‘கீழடி அறிக்கைகள் தாமதம் ஏன்?’ : மக்களவையில் ராணி ஸ்ரீகுமார் MP கேள்வி
கீழடி முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் அச்சிடப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படுவதில் இன்னும் தாமதம் ஏன்? என மக்களவையில் தி.மு.க எம்.பி ராணி ஸ்ரீகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி ராணி ஸ்ரீகுமார், ”2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட கீழடி முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் அச்சிடப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படுவதில் இன்னும் தாமதம் ஏன்?.
மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் நடைப்பெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் பட்டியல் அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்பட்ட தேதியுடன் வெளியிட வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல், நடப்பு நிதியாண்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியின் சதவிகிதம் எத்தனை என கேட்டு ஆரணி தொகுதி திமுக எம்.பி. தரணிவேந்தன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ”பயிற்சி மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட முதன்மை, இடைநிலை, உயர்கல்வி, தொழிற்கல்வி போன்றவற்றிற்கு பிரிவுவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி, தமிழ்நாட்டில் எல்லோரையும் உள்ளடக்கிய தரமான கல்வியை வழங்குவதற்காக ஒன்றிய அரசின் எந்தெந்த திட்டங்களுக்கு இந்நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது மற்றும் மொத்த ஜிடிபியில் கல்விக்கான ஆறு சதவீதத்தை எட்டுவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?” என திமுக எம்.பி. தரணிவேந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், ”அரசிடம் இரசாயனக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்காக பதிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் உள்ளதா என்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் விதியை மீறி இறக்குமதி செய்பவர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை மற்றும் அப்புகார்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களையும் வெளியிடுமாறு” மக்களவையில் தி.மு.க எம்.பி ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.