பீட்சா -3 தி மம்மி திரைப்பட விமர்சனம்:
பீட்சா -3 தி மம்மி த்ரில்லிங் அனுபவத்தை திருப்பங்கள் நிறைந்து பழி வாங்கி திகிலோடு பயமுறுத்தும் உணவகம் | ரேட்டிங்: 3/5
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில்; சி.வி.குமார் தயாரித்திருக்கும் பீட்சா -3 தி மம்மி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மோகன் கோவிந்த்.
நடிகர்கள்: அஷ்வின் காக்குமானு, பவித்ரா மாரிமுத்து, கௌரவ், கவிதா பாரதி, அனுபமா குமார், அபி நட்சத்திரா, காளி வெங்கட் மற்றும் குரைஷி.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை: அருண்ராஜ,ஒளிப்பதிவு : பிரபு ராகவ்,படத்தொகுப்பு : இக்னேசியஸ் அஸ்வின்,மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
பிரட் அண்ட் சாக்லேட் உணவகத்தின் உரிமையாளரார் நளன். ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் செயலியை உருவாக்கும் கயலை காதலிக்கிறார். கயலின் சகோதரர் போலீஸ் அதிகாரி பிரேமிற்கு நளனை பிடிக்காததால் வேறொரு பணக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார். மேலும் நளன் மற்றும் கயலை பிரிப்பதற்கான வாய்ப்பு தேடுகிறார். இந்நிலையில் ஒரு நாள், நளனின் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர் ஒரு பழங்கால எகிப்து மம்மி சிலை பொம்மையை கொண்டு வந்து அங்கேயே மறந்து விட்டுச் செல்கிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, உணவகத்தில் விசித்திரமான விஷயங்கள் நடக்கத் தொடங்குகிறது. உணவகத்தின் குளிர்சாதனப்பெட்டியில் இரவானால் அற்புதமான சுவையுடன் கூடிய இனிப்பு தயாராக இருக்க,ஹோட்டல் ஊழியர்கள் நளன்தான் புதிய செய்முறையால் தயாரித்திருப்பதாக நினைக்கிறார்கள். விசித்திரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதை உணர்ந்த நலன் இரவில் சில அசைவுகளை கவனிக்கத் தொடங்குகிறார். மேலும் நலன் செல்லும் இடமெல்லாம் பல கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. அந்த கொலையை நலன் செய்தார் என்று போலீஸ் அதிகாரி பிரேம் சந்தேகித்து நலனை விசாரிக்கிறார். நடைபெறும் விசித்திரமான நிகழ்வுகள் மற்றும் கொலை பழி நலனை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆகையால் உணவகத்திற்குள் என்ன நடக்கிறது என்று கண்டறிய அவர் தனது ஹோட்டல் சமையலறைக்குள் ஒரு வீடியோ கேமராவை நிறுவ உள்ளே ஆவி நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். நளன் உணவகத்தில் அமானுஷ்ய ஆவி பயமுறுத்துவது ஏன்? தொடர் கொலைகள்; ஏன் நடக்கிறது? அதன் பின்னணி என்ன? நளன் இதிலிருந்து தப்பித்தாரா? என்பதே ‘பீட்ஸா 3 – தி மம்மி’ படத்தின் மீதிக்கதை.
அஷ்வின் காக்குமானு புதுவித துரித உணவகத்தை நடத்தும் இளைஞராக, திடீரென்று வித்தியாசமான உணவை கண்டுபிடிக்கும் போது அதிர்ச்சியாவதும், அதன் பின் துணிச்சலாக உணவகத்தில் நடக்கும் சம்பவங்களை கண்டறிந்து, அதற்கான தீர்வை தைரியமாக மேற்கொண்டு, பயமுறுத்தும் ஆவியின் கதையை கேட்டு மனஉளைச்சல் ஆவதும், தானும் இதற்கு காரணம் என்பதையறிந்து மனமுடைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை கொடுப்பது என்று படம் முழுவதும் தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.
காதலி கயலாக பவித்ரா மாரிமுத்து,உணவகத்தின் சமையல்காரர்களில் ஒருவர் தாமுவாக காளி வெங்கட், குரைஷி, போலீஸ் அதிகாரியாக வரும் கௌரவ் நாராயணன், இரண்டாம் பாதியில் பாசமான தாய் ராணியாக அனுபமா குமார், இவரது மகள் மித்ராவாக அபி நக்ஷத்ரா, வில்லனாக வரும் கவிதா பாரதி ஆகியோர் கதாபாத்திரத்திற்கேற்ற அசத்தலான கவனத்தை ஈர்க்கும்படி நேர்த்தியாக கொடுத்துள்ளனர்.
பிரபு ராகவ் ஒளிப்பதிவு, இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு, அருண் ராஜ் இசை மற்றும் பின்னணி இசை திகில் படத்தின் அத்தனை அம்சங்களையும் கலந்து பயமுறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒரு இனிப்பு சுவையில் ஆரம்பித்து உணவகம்; அமானுஷ்யமாக மாறும் இடமாக கதைக்களத்தை உருவாக்கி அதில் பழிவாங்கும் ஆவிகளின் பிளாஷ் பேக்குகள்,சுவராஸ்யமான நிகழ்வுகள், பயமுறுத்தும் தொழில்நுட்பங்களுடன் ஒரு திகில் அனுபவத்துடன் திறம்பட அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த்.வெல்டன்.
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில்; சி.வி.குமார் தயாரித்திருக்கும் பீட்சா -3 தி மம்மி த்ரில்லிங் அனுபவத்தை திருப்பங்கள் நிறைந்து பழி வாங்கி திகிலோடு பயமுறுத்தும் உணவகம்.