மோப்ப நாய் படைப்பிரிவில் 11 துப்பறியும் நாய் குட்டிகள் இணைப்பு: தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டன
சென்னை: சென்னை காவல் துறையில் உள்ள மோப்பநாய் படைப்பிரிவுக்கு, புதிதாக 11 நாய் குட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வெளிநாட்டு வகை நாய்களுக்கு தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டது.
கொலை, கொள்ளை, போதைப் பொருள் பதுக்கல் உள்பட பல்வேறு குற்றச்செயல்களைக் கண்டுபிடிக்கவும், வெடிகுண்டுகளைக் கண்டறியும் பணியிலும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைப் பராமரிக்கவும், பயிற்சி அளிக்கவும், சென்னை காவல் துறையில் துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவு உள்ளது. சென்னையில் கீழ்ப்பாக்கம் மற்றும் புனித தோமையர் மலையில் இந்த படைப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
துப்பறியும் மோப்ப நாய் படைப் பிரிவை மேம்படுத்தும் வகையில் காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி, புதிதாக 11 துப்பறியும் நாய் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. அதில் லாப்ரடோர் இனத்தை சேர்ந்த 2 குட்டிகளும், பெல்ஜியம் மாலினோயிஸ் இனத்தை சேர்ந்த 3 குட்டிகளும், டாபர்மேன் இனத்தை சேர்ந்த ஒரு குட்டியும் என மொத்தம் 6 குட்டிகள் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
மேலும், பெல்ஜியம் மெலினாய்ஸ் இனத்தைச் சேர்ந்த 3 குட்டிகளும் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு குட்டி என 4 குட்டிகள் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கும் பணிக்கும், டாபர்மேன் இனத்தைச் சேர்ந்த ஒரு குட்டி குற்ற வழக்கைக் கண்டுபிடிக்கும் பணிக்கும் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த மோப்ப நாய்களை, மோப்ப நாய் படைப்பிரிவில் ஒப்படைக்கும் நிகழ்வு எழும்பூர் ராஜரத்திரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை காவல் தலைமையிடத்து பிரிவு கூடுதல் காவல் ஆணையர் விஜயேந்திர பிதாரி, உயர் ரக 11 நாய் குட்டிகளுக்கும் வெற்றி, முகிலன், சிலம்பன், குரளி, காரி, குகன் என தமிழ்ப் பெயரிட்டு வழங்கினார். இந்த புதிய மோப்ப நாய் குட்டிகளுக்கு பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.