பொதுமக்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
கடலூர், செப்.11– கடலூர் மாவட்ட சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விலையில்லா முகக்கவசங்களை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலையில் இன்று (11–ந் தேதி) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது:–
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அனைத்து பொதுஇடங்கள் மற்றும் பணியிடங்களிலும், பிற இடங்களுக்கு பயணிக்கும் போதும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஆணைக்கிணங்க நியாயவிலைக்கடைகளின் மூலம் இலவச முகக்கவசங்கள் விநியோகிக்க கடலூர் மாவட்டத்தில் உள்ள 1420 நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் 7 லட்சத்து 29 ஆயிரத்து 949 குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களில் உள்ள 24 லட்சத்து 14 ஆயிரத்து 114 நபர்களுக்கு தலா 2 வீதம் 48 லட்சத்து 28 ஆயிரத்து 228 தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் தடுக்க அனைத்து தரப்பு மக்களும் விழிப்புடன் இருக்கவேண்டும். 95% பேர் பாதுகாப்பாக இருந்தாலும் 5% பேர் பாதுகாப்பு இல்லாமல் இருந்தால், பாதுகாப்பாக இருப்பவர்களுக்கும் நோய் தொற்று பரவி விடுகிறது. எனவே 100% பேரும் சமூக பொறுப்புணர்வுடன் விழிப்புடன் இருந்தால் மட்டுமே நோய் தொற்று பரவல் தடுக்கப்படும்.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரவேண்டும். வெளியே வரும்பட்சத்தில் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்தும், அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவதன் மூலம் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைக்க ஒவ்வொருவரும் விழிப்புடன் இருப்போம் என உறுதியேற்போம். அனைவரும் சமூக அக்கறையுடன் அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றி நோய் தொற்று இல்லாத கடலூர் மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வே.நந்தகுமார், மேலாண்மை இயக்குனர் சொ.இளஞ்செல்வி, துணைப்பதிவாளர்கள் ஜெ.சண்முகம் (கடலூர்), மு.ஜெகத் ரட்சகன், வி.துரைசாமி (சிதம்பரம்), என்.ஜீவாநந்தம் (விருத்தாச்சலம்), கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சக்திவேல், கூட்டுறவு சங்க பணியாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.