தேசிய எம்எஸ்எம்இ விருதுகள் 2021-22 –க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இந்திய தொழில்முனைவோர்கள் தங்கள் படைப்பாற்றல், புதுமையான பொருட்கள் மற்றும் சேவைகள், நவீன உற்பத்தி முறைகள் ஆகியவற்றால் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் போட்டியினை சிறப்பாக எதிர்கொண்டு வருகிறார்கள். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்கு இது போன்ற புதிய முயற்சிகள் மற்றும் அவர்களது உத்வேகத்தை ஊக்குவித்தல் அவசியமாகிறது. எனவே, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகமானது தொழில் முனைவோர்களது அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது.
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் “தேசிய குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விருதுகள் – 2021-22”க்கான ஆன்லைன் விண்ணப்பங்களை தொழில்முனைவோர்களிடமிருந்து கீழ்க்கண்ட பிரிவுகளில் வரவேற்கிறது.
1. உற்பத்தித் துறையில் சிறந்த தொழில்முனைவோர் விருதுகள் (12 விருதுகள்)
2. சேவை துறையில் சிறந்த தொழில்முனைவோர் விருதுகள் (9 விருதுகள்)
3. சிறப்புப் பிரிவுகளில் விருதுகள்:
அ. சிறந்த மகளிர் தொழில்முனைவோர் விருதுகள் (4 விருதுகள்)
ஆ. பட்டியிலினம் மற்றம் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த சிறந்த
தொழில்முனைவோருக்கான விருதுகள் (4 விருதுகள்)
இ. மாற்றுத்திறனாளிகளில் சிறந்த தொழில்முனைவோருக்கான விருதுகள்
(2 விருதுகள்)
“தேசிய குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விருதுகள் – 2021-22” தொடர்பான ஆன்லைன் விண்ணப்பத்தை www.dcmsme.gov.in என்ற இணைய முகவரியில் அல்லது https://dashboard.msme.gov.in/na என்ற இணைய முகவரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு தொழில்முனைவோர் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் தகுதியின் அடிப்டையில் விண்ணப்பிக்கலாம். சிறந்த தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகைக்கு வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 10(17)ன் படி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2022 ஆகும். இதுகுறித்து மேலும் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல் பெற MSME வளர்ச்சி நிலையம், சென்னை (044-225011/12/13) மற்றும் கிளை அலுவலகங்கள் கோவை (0422-2230426/2233956), மதுரை (0452-2918313) மற்றும் திருநெல்வேலி (0462-2342137) அல்லது அருகில் உள்ள மாவட்டத் தொழில் மையங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவல் சென்னை கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிலைய துணை இயக்குனர் திரு.பி.சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.