சில்லறை விற்பனையின் முன்னணியாளர்கள் பங்கேற்ற கருத்தரங்க மாநாடு சென்னையில் நடைபெற்றது.
சில்லறை விற்பனையில் நீடித்து நிலைத்து இருப்பது, அதில் வெற்றி காண வழிகளைக் காண்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
சென்னை: இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் கருத்தரங்க மாநாடு நவம்பர் 18-ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட இந்திய சில்லறை விற்பனை சாதனையாளர்கள் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அடுத்த ஆண்டிலும் சில்லறை விற்பனைத் தொழிலில் நீடித்து நிலைத்து இருப்பது, வெற்றி அடைவது ஆகியவற்றுக்கான திட்டங்களை வகுக்கும் பொது மேடையாக கருத்தரங்க மாநாடு திகழ்ந்தது.
இதில் இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் முதன்மை செயல் அலுவலர் குமார் ராஜகோபாலன் பேசியது:-
கோரானா நோய்த் தொற்று காலம் என்பது சில்லறை விற்பனைத் தொழிலில் புதிய கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. சில்லறைத் தொழிலில் சிறப்பாகச் செயல்படுவதற்கான புதிய வாய்ப்புகளையும், வழிவகைகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த கருத்தரங்க மாநாடானது 2022-ஆம் ஆண்டைத் தாண்டியும் சில்லறை விற்பனைத் தொழிலில் சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் சென்னை பிரிவு தலைவரும், ஹஸ்ப்ரோ க்ளோத்திங் இயக்குநரான சுஹெல் சத்தார் வரவேற்றுப் பேசினார். அவர் பேசியது:-
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில்லறை விற்பனையாளர்கள் ஒருவருக்கு ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளும் வகையிலான ஏற்பாட்டை சென்னை சில்லறை விற்பனையாளர் கருத்தரங்க மாநாடு ஏற்படுத்தித் தந்துள்ளது. கோரானா காலத்தில் இருந்து உலகம் மாறி வருகிறது. நம்மில் பலரும் மாற்று வாய்ப்பினை சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறோம். எனவே, சில்லறை விற்பனைத் தொழிலில் நிலைத்து நிற்கவும், அதனை மேம்படுத்தவும் நமக்குள்ளே திட்டங்களை வகுத்திட சென்னை கருத்தரங்க மாநாடு வழிவகை செய்கிறது என்றார்.
இந்திய சில்லறை விற்பனையாளர் கூட்டமைப்பின் தலைவர் பிஜூ குரியன் பேசியது:-
டிஜிட்டல் தொழில்நுட்பமானது சில்லறை விற்பனையை உயிர்ப்புடன் வைத்திருப்பதுடன் வாடிக்கையாளர்களையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. நோய்த் தொற்று காரணமாக நீண்ட காலத்துக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் பொருள்களை வாங்குவது, அதற்கு கட்டணம் செலுத்துவது போன்ற பணிகளை ஆன்-லைன் மூலமாகவே வாடிக்கையாளர்கள் மேற்கொண்டனர். கடந்த 20 மாதங்களில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மக்கள் வீடுகளிலேயே இருப்பதும், அவர்கள் தங்களது உடல் நிலையைப் பற்றி கவலை கொள்வதும் தொடர்ந்தாலும், நிலைமை இப்போது மேம்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கான பொருள்களை அறிவதும், அதனை வாங்குவது, அதற்குப் பணம் செலுத்துவது, பெறுவது என அனைத்திலும் தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சில்லறை விற்பனையாளர்கள் கருத்தரங்க மாநாடானது, மற்ற விற்பனையாளர்களிடம் இருந்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும், புதிய யோசனைகளை அறிந்திடவும் பெரும் வாய்ப்பாக அமைந்திடும் என்றார்.
போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் போத்தி, ஊக்கமளிக்கும் உரையை ஆற்றினார். இந்த மாநாட்டில் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சி.கே.குமரவேல், கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன் ஆகியோரும் தங்களது வாணிபப் பயணத்தின் அனுபவங்களை கேள்வி-பதில் என்ற முறையில் பகிர்ந்து கொண்டனர். ஒரு பிராண்டு ஷாம்புவில் இருந்து பல பில்லியன் டாலர் வர்த்தகத்தை கட்டமைத்தது எப்படி என்பது குறித்து விளக்கினார், கெவின்கேர் நிறுவனத்தின் சி.கே.ரங்கநாதன். இதேபோன்று சில்லறை விற்பனையாளர் கூட்டமைப்பின் தகவல் தொடர்புப் பிரிவு இயக்குநர் ஹிதேஷ்பட்டுடன், மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.சதீஷ்குமார் கலந்துரையாடினார். அப்போது, புதிய தயாரிப்புகள் மூலம் வணிகத்தை விரிவுபடுத்தியது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சிகே குமரவேல் பேசியது:
நோய்த் தொற்று என்ற கடுமையான காலகட்டத்திலும் வளர்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிட சிறந்த வழி தொடர்ந்து கற்றுக் கொள்வதுதான். சிறந்தவைகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு சென்னை கருத்தரங்க மாநாடு சிறந்தொரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறது என்றார்.
2022-ஆம் ஆண்டு சில்லறை விற்பனை குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது. இந்த உரையாடலில் இந்தியன் டிரைன் பேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சரத் நரசிம்மன், நட்ஸ் அன்ட் ஸ்பைசஸ் நிறுவனர் சுனில் சன்ங்லிசா, ஸ்ரீலெதர்ஸ் பங்குதாரர் சுசாந்தோ தே, போத்தீஸ் நிறுவனத்தின் இயக்குநர் வருண் ரமேஷ், லியோ காபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதந்மை செயல் அதிகாரி வேணு சீனிவாசன், சாய் கிங்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஜகாபார் சாதிக், டெட்டர் கட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி நிஷாந்த் சந்திரன், வாலாய் புட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் விஜயா தர்ஷன் ஜூவகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.