இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
306

இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரைக்கு நேரில் வந்து விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை ஏர் மார்ஷல் ஏ.பி.சிங், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் நேரில் கண்டனர்.

இந்த பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையின் சுகோய், தேஜஸ், ரஃபேல், ஜாகுவார் உள்ளிட்ட பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன. இந்த அனைத்து விமானங்களும் வானில் பறந்துகொண்டே இந்தியாவின் மூவர்ண நிற பொடியை வானில் தூவிக்கொண்டே சாகசங்களில் ஈடுபட்டன.

குறிப்பாக, வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து ஆச்சர்யப்படுத்தும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கை டைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபட்டு மெய்சிலிர்க்க வைக்கும் சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை பங்கேற்றன.

பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்புகளும் கொடுத்ததோடு, எந்த வித பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வானெங்கும் விமானப்படையின் சாகசம் மக்கள் கண்ணுக்கு தெரிந்த வண்ணமாகவே இருந்தது.

மக்கள், வெயில் காரணமாக குடைகளை பிடித்தபடி விமான சாகசத்தை கண்டு ரசித்தனர். கூட்டத்தை ஒழுங்கு செய்யும் பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். வரலாற்றில் முக்கிய விமான சாகச நிகழ்ச்சியாக சென்னையில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கருதப்படும் நிலையில், பல லட்சம் பேர் பார்வையிட்டதால் ‘லிம்கா’ சாதனை புத்தகத்தில் (Limca Book of Record) இடம்பெறுகிறது. இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை நேரில் கண்டுகளித்த பொதுமக்களில் பலரும் தாங்கள் முதல் முறை, அதுவும் நேரில் பார்த்தது மகிழ்ச்சி என்று தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது நிறைவடைந்துள்ள இந்த நிகழ்வை கண்ட அனைவரும் தங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத அணுபவமாக இது இருப்பதாக கருதுகின்றனர்.

இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை நடத்திய இந்திய விமானப்படை வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சியை சென்னை ரசித்துள்ளது – நமது இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.