வரலாற்றை மாற்றி எழுதிய இந்தியா..! வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது விக்ரம் லேண்டர்!! அடுத்த 14 நாட்கள்… ‘ரோவர்’ செய்யப்போகும் மெகா சம்பவம்!!!
இஸ்ரோ திட்டமிட்டபடி மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமான நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது.
நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு ‘சந்திரயான் 1’ கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைத்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.
அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் ‘சந்திரயான் 2’ விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் ‘விக்ரம்’ என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. ‘சந்திரயான் 2’ வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.
அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது ‘சந்திரயான் 3’ விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரயான் – 3 விண்கலத்தில் இருக்கும் விக்ரம் என்ற லேண்டர் வரும் 23ம் தேதி மாலை 5.30 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என கூறப்பட்டிருந்தது. பின்னர் 6.04 மணியளியில் விக்ரம் நிலவில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமான நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. இதனை இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆரவாரத்தோடு கொண்டாடினர்.
இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த நாடு என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது. அதே நேரம் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடு என்ற பெருமையையும் இந்தியா படைத்துள்ளது.
தற்போது விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியதால் எழுந்த தூசுகள் முழுவதுமாக நீங்கியபின்னர் விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வரும். அது எடுக்கும் முதல் புகைப்படத்தை இஸ்ரோ பின்னர் வெளியிடும். இந்தியாவின் இந்த சாதனைக்கு உலகத்தின் பல்வேறு ஆய்வாளர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் ‘குண்டு பையன்’-
‘பாகுபலி’ இந்தியாவின் ‘குண்டு பையன்’ மற்றும் ‘பாகுபலி ராக்கெட்’ என்ற செல்லப்பெயர்களை கொண்ட அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக அனைத்து செயல்களும் நடந்து முடிந்துள்ளன.
முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலைகளில் எரிபொருள் உதவியால் விண்ணில் பாயும் ராக்கெட் 4 டன் எடையை புவிநிலைச் சுற்றுப்பாதைக்கு இது எடுத்துச் செல்லும். பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு 6 டன்னுக்கும் அதிகமான எடையை எடுத்துச் செல்ல முடியும்.
இப்போது ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் ஆர்பிட்டர் அனுப்பப்படவில்லை. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கி உலாவும் வகையிலான விண்கலம், உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய 3 அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது. அதேபோல, கடந்த முறை ஏற்பட்ட தோல்வியை பாடமாக கொண்டு லேண்டர் மற்றும் ரோவர் கலன்களில் அதிநவீன வசதிகளுடன், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்ததும் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
‘அசோக சக்கரம்’
நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து வெளியே வந்த ‘பிரக்யான் ரோவர்’ என்ற 6 சக்கர ரோபோ வாகனத்தின் சக்கரங்களில் இந்தியாவின் அசோக சக்கரமும், ‘இஸ்ரோ’வின் சின்னமும் பொறிக்கப்பட்டு இருந்தன. இந்த ரோபோ வாகனம் நிலவின் ஒவ்வொரு பகுதியாக சுற்றி வரும்போது, இந்த 2 சின்னங்களும் நிலவின் மேற்பரப்பில் பதிக்கப்படும். இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடான இந்தியா, அங்கு தனது சின்னத்தையும் பொறித்து வரலாற்று சாதனை படைக்கிறது. இதில் உள்ள ரோபோவால் நிலவின் மேற்பரப்பில் அரை கி.மீ. தொலைவுக்கு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்ல முடியும். இதன் மூலம் நிலவில் சேகரிக்கப்படும் தரவுகளை பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு வரும் நாட்களில் வழங்கும்.
நிலவு பயணத்தில் சந்திரயான்கள்
விண்வெளித்துறையில் வியத்தகு சாதனைகளை படைத்துவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) லட்சிய கனவு திட்டம் நிலவை ஆய்வு செய்வதாகும். பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய இஸ்ரோ அதிக தீவிரம் காட்டுகிறது.
