வீராயி மக்கள் விமர்சனம் : வீராயி மக்கள் மனதை கவரும் பாசமிக்க கிராமத்து கூட்டுக் குடும்ப போராட்டம் | ரேட்டிங்: 3/5

0
412

வீராயி மக்கள் விமர்சனம் : வீராயி மக்கள் மனதை கவரும் பாசமிக்க கிராமத்து கூட்டுக் குடும்ப போராட்டம் | ரேட்டிங்: 3/5

ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்திருக்கும் வீராயி மக்கள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நாகராஜ் கருப்பையா.

இதில் வேல ராமமூர்த்தி, மாரிமுத்து , தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்: இசையமைப்பாளர் – தீபன் சக்ரவர்த்தி, எடிட்டர் – முகன் வேல், ஒளிப்பதிவாளர் – எம்.சீனிவாசன்,  பாடலாசிரியர் – நாகராஜ் கருப்பையா மற்றும் கேஜிஎஃப் மதுரகவி, மக்கள் தொடர்பு -ஏய்ம் சதீஷ்.

அறந்தாங்கியில் உள்ள கிராமத்தில் முதல் மகன் வேலராமமூர்த்தி, இரண்டாவது மகன் மாரிமுத்து, மூன்றாவது மகள் தீபா சங்கர், நான்காவது மகனையும் கணவனை இழந்த வீராயி விறகு சுமந்து கஷ்டப்பட்டு தன் நான்கு பிள்ளைகளை வளர்கிறார். இந்த குடும்பத்தில் மற்றவர்கள் விவசாயத்தை பார்த்துக் கொண்டு கடைசி மகனை மட்டும் நன்றாக படிக்க வைக்கின்றனர். வேலராமமூர்த்திக்கு ரமாவையும், மாரிமுத்துவிற்கு செந்தி குமாரியையும் மணமுடிக்க, தீபா சங்கருக்கும் மணமாகி பக்கத்து கிராமத்திற்கு சென்று விடுகிறார். வீராயி தன் இருமகன்கள், மருமகள்கள், பேரன்களுடன் ஒன்றாக வசிக்கிறார். கடைசி மகன் வெளியூருக்கு சென்று படிக்கிறான்.  வீராயி மற்றும் அனைவரிடமும்  இளைய மருமகள் செந்தி குமாரி எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.  கிராமத்தில் மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்படுகிறது. அதனால் வேலராமமூர்த்தி திருப்பூருக்கு குடும்பத்துடன் சென்று வேலை செய்து பணம் அனுப்புகிறார். நாளடைவில் பணம் வந்தவுடன் இளைய மருமகளின் நடவடிக்கை பிடிக்காமல் சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார் வீராயி. பெரிய மகன் வேலராமமூர்;த்தி ஊரிலிருந்து திரும்பி வந்து தாயை சமாதானப்படுத்தி தன்னுடன் வைத்துக் கொள்கிறார். வெளியூரில் படிக்கும் கடைசி மகனும் படித்து முடித்து விட்டு அங்கேயே கலப்பு திருமணம் செய்து கொண்டு வேலை செய்து வாழ்கிறார். மகன்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லாமல் போக சொத்தை பிரிக்க மாரிமுத்து பஞ்சாயத்தை கூட்ட அனைத்து சொத்துக்களும் பிரிக்கப்பட்டு குடும்பமே சிதறி விடுகிறது. இதனால் மனஉளைச்சலில் வாழும் வீராயி நாளடைவில் மரணமடைகிறார். இது இரண்டாம் பாதியில் வரும் ஃபிளாஷ்பேக் கதையின் சுருக்கம். அன்றிலிருந்து மகன்கள் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை இல்லாமல் தனித்தனியே குடும்பத்துடன் சென்று விரோதிகளைப் போல் வாழ்கின்றனர்.  வேலராமூர்;த்தியின் இளைய மகன் சுரேஷ் நந்தா அத்தை தீபா சங்கரின் மகளான நந்தனாவை பார்த்தவுடன் காதலிக்க தொடங்குகிறார். ஆனால் நந்தனா பிரிந்த குடும்பத்தால் தன் தாய் கஷ்டப்படுவதை பார்த்து இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறார். சுரேஷ் நந்தா பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து திருமணத்தை நடத்தி வைக்க ஏற்பாடு செய்வதாக கூற இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இவர்களால் பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்ததா? அவர்களது பகையை தீர்க்க முடிந்ததா? அனைவரும் ஒற்றுமையாக வீராயி மக்களாக வாழ்ந்தார்களா? என்று கூட்டு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை கோர்வையாக சொல்கிறது மீதிக்கதை.

