ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி!

0
145

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி!

திரைத்துறையில் அனைத்துத் தொழில்நுட்பமும் அறிந்தவராக, பன்முக திறமையாளராக வலம் வரும் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார்.

கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பல விருதுகளை வென்ற திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், கார்த்தியின் இந்த 25 வது படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

K.E.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் (சூது கவ்வும், காதலும் கடந்து போகும்) புகழ் இயக்குநர் நலன் குமாரசாமியின் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பிலும் ஆகஸ்ட் மாதம் கார்த்தி கலந்துகொள்ளவிருக்கிறார். இடையில், ஜப்பான் படத்தின் கடைசி பாடல் காட்சிக்காக நேரம் ஒதுக்கியுள்ளார். ஜப்பான் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், மேலும் இந்த பிரம்மாண்டமான பாடலை படமாக்க பல கோடி மதிப்பிலான செட் அமைக்கப்படுகிறது.

பாடல் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அக்டோபர் மாதத்திற்குள் நலன் படத்தின் படப்பிடிப்பை முடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளார். இந்த இரண்டு பெரிய படங்களை முடித்த பிறகு, நடிகர் கார்த்தி நவம்பரில் தனது 27வது பட இயக்குனர் பிரேம் குமார் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார். #கார்த்தி27 படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், முன்னணி ஆளுமையான பிசி ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் #கார்த்தி27ஐ தயாரிக்கிறது.

2022 ஆம் ஆண்டில் PS1, விருமன் மற்றும் சர்தார் என மூன்று பிளாக்பஸ்டர்களை தந்ததன் மூலம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார் கார்த்தி. மேலும் 2023 ஆம் ஆண்டை பொன்னியின் செல்வன் 2 எனும் ப்ளாக்பஸ்டர் வெற்றியுடன் துவங்கியுள்ளார். அடுத்ததாக ஜப்பான் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளிவரத் தயாராகி வருகிறது.

கார்த்தி இந்த ஆண்டிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால், தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். படப்பிடிப்புக்கு முன்பாகவே சிறந்த OTT தளங்கள், சாட்டிலைட் சேனல்கள், மியூசிக் லேபிள்கள் மற்றும் முக்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து வியாபார அழைப்பு வரப்பெற்று, லாபகரமான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன.

ப்ரீ ரிலீஸ் பிசினஸ் எனப்படும், பட வெளியீட்டுக்கு முன்பான வியாபாரத்தில் தற்போது நடிகர் கார்த்தியின் படங்கள் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. தொடர்ந்து, தீவிரமாகப் படங்களில் கார்த்தி நடித்து வருவது திரைத்துறையினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.