பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐ.பி.எல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றுள்ளது
இந்த கோஷம், 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி ரசிகர்களுக்கு இறுதியாக நனவாகிவிட்டது. ஒருமுறை அல்ல, 3 முறை இறுதிப்போட்டி, 18 ஆண்டுகள் போராட்டம், வலி, காயம், வேதனை அனைத்தும் இந்த சீசனில் ஆர்சிபிக்கு ஆற்றப்பட்டுவிட்டது. இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றுள்ளது.
ஐபிஎல் கோப்பையில் 8வது அணியாக இனிமேல் தன்னுடைய பெயரையும் ஆர்சிபி அணி பொறித்து வரலாற்றில் இடம் பிடித்தது. ராகுல் திராவிட், அணில் கும்ப்ளே, விராட் கோலி, டூப்ளெஸ்ஸி என ஜாம்பவான்களால் நிகழ்த்த முடியாத சாதனையை அன்கேப்டு, சர்வதேச அனுபவமே இல்லாத வீரர் ரஜத் பட்டிதார் ஆர்சிபிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக ஆடி 10 ஆண்டுகள் கேப்டன் பொறுப்பேற்று பலமுறை இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்ட விராட் கோலிக்கு இந்த வெற்றியின் ஆழம், மதிப்பு என்னவென்று தெரியும். அதனால்தான் கடைசிப் பந்து வீசப்பட்டவுடன் மைதானத்தின் தரையில் தலை கவிழ்ந்து கோலி தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கண்ணீர் சிந்தி அழுதார்.
இதுபோல் விராட் கோலியை அதீத உணர்ச்சியுடன் ரசிகர்கள் பார்த்தது இல்லை. 18 ஆண்டுகள் கனவு நனவாகும்போது ஏற்படும் மகிழ்ச்சி, உழைப்பின் மதிப்பு, அர்ப்பணிப்பின் பலன் அனைத்தும் கண்ணீராக கோலியின் முகத்தில் வெளிப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பெங்களூரு அணி பெற்ற இந்த வெற்றி குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி எனக்கு மட்டும் ஸ்பெஷலானது கிடையாது. விராட் கோலிக்கும் இந்த வெற்றி மிகவும் ஸ்பெஷலான ஒன்று. இத்தனை ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கும் இந்த வெற்றி மகிழ்ச்சி அளித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
முதலாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நாங்கள் இந்த இறுதிப்போட்டியில் வெற்றிபெற முடியும் என்கிற நம்பிக்கை வந்தது. இந்த போட்டியில் 190 ரன்கள் என்கிற இலக்கு நிச்சயம் போதும் என்று நினைத்தோம். அதேபோன்று எப்போதெல்லாம் விக்கெட் தேவைப்படுகிறதோ, அழுத்தம் நிறைகிறதோ அப்போதெல்லாம் க்ருனால் பாண்டியாவை பந்துவீச அழைப்பேன். அந்த வகையில் அவர் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
அவர் மட்டுமின்றி சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசல்வுட் என அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். விராட் கோலி அணியில் இருக்கும் போது நான் கேப்டன்சி செய்கையில் அவரிடம் இருந்து நிறைய அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது என ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.