிறது, ஒரு தலைவன் மீது தொண்டன் கொண்ட ஆச்சர்யம் தீருகின்ற போது அரசியல் அஸ்தமித்து போகிறது, குழந்தையின் மீது தகப்பனுக்கு ஆச்சர்யம் தீர்ந்துபோனால் குழந்தை வளர்ந்துவிட்டது என்று அர்த்தம்.

ஒரு கலையைப் பார்த்து கலைஞனது ஆச்சர்யம் தீர்ந்து போனால் கலை நீர்த்துப் போய் விடுகிறது. ஆச்சர்யத்தால் உங்கள் வாழ்க்கை பரிணமிக்கும், ஆச்சர்யம் தீர்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் தங்கர் பச்சானைத் தொட்டு சொல்லுகிற செய்தி.

என்னுடைய ஆருயிர் சகோதரர் “இயக்குனர் இமயம்” பாரதிராஜா, சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மேடைக்கு வந்து உங்களையெல்லாம் சந்தித்து மகிழும் வாய்ப்பை இழந்திருக்கிறார்.

ஒரு மனிதன் வாலிப பருவத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கிறான். அதை நினைத்து வாழ்நாள் எல்லாம் குற்றஉணர்வோடு இருப்பதைக் கூறும் படம் தான் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம்.

“கருமேகங்கள் கலைகின்றன” என்ற தலைப்பே ஒரு கவிதை. இந்த தலைப்புக்கு அவர் செய்திருக்கிற நியாயம் அபாரம்.

இப்படத்தை நீங்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும். திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறும் போது வருத்தமாக இருக்கிறது.

ஒரு திரைப்படத்தை, திரையரங்கிற்கு சென்று பார்க்கிற பொழுது தான் திரையரங்கம் பொது மக்களின் கலையாக இருக்கும். வீட்டிலிருந்து ஒரு படம் பார்த்தால் அது அவ்வளவு சுகப்படாது. உங்கள் தனிமையை உறுதி செய்யும் இடத்தில் தான் திரைப்படம் பார்க்கப்படுகிறது. உங்கள் தனிமையால் தான் கலை ரசிக்கப்படுகிறது. உங்கள் கைபேசிக்கு வேலை இல்லாமல் இருக்கும் இடத்தில் தான் கலை அதன் முழுமையான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

வீரசக்தி, தங்கர் பச்சான் மற்றும் இந்த படம் அனைத்தும் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ன பாடலை அர்பணிப்பீர்கள் என்ற கேள்விக்கு, பூங்காற்று திரும்புமா? என்ற பாடல், தங்கர் பச்சானுக்கு ஒன்பது ரூபாய் நோட்டு மாதவனாக வாழ்ந்து பாரு என்ற பாடல், அவர் மாதவனாகத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தங்கமே தமிழுக்கு இல்லை பாடல் ஜி.வி.பிரகாஷுக்கு அளிப்பேன் என்று கூறினார்.

தங்கர் பச்சான், ‘என் உரிமை’ என்று என்னைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். (படக்குழுவினர் அனைவரும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பிறகு தங்கர் பச்சான் வைரமுத்துவை பற்றி பேடும் போது..

மக்களுக்கு கவிதை என்பது திரைப்படங்கள் மூலமாகத்தான் சேர்கிறது. திரைப்படங்கள் இல்லாமல் இருந்திருந்தால் தமிழை விட்டு வெளியேறியிருப்பார்கள். திரைப்பட பாடல்கள் மூலமாகத்தான் தமிழ் நிலைத்துக் கொண்டு இருக்கிறது. கலைவாணர், கண்ணதாசன், வாலி இவர்களுக்குப் பிறகு வைரமுத்து தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பிறகு யார் என்ற கேள்வி வருகிறது. தமிழ்த்தாய் கொடுத்த மிகப்பெரிய செல்வம் அண்ணன் வைரமுத்து அவர்கள். தமிழ் மக்கள் எந்தளவிற்கு வாழ்ந்திருந்தால், திருக்குறள் உருவாகியிருக்கும். திருவள்ளுவனுக்கு முன்பே தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றார்.

அதற்கு வைரமுத்து, வாழையடி வாழையாக தமிழ் மொழி வளரும். அதற்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவர் வருவார். அப்படி ஒருவர் வரும்வரை இந்த வைரமுத்து இருப்பார் என்று பதிலளித்தார்).

மேலும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு தங்கர் பச்சான் ‘தங்க பேனா’ பரிசளித்தார்.

ஜீ.வி.பிரகாஷ் உணர்வுபூர்வமான இசையை இப்படத்தில் கொடுத்திருக்கிறார்..
– இயக்குனர் சுசீந்திரன்!

அதில், இயக்குனர் சுசீந்திரன் பேசியது..

என்னுடைய வெண்ணிலா கபடி குழு படத்தின் முதல் நாளில் என்னிடம் அதிகமாக பேசிய நபர் தங்கர் பச்சான் சார், இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. அவர் எப்போதுமே தரமான படங்களைத் தான் இயக்கியிருக்கிறார். ஆனால், அவருக்கு இன்னும் சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை.

