‘மனிதன் மகிழ்ச்சிக்கு தடையாக இருப்பது மூட நம்பிக்கை’ : நடிகர் சத்யராஜ் பேச்சு!
திருச்சியில் இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 வது மாநாடு நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் நிறைவாக பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில், தி.க தலைவர் வீரமணி, ஆ.ராசா எம்.பி , நடிகர் சத்யராஜ் ஆகியோல் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ், ”பெரியாரை உலகமயமாக்குவோம், உலகை பெரியார் மயமாக்குவோம். பெரியார் மயமாக்குவோம் என்பது எல்லோரையும் பகுத்தறிவாக்குவதாகும். பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்கள் ஒன்றிணைந்து இந்தியாவை பெரியார் மயமாக்கி மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
குழந்தைகள் நாத்திகனாக தான் பிறக்கிறார்கள். அவர்கள் எந்த குடும்பத்தில் பிறக்கிறார்களோ அவர்களின் குடும்பத்தினர் மத நம்பிக்கைகளை திணித்து குழந்தைகளை மதத்திற்குள் இறுக்கமாக்கி விடுகிறார்கள்.
வேதங்களை உருவாக்கி, ஒரு கற்பனை தலைவனை உருவாக்கி வைத்திருப்பது மிக பெரிய கொடுமை. வைக்கத்தில் பெரியார் போராட்டம் நடத்திய போது அங்கு சிலர் பெரியார் மரணிக்க வேண்டும் என யாகம் நடத்தினார்கள். மனிதராக பிறந்தவர்கள் அறிவியலை பயன்படுத்தி மனித சமூகத்திற்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும்.
சினிமாவில் இறந்தது போல் நடித்தால் கேமராவை பார்த்து சிரிக்க சொல்வார்கள் அது ஒரு மூட நம்பிக்கை தான். என்னையும் அது போல் ஒரு முறை செய்ய சொன்னார்கள் நான் முடியாது என கூறிவிட்டேன்.எந்த விதமான மூட நம்பிக்கையும் இல்லாத வாழ்க்கை தான் சுலபமான வாழ்க்கை.
தனி மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தடையே மூட நம்பிக்கை தான். அதை தூக்கி எறிந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.தனி மனித மகிழ்ச்சிக்கும் சமூக மகிழ்ச்சிக்கும் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை இருந்தால் போதும்” என தெரிவித்துள்ளார்.