‘தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வெற்றியை மட்டுமே பரிசாக கொடுக்கிறார்கள்..’ – துணை முதலமைச்சர் நெகிழ்ச்சி!

0
78

‘தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வெற்றியை மட்டுமே பரிசாக கொடுக்கிறார்கள்..’ – துணை முதலமைச்சர் நெகிழ்ச்சி!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திமுகழக சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் – இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கலைஞரை மனதில் கொள்வோம் புதியதோர் உலகு செய்வோம் என்னும் பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் (9.5.2025) சென்னை தீவுத்திடலில், அரண்மனைக்காரத் தெரு ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை :

கலைஞருடைய பிறந்தநாள் செம்மொழி நாளாக இனிமேல் வருட வருடம் ஜூன் 3ம் தேதி கொண்டாட வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்.

பொதுவாகவே நம்முடைய அண்ணன் சேகர்பாபு அவர்கள் வருடம் முழுக்க ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்தி கொண்டே இருப்பார். இந்த முறை செம்மொழி நாளை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்து, அதற்கு என்னை அழைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், உங்களையெல்லாம் சந்திப்பதற்கான வாய்ப்பையும் கொடுத்ததற்கு மீண்டும் என்னுடைய பாராட்டுக்களையும், நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும்போதே அவரிடம் சொல்லிட்டு தான் வந்தேன். ரொம்ப நேரம் பேசமுடியாது அண்ணே, கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. மருத்துவர்கள் அதிக நேரம் பேசக்கூடாதுனு என்று சொல்லியிருக்கிறார்கள் அண்ணே. ஏற்கனவே தொண்டை கட்டியிருக்கிறது.

பராவாயில்லை நீங்க வாங்க அண்ணே, வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை கொடுத்துவிட்டு இரண்டு நிமிடம் பேசிவிட்டு போங்க என்று சொன்னார்.

அந்த உரிமையோடு தான் உங்களையெல்லாம் சந்திக்க நான் வந்திருக்கின்றேன். வீட்டில் இருந்து கிளம்பும்பொழுது ஒருவிதமான சோர்வோடு கிளம்பினாலும், எப்போது இந்த கிழக்கு மாவட்டத்திற்கு வருகை தந்தாலும், உங்களுடைய வரவேற்பு, உற்சாகம், சிரித்த முகம், எழுச்சி இதையெல்லாம் பார்க்கும்பொழுது அது எனக்குள்ள தானாக ஒரு பூஸ்ட் சாப்பிட்ட மாதிரி ஆகிடும்.

அதன்படிதான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்குமுன்பு இன்னொரு நிகழ்ச்சி, தீவுத்திடலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள். இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட பார்த்தீர்கள் என்றால், நம்முடைய திராவிட மாடல் அரசிற்கு ஒரு எடுத்துக்காட்டான ஒரு நிகழ்ச்சியாக இந்த நலத்திட்ட உதவி நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், இது திராவிட மாடல் நலத்திட்ட உதவி என்றே சொல்லாம். தலைவர் அவர்கள் எப்பொழுது ஆட்சி பொறுப்பு ஏற்றார்களோ அப்பவே சொன்னார்கள். எல்லாரும் கேட்பார்கள் திராவிட மாடல் அரசு என்றால் என்ன? என்று. எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. அனைவருக்கும் அனைத்துவிதமான உதவிகளும் செய்யப்படும் இதுதான் திராவிட மாடல் அரசு என்பதை சொல்லி அதை செய்து காட்டி வருபவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், கழகத் தலைவர் அவர்கள்.

அதே மாதிரி, இன்றைக்கு நிகழ்ச்சியில் பார்த்தீர்கள் என்றால், 50 பேருக்கு ஆட்டோ உதவி செய்துள்ளார்கள். 15 மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் கொடுத்திருக்கிறார். கழக நிர்வாகிகள் 25 பேருக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்திருக்கிறார். 10 பேருக்கு டிபன் வண்டி வைப்பதற்கான உதவியை செய்திருக்கிறார். கழகத்தினர் 10 பேர் உதவி கேட்டு வந்தவர்களுக்கு மீன்பாடி வண்டி கொடுத்திருக்கிறார். இந்த பகுதியிலுள்ள துறைமுகம் தொகுதியிலுள்ள 600 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புத்தாடை, உதவித்தொகை அவர்களுக்கு பல்சுவை விருந்து, தீவுத்திடலில் இந்த உதவிகளையெல்லாம் வழங்கிவிட்டு இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில், கணிணி மற்றும் தையல் இயந்திரம் பெறுகின்ற மாணவிகள் 400 பேருக்கு, தையல் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு தையல் இயந்திரம், கணிணி வகுப்பு படித்த மாணவிகளுக்கு கணிணி. தையல் வகுப்பு முடித்தவர்கள் கிட்டத்தட்ட 2,608 பேர், கணிணி வகுப்பு முடித்தவர்கள் 1,103 பேர் மொத்தம் 3,711 பேர். இந்த நலத்திட்ட உதவிகளையெல்லாம் நம்முடைய சேகர்பாபு அண்ணன் இன்றைக்கு வழங்கியிருக்கின்றார்.

