வேம்பு சினிமா விமர்சனம் : வேம்பு சமூக அக்கறையுடன் பெண்களின் பாதுகாப்பிற்கு தற்காப்புக் கலையைப் பற்றிய அழுத்தமான பதிவு | ரேட்டிங்: 3/5
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் ஷ_ர்ஸ், எஸ் விஜயலட்சுமி தயாரித்து ஷீலா, ஹரி கிருஷ்ணன் நடித்திருக்கும் வேம்பு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வி ஜஸ்டின் பிரபு
தொழில்நுட்ப கலைஞர்கள்:- பாடகர் – அந்தோனி தாசன், மணிகண்டன் முரளி, பாடல் – வி ஜஸ்டின் பிரபு , இசை – மணிகண்டன் முரளி, எடிட்டிங்- வெங்கட்ரமணன் , ஒளிப்பதிவு – ஏ.குமரன், கலை இயக்குனர் – கோபி கருணாநிதி, பிஆர்ஒ- ஜான்.
வேம்பு கிராமத்தில் வளர்ந்த பெண், தன் தந்தையின் எண்ணப்படி சிலம்பம் கற்று நல்ல தேர்ச்சி பெற்று சிறந்து விளங்குகிறார்.சிறு வயதிலிருந்தே தற்காப்புக் கலையை பெண்கள் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும், படிப்பறிவும் முக்கியம் என்றும் தந்தையின் அறிவுரையை கடைப்பிடித்து அந்த கிராமத்திலேயே முன் மாதிரியாக தைரியமான பெண்ணாக வளர்கிறார். அத்தை மகன் புகைப்படக்கலைஞராக இருக்கும் சக்திவேல்(ஹரி கிருஷ்ணன்) வேம்பு மீது காதல் இருந்தாலும் வேம்புவின் சம்மதத்திற்காக பொறுமையாக காத்திருக்கிறார். முதலில் படித்து முடித்து விட்டு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே வேம்புவின் ஆசை. இதனிடையே வேம்புவின் தந்தையிடம் செங்கல் சூலை முதலாளி மகளுக்கு சீக்கிரம் திருமணம் செய்து விட அறிவுறுத்தி பணமும் கொடுக்கிறார்.தந்தையின் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காத வேம்பு முதலில் தயங்கினாலும் பின்னர் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். தந்தையும் சக்திவேலுக்கும் வேம்புவிற்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறார். புதிய வாழ்க்கையை தொடங்கியிருக்கும் நேரத்தில் சக்திவேலுக்கு விபத்து ஏற்பட்டு பார்வை திறனை இழக்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் வேம்பு, மருத்துவரிடம் அழைத்துச் செல்ல சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்தால் படிப்படியாக குணப்படுத்திவிடலாம் என்கிறார். அன்றாட செலவுகளுக்கே திண்டாடும் நிலையில், புகைப்பட கலைஞராக களமிறங்கி கணவரின் ஒத்துழைப்போடு சம்பாதிக்க தொடங்குகிறார். தற்காப்பிற்காக கற்ற சிலம்பத்தை கிராமத்திற்குள் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு கற்றும் கொடுக்கிறார். இவரின் கற்றுக் கொடுக்கும் திறனால், வேம்புவிற்கு கிடைத்த அங்கீகாரம் என்ன? சக்திவேலுக்கு பார்வை கிடைத்ததா? இவர்களின் வறுமை விலகி வசந்தம் வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஷீலா ராஜ்குமார் வேம்புவாக ஒரு சக்திவாய்ந்த நடிப்பை வழங்கி நேர்மையையும் வலிமையையுடன் துன்பத்திலும் மனம் தளராமல் தைரியமான குணத்துடன் போராடி வெற்றி இலக்கை நோக்கி பயணிக்கும் கிராமத்து பெண்ணாக மிளிர்கிறார். சிலம்ப வித்தையை நேர்த்தியாக கற்று சிறப்பாக செய்துள்ளார்.
ஹரி கிருஷ்ணன் சக்திவேலாக, மாமன் மகளை காதலித்தாலும், அவளின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து பெரிய சாதனை செய்ய வேண்டும் என்று நினைக்கும் இடத்தில் மனதில் நிற்கிறார். பின்னர் கண் பார்வை பறிபோனதும் அதிர்ச்சியில் உறைந்து, மனைவிக்கு உறுதுணையாக இருந்து கற்று தந்து அரவணைப்புடன் நடந்து கொண்டு அமைதியான வலிமையை தந்து இருக்கிறார். மற்றும் இவர்களுடன் நடித்திருக்கும் அத்தனை கிராமத்து முகங்களும் படத்திற்கு பலம்.
தொழில்நுட்ப ரீதியாக, படம் ஒரு சாதாரண கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை குமரனின் ஒளிப்பதிவு நம்பத்தகுந்ததாக மாற்றி கொடுத்திருக்கிறார்.
இசை மற்றும் பாடல்கள் கடந்து செல்லக்கூடிய கதைக்குள் இனிமையாக பயணிக்கிறது.
ஏடிட்டிங் வெங்கட்ரமணன்; கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சிலம்பத்தை மையமாக வைத்த திரைக்கதையில் அதை சரிவர திரைக்கதையில் பயன்படுத்தப்படாமல், வேறு கோணத்தில் பயணித்து, இறுதியில் தற்காப்புக் கலை பெண்கள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திடீர் மாற்றங்கள் மற்றும் தோய்வான வேகத்துடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வி ஜஸ்டின் பிரபு.
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் ஷ_ர்ஸ், எஸ் விஜயலட்சுமி தயாரித்திருக்கும் வேம்பு சமூக அக்கறையுடன் பெண்களின் பாதுகாப்பிற்கு தற்காப்புக் கலையைப் பற்றிய அழுத்தமான பதிவு.