பொங்கல் தொகுப்பு : ஜனவரி 3, 10-ம் தேதிகளில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் – கூட்டுறவுத் துறை அறிவிப்பு!
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படவுள்ள நிலையில், டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணியில் எவ்வித இடையூறுமின்றி குறிப்பிட்ட தினங்களுக்குள் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதால் அனைத்து நியாயவிலைக் கடைகளும் விடுமுறை தினங்களில் இயங்க கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி ஜனவரி 3 மற்றும் 10-ம் தேதிகளில் நியாய விலைக் கடைகள் செயல்படும் என கூட்டுறவுத் துறை அறிவிப்பு. இந்த இரண்டு நாட்களை ஈடுசெய்யும் விதமாக 15.01.2025 (புதன் கிழமை) மற்றும் 22.02.2025 (சனிக்கிழமை) ஆகிய நாட்கள் நியாய விலைக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.