இதுதான் திராவிட மாடல் அரசு, இதுதான் ஒரு திராவிட மாடல் அரசினுடைய எடுத்துக்காட்டாக வழங்கக்கூடிய நலத்திட்ட விழா. ஒவ்வொருத்தருக்கும் பார்த்து, பார்த்து செய்திருக்கிறார். கழகத்துடைய மூத்த முன்னோடிகளுக்கு ஒருவிதமான உதவி அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார். மாணவர்களுக்கு என்ன தேவையோ, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு போகின்ற இளைஞர்களுக்கு என்ன தேவையோ அதை பார்த்து செய்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு என்ன தேவையோ அதை பார்த்து செய்திருக்கிறார்.

இதுதான் நம்முடைய சேகர்பாபு அண்ணன் அவர்கள், பல்வேறு முறை நான் சொல்லியிருக்கிறேன். எந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தாலும் மத்தவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார். அப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடந்திருக்கின்றது.

இன்னும் சொல்லப்போனால், சென்னை கிழக்கு மாவட்டத்திலேயே அவர் எந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தாலும் சிறப்பாக செய்வார். இன்றைக்கு அவருடைய சொந்த தொகுதியான துறைமுகத்தில் செய்யும்போது நாம் அதை கேட்கவா வேணும். நான் பலமுறை இதே அரங்கத்தில் கூட பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றேன்.

பலமுறை அண்ணன் சேகர் பாபு அண்ணன்கிட்ட நான் சொல்லியிருக்கிறேன். பலபேர் நான் தமிழ்நாட்டிலுள்ள பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது சொல்வார்கள். சேப்பாக்கம், திருவல்லிகேணி நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய தொகுதி. அந்த தொகுதியில் எந்த பிரச்சனையுமே இல்லையாமே நீங்க என்ன கேட்டாலும் செய்து கொடுத்துவிடுவீர்களாமே நாங்கள் எல்லோரும் தொகுதி மாறி வந்துவிடுகிறோம் என்னிடம் சிலபேர் நகைச்சுவையாக கேட்பார்கள்.

அண்ணன் சேகர்பாபு அண்ணன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது எனக்கு ஒரு எண்ணம் வரும். அது என்னவென்றால், சேப்பாக்கம் தொகுதி மாறி நான் இந்த துறைமுகம் தொகுதிக்கு மாற்றம் செய்து வந்திரலாம் என்ற எண்ணம் வரும். அப்படிதான் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவர் பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.

எனவே, இந்த நேரத்தில் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, இன்றைக்கு கலைஞருடைய பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு அரசியல் என்ன நிலைமை? தமிழ்நாட்டினுடைய நிலைமை என்ன? என்று உங்களுக்கு அத்தனை பேருக்கும் தெரியும். நீங்கள் எல்லாம் படித்தவர்கள். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பீர்கள், பேப்பர் படித்து கொண்டிருப்பீர்கள்.

இன்றைக்கு எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றார்.

ஆனால், பொறுப்புக்கு வந்து முதல் கையெழுத்து என்ன போட்டார். பெண்களுக்கு விடியல் பயண திட்டம். பெண்கள் எங்கும் பஸ்ஸில செல்வதற்கு பயணம் செய்வதற்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை அறிவித்தார். ஒவ்வொருத்தருக்கும் பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.

குழந்தைகள் பள்ளி கூடத்திற்கு வரவேண்டும். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கக்கூடிய குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும். வந்தாலும் பசியோடு படிக்கக்கூடாது என்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அறிவித்தார்.

ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 22 லட்சம் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்து, காலையில் பள்ளிக்கு நேரத்திற்கு வந்து, இதனால் பள்ளிகளுக்கு வரக்கூடிய பிள்ளைகளுடைய சதவீதம் (Ratio) அதிகரித்துள்ளது.

அதேமாதிரி பெண்கள் படிக்க வேண்டும். உயர் கல்வி படிக்க வேண்டும். பள்ளிக்கூடம் படித்தால் மட்டும் பத்தாது. காலேஜ் படிக்கனும் என்பதற்குதான் புதுமைப் பெண் திட்டம். அரசு பள்ளியில் படித்து எந்த கல்லூயில் படித்தாலும் அவர்களுக்கு மாதம் 1,000 கல்வி உதவித்தொகை வழங்குகின்ற புதுமைப் பெண் திட்டம்.

