ரஜினிகாந்த் சொகுசு காரில் சென்றது எங்கே தெரியுமா?

0
360

ரஜினிகாந்த் சொகுசு காரில் சென்றது எங்கே தெரியுமா?

இயக்குநர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தனது போயஸ் தோட்டத்து வீட்டிலேயே இருந்து வந்தார். கொரோனா பிரச்னை முழுவதும் முடிந்த பின்னர் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை தொடங்கலாம் என்று படக்குழுவிடம் அவர் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே அமிதாப்பச்சன், சிரஞ்சீவி உள்ளிட்டோருடன் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த ரஜினிகாந்த், பிரதமர் சொன்னபடி வீட்டின் வெளியே வந்து விளக்கேற்றியது உள்ளிட்ட ஒரு சிலவற்றிற்காக மட்டுமே வெளியில் தலை காட்டினார்.

இந்நிலையில் முதல்முறையாக நேற்று மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ரஜினிகாந்த் முகக்கவசத்துடன் லம்போர்கினி கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது.

இந்த கொரோனா காலத்தில் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்த புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறை என்பதாலும், ஓட்டுநர் இல்லாமல் அவரே காரை ஓட்டிச் சென்றதாலும் எங்கு சென்றிருப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார் ரஜினிகாந்த். அவருடன் சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் உடன் சென்றிருக்கின்றனர். அங்கு காரிலிருந்து இறங்கி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.