சர்ச்சை கதாபாத்திரத்திற்கு ஓகே சொன்ன சமந்தா!

0
194

சர்ச்சை கதாபாத்திரத்திற்கு ஓகே சொன்ன சமந்தா!

நடிகை சமந்தா முதன்முறையாக ஆங்கிலப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் இருபாலின ஈர்ப்பாளராக அவர் நடிக்கிறார்.

நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பிரபல தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை அவர் காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சுகமாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில், திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் பிரிந்தனர். இது தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகை சமந்தா, இப்போது தமிழில், விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கில் ’சாகுந்தலம்’ என்ற படத்தையும் முடித்திருக்கிறார். அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் ’புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்திப் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ள அவர், இப்போது ஆங்கில படத்தில் நடிக்க இருக்கிறார்.

திமேரி என் முராரியின் ’அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற நாவலின் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை பிலிப் ஜான் இயக்குகிறார். இவர் Downton Abbey என்ற படத்தை இயக்கியவர். இந்தப் படத்தில் தமிழ்ப் பெண்ணாக வரும் சமந்தா, இருபாலின ஈர்ப்பாளராக நடிக்க இருக்கிறார். படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் சுனிதா ததி தயாரிக்கிறார். இவர் தெலுங்கில் சமந்தா நடித்த ’ஓ பேபி’ படத்தை தயாரித்தவர்.

ஆங்கிலப் படத்தில் நடிப்பது பற்றி சமந்தா கூறும்போது, ‘இயக்குநர் பிலிப் ஜானுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் இயக்கிய டவுன்டன் அபே (Downton Abbey) படத்தின் தீவிர ரசிகை நான். இந்தப் படத்தில் என் கேரக்டர் சிக்கலான கேரக்டரை கொண்டது. இதில் நடிப்பது எனக்கு சவாலானதாக இருக்கும். ஓ பேபி படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை சுனிதாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.