இந்த திட்டம் ஒரு மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. ஆண்களை விட பெண்கள் அதிகமாக கல்லூரியில் சேர ஆரம்பித்துவிட்டார்கள். ஆண்களும் அதிகமாக சேர வேண்டும் என்று சென்ற வருடம் தமிழ்புதழ்வன் திட்டத்தையும் முதலமைச்சர் அவர்கள் ஆரம்பித்தார்கள்.

அதுமட்டுமில்லாமல், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் என்ன உயர்கல்வி படிக்கலாம். காலேஜ்ல உயர் கல்வி படிக்கக்கூடிய மாணவர்கள் அடுத்து எங்க வேலைக்குப் போகலாம் என்று மாணவர்களுக்கு துணை நிற்க கூடிய நான் முதல்வன் திட்டத்தையும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

இன்றைக்கு நான் முதல்வன் திட்டத்தில் பல லட்சம் மாணவர்கள் பங்குபெற்று பயனடைந்துள்ளார்கள். இப்படி பல்வேறு திட்டங்களை பார்த்து, பார்த்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கிட்டத்தட்ட 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு கடந்த 2 ஆண்டுகளாக மாதம், மாதம் 1,000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம், நம்முடைய தலைவருடைய பணிகள், மக்கள் பணிகள் இதையெல்லாம் பார்த்து தான் தொடர்ந்து 10 வருசமாக, நம்ம போட்டியிட்டு இருக்கக்கூடிய 8 வருசமாக அனைத்து தேர்தல்களிலும் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வெற்றியை மட்டுமே பரிசாக நம்முடைய தலைவர் அவர்களுக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து இன்னும் பத்து மாதத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வர இருக்கின்றது. நான் உங்களிடத்தில் கேட்டுக் கொள்வதெல்லாம் நம்முடைய திட்டங்களை எல்லம் மக்களிடத்தில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

சென்ற 1ஆம் தேதி மதுரையில் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. நம்முடைய தலைவர் அவர்கள் முக்கியமான கோரிக்கையை வைத்தார்கள். பணியை கொடுத்தார்கள். கழகத்தினுடைய நிர்வாகிகள் அத்தனை பேருக்கும். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குள் இந்த ஜூன் 20 ஆரம்பித்து ஜூலை முடிவதற்குள் ஒவ்வொரு பூத்திலும் 30 சதவீதம் வாக்களர்களை நம்முடைய கழகத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை நாம் செய்து காட்ட வேண்டும் என்று நம்முடைய தலைவர் அவர்கள் நமக்கொரு டார்கெட் கொடுத்திருக்கிறார்கள். அண்ணன் சேகர்பாபு தலைமையில் அவர்கள் முன்னெடுப்பில் நிச்சயம் இந்த சென்னை கிழக்கு மாவட்டம் அந்த டார்கெட்டை மிக சிறப்பாக, மிக சீக்கராமாக 30 சதவீதத்தை விட அதிகமான வாக்காளர்களை நீங்கள் நிச்சயம் சேர்ப்பீர்கள் என்று நாம் நம்புகின்றேன்.

இங்கு வந்திருக்கக்கூடிய மாணவர்கள், கழகத்துடைய மூத்த முன்னோடிகள், இளைஞர்கள், தாய்மார்கள் உங்களிடம் நான் கேட்டுகொள்வது, கழகத்தினுடைய சாதனைகளை, அரசினுடைய சாதனைகளை இந்த சாதனைகள் இந்த திட்டங்கள் எல்லாம் தொடரவேண்டும் என்றால், அடுத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலிலும் நம்முடைய கழக ஆட்சி 7வது முறையாக அமைய வேண்டும் என்றால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக அமர வேண்டும் என்றால், அந்த பணியை நீங்களும் மக்களோடு மக்களாக சேர்ந்து, அந்த பணிகளை எல்லாம் மக்களிடம் கொண்டு சென்று சேர்த்து, ஒரு மிகப்பெரிய வெற்றியை நம்முடைய கழகத்திற்கும், நம்முடைய தலைவர் அவர்களுக்கும் தேடித்தர வேண்டும். அதற்கு நீங்களும் துணை நிற்க வேண்டும்.

எப்படி இந்த அரசும் இந்த முதலமைச்சரும் உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கையில் துணை நிற்கின்றார்களோ, அதேமாதிரி நீங்கள் இந்த அரசிற்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் இந்த அரசிற்கு பிராண்ட் அம்பாசிட்டராக நீங்கள் அத்தனை பேரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த சிறப்பான வாய்ப்பை அளித்த அண்ணன் சேகர்பாபு அண்ணன் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொண்டு, வாய்ப்புக்கு நன்றி” என்றார்.