‘சந்திரயான்-1’
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழுநிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். ‘சந்திரயான்-1’-ன் ஆயுட்காலம் 2 ஆண்டுகள். ஆனால் விண்ணில் செலுத்தப்பட்ட 312 நாட்களுக்குப் பிறகு எதிர்பாராதவிதமாக ‘சந்திரயான்-1’-ன் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான இணைப்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது. மைக்ரோ ஒளிக்கற்றை மூலம் நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ‘சந்திரயான்-1’ செயலிழந்த நிலையில் நிலவுக்கு மேலே 200 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 10 மாதங்களே செயல்பட்டாலும் ‘சந்திரயான்-1’ தனது திட்ட நோக்கத்தில் 95 சதவீதத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். அத்துடன், நிலவை நோக்கி வெற்றிகரமாக விண்கலத்தை விண்ணில் ஏவி உலக நாடுகளை புருவம் உயர்த்தி பார்க்கச் செய்தது இஸ்ரோ. நிலவில் தண்ணீர் இருப்பதையும் முதன்முதலில் கண்டுபிடித்தது ‘சந்திரயான்-1’ விண்கலம்தான்.
‘சந்திரயான்-2’
நிலவின் தென்துருவத்தில் கனிமங்கள், ரசாயன கலவை, இயற்பியல் துகள்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்ய திட்டமிட்ட இஸ்ரோ, நிலவில் சவாலான பகுதியாக பார்க்கப்படும், எந்த நாடும் ஆராய்ச்சியில் இறங்காத தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க திட்டமிடப்பட்டது. அதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை-22-ந் தேதி, ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பியது. 50 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அதே ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி அதிகாலை 1.52 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப் பாதையை அது சென்றடைந்தது. பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக கடந்த ‘சந்திரயான்-2’ விண்கலத்திலிருந்து ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. ஆனால் தென்துருவத்தில் ‘விக்ரம் லேண்டரின்’ மெதுவான தரையிறக்கம் சவாலாக மாறியது. ‘சந்திரயான்-2’ கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் பலமாக மோதியது. ஆனால் தற்போதும் ‘ஆர்பிட்டர்’ நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்துவருகிறது. ‘சந்திரயான்-2’ விண்வெளி பயணம், முழு வெற்றி பெறவில்லை.
‘சந்திரயான்-3’
தோல்வியில் துவண்டுவிடாமல், ‘சந்திரயான்-3’ திட்டத்தை ரூ.615 கோடியில் செயல்படுத்த 2020-ம் ஆண்டு இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கனவே ஆர்பிட்டர் நிலவைச் சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான பணிகளில் ஈடுபட்டுவந்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்தன. தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, அதிக எடையை தாங்கிச் செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த மாதம் 14-ந் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது ‘சந்திரயான்-2’-ன் இறுதி-முடிவு திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு தொடர் பணியாகும்.
‘சந்திரயான்-3’ வெற்றியில் தமிழ் ‘மண்’ணுக்கும் பங்கு உண்டு
விஞ்ஞானிகள்
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய ‘சந்திரயான்-3’ விண்கல ‘லேண்டர்’ வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், ‘சந்திரயான்-2’ விண்வெளிப் பயண இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு.
‘சந்திரயான்-3’ சோதனைக்கு…
இப்படி தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ‘மண்’ணுக்கும் ‘சந்திரயான்-3’ விண்கல வெற்றிப்பயணத்தில் பங்கு இருக்கிறது என்றால் அது உண்மை. ஆம், ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் நிஜமாக தரையிறக்கப்படுவதற்கு முன்பே அது தரையிறக்கப்பட்டு சோதிக்கப்பட்டது, நமது நாமக்கல் மாவட்ட மண்ணில்தான்.
நாமக்கல் மாவட்ட மண்
காரணம், நிலவுப் பரப்பு மண்ணும், நாமக்கல் மாவட்டத்தின் சித்தம்பூண்டி, குன்னமலை கிராமப்பகுதி மண்ணும் ஏறக்குறைய ஒன்றுபோல இருப்பதுதான். நிலவின் தென்துருவப் பரப்பு, ஊடுருவும் எரிமலைப் பாறை வகை சார்ந்த ‘அனார்த்தோசைட்’ மண்ணைக் கொண்டிருக்கிறது. அதே போன்று நாமக்கல் மாவட்ட மண்ணும் உள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பெங்களூருவில் உள்ள ‘இஸ்ரோ’ தலைமையகத்துக்கு இந்த மண் அனுப்பப்பட்டது.
