கரோனா போராளிகளின் பிள்ளைகளுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘கட்டணம் இல்லா கல்வி’ திட்டம்: வேந்தர் ஐசரி கே.கணேஷ் அறிவிப்பு
சென்னை, ஜூலை 21–
தமிழ்நாட்டில் தற்பொழுது எல்லா மாவட்டங்களிலும் கொரோனா நோய் தடுப்பு பணிகளில், தன்னலம் கருதாமல், பிறர்நலம் காக்க முன்வரிசையில் நின்று போராடும் களப்பணியாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் “வேல்ஸ் கட்டணம் இல்லா கல்வி” என்னும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இது தமிழ் நாட்டிலேயே ஒரு முன்னோடி திட்டமாகும். அத் திட்டத்தின் படி, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள், காவல் துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோரின் குழந்தைகள், இந்த கல்வி ஆண்டில் +2 வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்தால், அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 50க்கும் மேற்பட்ட இளங்கலை பட்டப்படிப்பை முழுவதுமாக கட்டணமில்லாமல் படிக்கும் ஓர் அரிய திட்டத்தை அமல்படுத்தவுள்ளார்.
தமிழ் நாட்டில் மேலே குறிப்பிட்ட மூன்று துறைகளில் களப்பணிபுரியும் பணியாளர்களில், ஒரு துறைக்கு 100 என்ற அளவில் மூன்று துறைகளுக்கும் மொத்தம் 300 மாணவ மாணவியருக்கு, 2020ஆம் ஆண்டின் +2 மதிப்பெண் அடிப்படையில் இந்த திட்டத்தின் மூலம் கட்டணம் இல்லா கல்வி அளிக்கப்படும். கொரோனா தடுப்பு பணியில், உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் மாணவர்கள் இங்கு பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9003461468, 9952018671, 8807307082, 9445507603, 9445484961, 99620 14445 என்ற எண்களில் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். வேல்ஸ் பல்கலைக்கழக ஊழியர்களை நேரில் அணுகியும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இந்த அசாதாரண காலத்தில் நம்மை பெரும் துயரில் இருந்து காத்து வரும் செயல் வீரர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர்களையும், தனியார் பல்கலைக்கழக வேந்தர்களையும், உதவி புரிந்திட முன்வருமாறு டாக்டர் ஐசரி கே.கணேஷ் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.