உங்களை திருப்திப்படுத்தும் செயலை செய்வதன் மூலமாக மட்டுமே நீங்கள் கலாம் போன்று உருவாக முடியும் என மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் அறிவுரை வழங்கியுள்ளார்

0
136
உங்களை திருப்திப்படுத்தும் செயலை செய்வதன் மூலமாக மட்டுமே நீங்கள் கலாம் போன்று உருவாக முடியும் என மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னையில் ஜேப்பியார் மற்றும் ஜேப்பியார் எஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரிகளின் 18வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஜேப்பியார் கல்விக்குழும நிறுவனர் மறைந்த டாக்டர். ஜேப்பியார் ஆசியுடன் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ரெஜினா ஜே முரளி தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பத்ம பூஷன் நம்பி நாராயணன் கலந்து கொண்டார். ஜிடோ பிஸினஸ் நெட்வொர்க்கின் தலைவர்  ராஜேஷ் சந்தன் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும்  ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் முரளி சுப்பிரமணியன்,   துணைத் தலைவர்கள் மார்கரெட்,  மாகலீன்,  ஜேப்பியார் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே பிரான்சிஸ் சேவியர்,  மற்றும் டீன் டாக்டர். ஷலீஷா.ஏ.ஸ்டான்லி,  உள்ளிட்டோர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
 இதில் பல்வேறு பிரிவுகளில் 862 பேருக்கு இளங்கலை பட்டங்களும், 74 பேருக்கு முதுகலை பட்டங்களும் வழங்கப்பட்டன.
 முதுகலை பொறியியலில் கணினி அறிவியல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி சுபவர்ஷினி மற்றும் அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற 16 மாணவர்களுக்கு  விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
கல்வி மற்றும் கூடுதல் பாடத்திட்ட  செயல்திறனுக்காக  17 மாணவர்களுக்கு ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை விருதுகளும் வழங்கப்பட்டன.
ஜேப்பியார் கல்விக்குழுமத்தில் கல்லூரி வளாகத் தேர்வு மூலம் பல மாணவர்கள் சிறந்த பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, உயர்நிலைக் கல்வியில் 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற  மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் இலவசக் கல்வி ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
  மேலும் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை மூலம்  சிறந்த விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவச கல்வியும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் உரையாற்றிய நம்பி நாராயணன், மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு இல்லாமல் எலக்ட்ரானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பொறியியல் படிப்புகள் இல்லை என்று குறிப்பிட்டார். ஏனெனில் அந்த பொறியியல் படிப்புகளில் பயன்படுத்தும் கருவிகளை உருவாக்குவது மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு என்றார். மேலும் தான் பொறியியல் பட்டம் பெற்ற  பிறகு  தகுதி வாய்ந்த பொறியாளர் என்கிற எண்ணம் வந்தது என்றும் அதற்கு தான் செய்த பிராஜெக்ட் தான் காரணம் என்றும் கூறினார். பட்டம் பெற்ற உடன் பணம் சம்பாதிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படுவதால் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிக்கு சேர்கின்றனர் என்றும் இதில் பெரும்பாலானோர் கூட்டல் கழித்தல் வேலை தான் செய்கின்றனர் என்றும் கூறிய அவர் செய்யும் பணி திருப்தி தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்றார். வாழ்வில் முக்கியமானது உங்களை உருவாக்கும் சிறந்த திட்டங்கள் தான் என்றும் அதனை கண்டறிய வேண்டும் என்று கூறிய அவர், உங்களை திருப்தி படுத்தும் வேலை தான் உங்களை அப்துல் கலாம் போன்று உருவாக்கும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.