மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தார்!
வருகிற 19-ந்தேதி, தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 2-ந்தேதி தொடங்கியது. வரும் திங்கட்கிழமை வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்கள், மீதமுள்ள ஒரு இடம் ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் தி.மு.க. வேட்பாளர்களாக, எஸ்.ஆர்.சிவலிங்கம், பி.வில்சன், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பேரவை கூடுதல் செயலாளரிடம் கமல்ஹாசன் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
மேலும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களான வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்த நிகழ்வின்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் செல்வப்பெருந்தகை, திருமாவளவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்களான A.G.மௌரியா, I.P.S., (ஓய்வு), R.தங்கவேலு மற்றும் பொதுச் செயலாளரான ஆ.அருணாச்சலம் M.A., B.L., ஆகியோர் உடன் சென்றிருந்தார்கள்.