ஜீ.வி.பிரகாஷ் எப்போதுமே உணர்வுபூர்வமான இசையைக் கொடுப்பார். இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். யோகிபாபு நடிக்க வந்த புதிதில்,
யோகிபாபுவின் போட்டோ ஒன்றை பார்த்தேன்.. தனித்தன்மையாக இருந்தார். அவரை ராஜபாட்டை படத்தில் நடிக்க வைத்தேன். வில் அம்பு திரைப்படத்தில் முழு பாத்திரத்தை செய்தார். விளம்பர ரீதியாக சூரியைக் கேட்டோம், அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால், யோகிபாபு நன்றாக நடித்திருக்கிறார் என்றார்கள். இன்று இவரை வைத்து படம் எடுத்தால் வியாபார ரீதியாக வெற்றி பெறும் என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறார். இரவு பகலாக பல படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிதி பாலன் தமிழ் சினிமாவின் சொத்தாகவே மாறியிருக்கிறார்.
பாரதிராஜா சார் நமக்கு கிடைத்த பொக்கிஷம். அவர் இன்னும் 5 படங்கள் இயக்க வேண்டும், 50 திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. என்றார்.

தங்கர் பச்சான் இயக்கதில் ஓர் ஓரத்தில் சிறிய கேரட்டரானாலும் நடிப்பேன்..
தயாரிப்பாளர், நடிகர் பிரமிட் நடராஜன்!

இதில், தயாரிப்பாளர், நடிகர் பிரமிட் நடராஜன் பேசியது..

ஒரு நாள் தங்கர் பச்சான் சார் பேசினார், அழகி என்று ஒரு படம் எடுக்கிறோம். அந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது, அதில் உங்கள் பாத்திரத்தின் பெயர் நடராஜன். அதில் நடித்த எனக்கு மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது.
அதேபோல், சொல்ல மறந்த கதை படத்தில் நடித்தேன்.

இப் படத்தை பார்த்து விட்டு குறைந்தது 100 பேராவது, நாங்களும் மாமனார் வீட்டில் அவமானப்பட்டிருக்கிறோம் என்று எனக்கு போன் செய்து இன்று வரை கூறுகிறார்கள். அதேபோல், அப்பா சாமி படத்திலும் நல்ல கேரக்டர் .

மணி ரத்னம், ரவிக்குமார் அடுத்து தங்கர் பச்சான் மூவரும் எனக்கு மிகப்பெரிய புகழை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இன்று பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் என்னை பார்ப்பவர்கள் எல்லோரும் அழகி படத்திற்காகவும், சொல்ல மறந்த கதைக்காகவும் கிடைக்கும் பாராட்டுகள் என்னை எப்போதும் உற்சாகமாகவே வைத்திருக்கிறது. அவர் படத்தில் ஒரு ஓரத்தில் நிற்கக் கூடிய பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன்.

தங்கர் பச்சான், எனக்கு கொடுத்த எனது போட்டோவில், ‘எனது நலன் விரும்பி’ என்று என்னை குறிப்பிட்டுள்ளார்..என்றார்.

தங்கர் பச்சான் சாருக்காக ‘லியோ’ சூட்டிங் இடைவெளியில் வந்தேன்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

6 மாதங்களுக்கு முன்பு என்னைத் தொடர்பு கொண்டு உன்னை சந்திக்க வேண்டும் என்றார். முகவரி கொடுங்கள் வருகிறேன் என்றேன், ஆனால், நானே வருகிறேன் என்றார். அவரிடம் பேசும்போது தான் இன்னும் பல நேரம் பேச வேண்டும் என்று நினைத்தேன். அப்போது அவரிடம்.. அழகி எனக்கு மிகவும் பிடித்த படம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களைப் பற்றியும் கூறினேன். அவருடைய அனைத்து படங்களையுமே பார்த்திருக்கிறேன்.

அவர் இந்த விழாவிற்கு அழைத்தார், என்னால் மறுக்க முடியவில்லை. ஆகையால், லியோ படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே வந்துவிட்டேன் என்றார்.

இயக்குநர் தங்கர் பச்சான் அவருடைய மண்ணில் விளைந்த முந்திரி பருப்பு மற்றும் பலாப்பழம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொடுத்தார்.

தங்கர் பச்சான் லோகேஷ் கனகராஜை பற்றி பேசும் போது..
இந்திய சினிமாவே திரும்பி பார்க்கக் கூடிய இயக்குநராக இருக்கிறார். வெற்றி மட்டுமல்ல, மென்மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும். இன்று விஜயை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார். நான் அழைத்ததற்காக படப்பிடிப்பை விட்டுவிட்டு வந்திருக்கிறார். நான் வந்திருப்பேனா என்று தெரியாது. அவருக்கு நன்றி என்றார்.