ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ரூ.10 ஆயிரத்துக்கு டிக்கெட் பெற்றும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு!

0
156

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ரூ.10 ஆயிரத்துக்கு டிக்கெட் பெற்றும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு!

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் டிக்கெட் பெற்றும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்துக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி `மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் சென்னை ஈசிஆரில் கடந்த 2023 ஆக.12 அன்று நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இந்த இசை நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் 2023 செப்.10 அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏற்கெனவே டிக்கெட் வாங்கியவர்கள் அதே டிக்கெட்டுடன் இந்நிகழ்ச்சிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த இசை நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த கட்டணத்துடன் ரூ.10 ஆயிரம் கொடுத்து டிக்கெட் பெற்ற அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன், “ஆக.12 நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை என்றும், செப்டம்பர் மாதம் நடந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக செல்ல முடியவில்லை என்பதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித்தர உத்தரவிட வேண்டும்” எனக்கோரி சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவனம் மனுதாரரான அர்ஜுனுக்கு ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவும். ரூ.5 ஆயிரத்தை வழக்கு செலவாக 2 மாதங்களில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.