50 டன்
அந்த பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை இயக்குனரான பேராசிரியர் எஸ்.அன்பழகன் கூறுகையில், ‘நிலவு பரப்பின் மண்ணைப் போன்ற மண் தமிழ்நாட்டின் நாமக்கல் பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. எனவே ‘சந்திரயான்’ திட்ட சோதனைக்காக நாங்கள் இந்த மண்ணை அனுப்பிவைத்தோம். 3-வது முறையாக இவ்வாறு மண் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 டன் மண் அனுப்பப்பட்டது’ என்றார்.
ஆக, ‘சந்திரயான்-3’ விண்கல பயண வெற்றியில் இந்தியராக மட்டுமல்ல, தமிழராகவும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
இமாலய சாதனை
‘சந்திரயான்-3’-ஐ தாங்கிய ராக்கெட் ஏவுதலின்போது எந்த பிரச்சினையும் ஏற்படாதவகையில் கட்டமைப்பு, கணினிகள், மென்பொருள் மற்றும் சென்சார்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு இருந்தன. அதிக எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. நிலவில் தரையிறங்கும் லேண்டரின் கால்கள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. லேண்டர் தொடர்ந்து இயங்க அதிக ஆற்றல் உற்பத்திக்காக பெரிய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்றொரு கூடுதல் சென்சாரும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.
நிலவில் மனிதன்
விண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடை போட வைத்தது. அந்த அமெரிக்கா கூட நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் நிலவில் தென் துருவத்தில் இறங்க செய்ததில்லை. ஆர்வக்கோளாறால் ரஷியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவுக்கு முன்பாக நிலவின் தென் பகுதியில் நாம் இறங்கிவிட வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு லூனா என்ற விண்கலத்தை தயாரித்து அவசரம் அவசரமாக நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அதற்கு விபரீத முடிவு தான் ஏற்பட்டது. ஆனால் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த லேண்டர் நிலவில் கால் பதித்தது இந்தியாவுக்கு மட்டும் இல்லை. இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல. பூமியில் உள்ள அனைத்து விண்வெளி பயண நாடுகளும் முன்னேறுவதற்கு உதவக்கூடியதாகும். நிலவுக்கான எங்கள் ஆய்வு மற்றும் நிலவில் மனிதனின் நிரந்தர இருப்பை ஏற்படுத்த இன்னும் சொல்வதானால் நிலவின் மனிதனை இருக்கச் செய்வதற்கும் கூட சந்திரயான்-3 ன் ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
நிலவில் வெற்றிக்கொடி நாட்டிய சந்திரயான்: கட்சித் தலைவர்கள் பாராட்டு
புதுடெல்லி, ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கியதை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். பல தரப்பில் இருந்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
பா.ஜனதா
இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் தளர்வில்லா முயற்சிகளாலும், நமது விஞ்ஞானிகளின் அளப்பரிய திறமையாலும்தான் இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை ஆகும்’ என்றார்.
காங்கிரஸ்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘லேண்டர்’ நிலவில் தரையிறங்கியது, ஒவ்வொரு இந்தியரின் கூட்டு வெற்றி ஆகும். 140 கோடி அபிலாஷைகளுடன் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிற நாடு, நமது 60 ஆண்டுகால விண்வெளி திட்டத்தின் மற்றும் ஒரு சாதனையை இன்று கண்டிருக்கிறது. இந்த விண்வெளிப் பயண திட்டத்தை வெற்றியாக்கிய நமது விஞ்ஞானிகள், விண்வெளி என்ஜினீயர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இதில் தொடர்புடைய அனைவரின் அசாதாரண கடின உழைப்பு, இணையற்ற புத்திக்கூர்மை, மாறாத அர்ப்பணிப்புக்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.’ இவ்வாறு அவர் கூறினார்.