பெரிய அண்ணனாக வேல ராமமூர்த்தி கம்பீரமான நடை, உடை, பார்வையுடன் தம்பிகளின் மேல் பாசத்துடன் இருப்பது, அவர்களுக்காக வாழ்வது, தாயை உதாசீனப்படுத்திய உடன்பிறப்புகளை வெறுத்து ஒதுக்கி விலகிச் செல்வது இறுதியில் பாசத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது என்று அக்மார்க் கிராமத்து பாசக்கார மனிதராக வாழ்ந்துள்ளார்.

இரண்டாவது மகனாக மறைந்த மாரிமுத்து அண்ணனின் பேச்சை தட்டாத தம்பியாக இருப்பதும், திருமணம் முடிந்தவுடன் மனைவியை விட்டுக்கொடுக்காமல் சண்டைப்போட்டு அண்ணனிடம் பகைமையோடு இருப்பது, பின்னர் தன் தவறை உணர்ந்து அண்ணனிடம் மன்னிப்பு கேட்பது என்று இயல்பாக செய்துள்ளார்.

தங்கையாக தீபா சங்கர் சில காட்சிகள் யதார்த்தமான நடிப்பை கொடுத்தாலும் பல இடங்களில் ஒவரான நடிப்பை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

தயாரிப்பாளரும் வேல ராமமூர்த்த்தியின் இளைய மகனாக வரும் சுரேஷ் நந்தா அளவாக நடிப்பை வெளிப்படுத்தி நந்தனாவை காதலிக்க மட்டும் செய்து படத்தில் மற்றவர்களுக்கு அதிக அளவு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

அமைதியான வேல ராமமூர்த்தியின் மனைவியாக வரும் ரமா நல்ல மருமகளாக இருப்பதும் குடும்பத்தை அரவணைத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

தன் கணவனை பிரித்து கொண்டு செல்வதிலேயே அதிக கவனம் செலுத்தும் செந்தி குமாரி வாய் சண்டை போட்டு அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கும் அளவிற்கு வசனம் பேசி நடித்திருக்கிறார்.

வீராயீயாக நடித்திருக்கும் பாண்டியக்கா தன் குழந்தைகளுக்காக ஓயாது உழைத்து வளர்ப்பது, பின்னர் ஒற்றுமையாக இல்லாமல் பிரிந்து செல்லும் பிள்ளைகளின் மனநிலையை எண்ணி வருந்தி உயிரை விடுவது என்று தாயின் வேதனைகளையும், வலிகளையும் நிஜமாகவே நம் கண் முன்னே நிறுத்தி படத்திற்கு தூணாக தாங்கி பிடிக்கிறார்.

மற்றும் ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா ஆகியோர் கிராமத்து மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

இயக்குனர் நாகராஜ் கருப்பையா மற்றும் கேஜிஎஃப் மதுரகவி பாடல்களை அர்த்தத்தோடும் மனதில் பதியும்படி சிறப்பாக இசையமைத்துள்ளார் தீபன் சக்கரவர்த்தி.

ஒளிப்பதிவாளர் – எம்.சீனிவாசன் காட்சிக் கோணங்கள் புதுக்கோட்டை, அறந்தாங்கி கிராமத்து வாழ்வியலை படம் பிடித்து, பஞ்சத்தின் நிலைமை, இரு குடும்பங்கள் வசிக்கும் தெருவில் நடக்கும் சண்டைகள், கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்துக்களை காட்சிகளில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

எடிட்டர் – முகன் வேல் சில காட்சிகளை இன்னும் எடிட் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

அன்பான தாயின் வளர்ப்பில் வளரும் பிள்ளைகள் பின்னர் திருமணம் செய்து கொண்டு சண்டையிட்டு உறவுகளை பிரிந்து தனியே செல்வதையும், பின்னர் தங்கள் தவறை உணர்ந்து கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையாக வாழ முடிவு செய்வதையும் காதலை கலந்து உணர்ச்சிகளின் பிம்பமாக திரைக்கதையாக அமைத்துள்ளார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா. கிராமத்து மண் மணம் மாறாமல் கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் உன்னதத்தை, அரவணைத்து செல்லும் பக்குவத்தையும், முக்கியமாக சந்தோஷத்தையும் காணலாம் என்பதையும் குடும்ப பிரிவினையால் முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் ஒருவரையொருவர் அதை மறந்து விட்டுக் கொடுத்து அரவணைத்து செல்வதே கூட்டுக் குடும்பத்தின் மகிமை என்பதை புரிய வைத்துள்ளார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா.

மொத்தத்தில் ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்திருக்கும் வீராயி மக்கள் மனதை கவரும் பாசமிக்க கிராமத்து கூட்டுக் குடும்ப போராட்டம்.