ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு காலமானார்

0
173

ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு காலமானார்

தமிழில் 90-களில் பிரபல நடிகராக இருந்தவர் தான் சரத் பாபு. ஆந்திராவை சேர்ந்த இவர், 1973-ல் வெளியான ‘இராம இராஜ்ஜியம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். தொடர்ந்து 1977-ல் ‘பட்டின பிரவேசம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக தமிழில் வாய்ப்பு கிடைக்கவே நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், உயிருள்ளவரை என படங்களில் நடித்து வந்தார்.

குறிப்பாக ரஜினியுடன் முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், முத்து, வேலைக்காரன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினியும் இவரும் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர் ரஜினியுடன் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் அண்ணாமலை, முத்து போன்ற படங்கள் இன்றளவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

துணை நடிகராக, கதாநாயகனாக, நண்பனாக, வில்லனாக என நடித்து வந்த இவர், வயது மூப்பின் காரணமாக 2000 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஏனைய படங்களில் தந்தையாக, துணை கதாபாத்திரமாக நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த இவர், அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கில்தான் நடித்துள்ளார்.

பாபி சிம்ஹா நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான ‘வசந்த முல்லை’ படத்தில் நடித்துள்ளார். தற்போது 71 வயதாகும் இவர் நடிப்பில் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையில் அவ்வப்போது சிறு சிறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாக அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் செப்சிஸ் (Sepsis) என்ற நோயால் அவரது சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாககவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில், ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சரத்பாபு தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக திரையுலகினர் பலரும் இறந்து வரும் செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது நடிகர் சரத்பாபுவின் உயிரிழப்பு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.