ஆம் ஆத்மி
டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘இது ஒரு வரலாறு. நம் நாட்டுக்கு மிகப்பெரிய சாதனை. நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம். நாட்டு மக்கள் அனைவருக்கும், விஞ்ஞானிகளுக்கும், என்ஜினீயர்களுக்கும், இஸ்ரோ ஊழியர்களுக்கும் வாழ்த்துகள். பாரத மாதாவுக்கு வணக்கம்’ என்று கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ்
மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, ‘விண்வெளித்துறையில் வரலாற்று சாதனை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் அபார வெற்றிக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.
சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு நிலவில் தடம் பதித்த 4-வது நாடானது இந்தியா
புதுடெல்லி, ‘சந்திரயான்-3’ன் மூலம், நிலவில் தடம் பதித்த 3 நாடுகள் பட்டியலில் இந்தியா இணைந்திருக்கிறது. இந்தியாவுக்கு முன்பு நிலவு மண்ணை முத்தமிட்ட 3 நாடுகள், ரஷியாவை உள்ளடக்கிய முந்தைய சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா ஆகும்.
சோவியத் ஒன்றியம்
ஆனால் சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் கூட நிலவில் தங்கள் முதல் முயற்சியில் வெற்றிபெறவில்லை. சோவியத் ஒன்றியம் தனது 6-வது முயற்சியில்தான் நிலவுப் பரப்பை தொட்டது. அதன் ‘லூனா-2’ விண்கலம், 1959-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி நிலவில் மோதி நொறுங்கியது. ஆனால் பூமிக்கு வெளியே வேறு ஒரு கோளில் மோதிய, மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாக அது ஆனது.
அமெரிக்கா
அதேபோல அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’, 13 தோல்விகரமான முயற்சிகளுக்குப் பின், 1964 ஜூலை 31 அன்று நிலவில் வெற்றியை ருசித்தது.
சீனா
சோவியத் ஒன்றியம், அமெரிக்காவை தொடர்ந்து, நிலவை நோக்கிய தனது ‘சாங் இ’ திட்டத்தை சீனா தொடங்கியது. அதன் ‘சாங் இ-3’ விண்கலம், 2013-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி முதல்முறையாக நிலவு பரப்பைத் தொட்டது. அந்த வரிசையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி ஏவப்பட்ட ‘சாங் இ-5’ விண்கலம், அந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி நிலவில் தரையிறங்கி, அதே மாதத்தின் 16-ந் தேதி 2 கிலோ நிலவு மண்ணை பூமிக்கு கொண்டு வந்தது.
இந்தியா
கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி ‘சந்திரயான்-1’ ஏவல் மூலம் தனது நிலவு ஆராய்ச்சி பயணத்தை தொடங்கிய இந்தியா, தற்போது ‘சந்திரயான்-3’ மூலம் வெற்றிகரமாக சந்திரனில் தடம் பதித்திருக்கிறது. ஆனால் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா மற்றும் சீனாவின் நிலவு முயற்சிகளுக்கு இல்லாத சிறப்பு, இதுவரை அறியப்படாத நிலவின் தென்துருவப் பகுதியில் ‘சந்திரயான்-3’ லேண்டர் தரையிறங்கி ஆராய்வதுதான்.
Chandrayaan-3 Mission:
🇮🇳India is on the moon🌖.
Appreciations and thanks
for all the contributions
from India and abroad to this
ISRO-turned-National endeavour called Chandrayaan-3.https://t.co/MieflRY20B
Thank You!@PMOIndia@DrJitendraSingh@HALHQBLR@BHEL_India…— ISRO (@isro) August 23, 2023
Chandrayaan-3 Mission:
Updates:The communication link is established between the Ch-3 Lander and MOX-ISTRAC, Bengaluru.
Here are the images from the Lander Horizontal Velocity Camera taken during the descent. #Chandrayaan_3#Ch3 pic.twitter.com/ctjpxZmbom
— ISRO (@isro) August 23, 2023
Chandrayaan-3 Mission:
The image captured by the
Landing Imager Camera
after the landing.It shows a portion of Chandrayaan-3's landing site. Seen also is a leg and its accompanying shadow.
Chandrayaan-3 chose a relatively flat region on the lunar surface 🙂… pic.twitter.com/xi7RVz5UvW
— ISRO (@isro) August 23, 2023