‘இந்தியா கூட்டணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு மகத்தானது!’ : வைகோ புகழாரம்!
விவசாயிகள் முதல் நெசவாளர்கள் வரை, குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பல புதுமையான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைத்துள்ள அவரது நினைவிடத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தஅவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க வளர்ச்சியை கண்டு இழுத்தும் பழித்தும் பலர் பத்திரிகைகளில் பேட்டியளிக்கலாம். ஆனால், பொது தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
இந்தியா கூட்டணியின் அங்கமாக உள்ள திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விவசாயிகள் முதல் நெசவாளர்கள் வரை, குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பல புதுமையான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
இந்தியா கூட்டணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு மகத்தானது. இந்தியாவின் பிற மாநில முதலமைச்சர்கள் நம்முடைய முதலமைச்சரை முதன்மையானவராக மதித்து பாராட்டுவதை கண்டு பெருமைப்படுகிறேன்.
இதன் மூலம் இந்திய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது முத்திரையை பதித்து வருகிறது. எல்லா விதத்திலும் தி.மு.க அரசுக்கு நாங்கள் துணை நின்று, தோள் கொடுப்போம், வெல்க திமுக கூட்டணி.
மொழி பிரச்சனையில் தர்மேந்திர பிரதானுக்கு ஆன-வும் தெரியாது ஆவ-ன்னாவும் தெரியாது. தமிழ்நாடு பெரியாரின் மண், இந்தியா காந்தியின் மண். இது கோட்சேவின் மண் கிடையாது” என்றார்.