தக் லைஃப் சினிமா விமர்சனம்

0
1994

தக் லைஃப் சினிமா விமர்சனம் : தக் லைஃப் மாஸ், ஆக்ஷன் கலந்த த்ரில்லிங் அனுபவத்தைத் தரும் விஷுவல் ட்ரீட் | ரேட்டிங்: 3.5/5

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் கமல்ஹாசன், மணிரத்னம், ஆர் மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரித்திருக்கும் தக் லைஃப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மணிரத்னம்.

இதில் கமல்ஹாசன், சிலம்பரசன் டிஆர், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அசோக் செல்வன், அபிராமி, நாசர், மகேஷ் மஞ்சரேக்கர், சஞ்சனா, நாசர், ரோஹித் சரசூஃப், பகவதி பெருமாள், தனிகௌ பரணி, வடிவுக்கரசி, வையாபுரி, சேதன், பாபுராஜ், பாரத் ஜா, அர்ஜுன் சிதம்பரம், வையாபுரி, இரக்லி சபனாட்ஸே, சின்னிஜெயந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு  : ரவி கே சந்திரன், எடிட்டிங் :ஸ்ரீகர் பிரசாத், இசை: ஏ.ஆர். ரஹ்மான்,மக்கள் தொடர்பு : டைமண்ட் பாபு, சதீஷ்குமார் எஸ்2 மீடியா

காயல்பட்டினம் ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) தன்னுடைய கேங்ஸ்டர் வாழ்க்கை பற்றியும், தன் இட​த்தை பிடிக்க கூட்டாளிகள் எடுத்த சதி துரோக வேலைகள், தப்பித்த தருணம், பிரிந்த குடும்பம் பற்றி விவரிப்பது போல் கதைக்களம் தொடங்குகிறது.1994ஆம் ஆண்டு டெல்லியில் பெரிய கேங்ஸ்டராக இளமைப் பருவத்தில் இருக்கும் சக்திவேலுக்கு துணையாக அண்ணன் மாணிக்கம் (நாசர்),பத்ராஸ் (ஜோNஜு ஜார்ஜ்),அன்புராஜ் (பகவதி பெருமாள்) இருக்கின்றனர். எதிர் கோஸ்டி சதானந்த் (மகேஷ் மஞ்ச்ரேக்கர்) மற்றும் அவரது கும்பலால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு போலீஸ் என்கவுண்டரில் சக்திவேலின் அண்ணன் மாணிக்கம் (நாசர்) ஒரு அப்பாவி செய்தித்தாள் விற்பனையாளரான குமாரவேலை சுட்டுக்கொள்கிறார். துப்பாக்கிச் சூட்டில் தந்தை குமாரவேலை இழக்கும் அமரனும் (சிம்பு) அவரது சகோதரி சந்திராவும் (ஐஸ்வர்யா லெட்சுமி) தனித்தனியாக பிரிந்து போய்விடுகின்றனர். தந்தையை இழந்த அமரனை கேடயமாகப் பயன்படுத்தி சக்திவேல் தப்பிக்க, நன்றிக் கடனாக ஆதரவின்றி நிற்கும் அமரனைத் தனது சொந்த மகனாக வளர்க்கிறார்.அமரனிடம் துப்பாக்கிச் சூட்டின் போது, காணாமல் போன சகோதரி சந்திராவை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக சக்திவேல் வாக்குறுதி அளிக்கிறார்.அதன் பிறகு  2016 ஆம் ஆண்டு கதைக்களம் பயணிக்கிறது, தன் அண்ணன் மாணிக்கத்தின் மகள் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்லும் சக்திவேல், தன்னுடைய பொறுப்புகளை அமரனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார்.அண்ணன் மாணிக்கம் குருவான தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்காமல் அமரனிடம் கொடுத்ததை நினைத்து தம்பி சக்திவேலை பழி வாங்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார். சக்திவேல் சிறைக்கு சென்றவுடன் , அமரன் விரோதிகளிடம் நட்புறவு ஏற்படுத்தி தொழில் முன்னேற நடவடிக்கை எடுக்கிறார். சிறை தண்டனை முடிந்து வெளயே வரும் சக்திவேல் தன்னை விட மற்றவர்கள் அமரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமரன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்.இது இருவருக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது.  இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தும் மாணிக்கம், சக்திவேலுக்கு எதிராக அமரனை தூண்டி விட்டு அவரை கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுக்கிறார். நேபாளத்திற்கு கூட்டாளிகளுடன் செல்லும் சக்திவேலை, அனைவரும் சேர்ந்து கொலை செய்து தூக்கி வீசிவிட்டு செல்கின்றனர். ஆனால் சக்திவேல் புத்த துறவிகளால் மீட்கப்பட்டு மருத்துவ உதவிகள் செய்து காப்பாற்ற, இரண்டு வருடங்கள் கழித்து டெல்லிக்கு வருகிறார் சக்திவேல். அதன் பின் சக்திவேலின் ஆட்டம் தொடங்குகிறது. தன்னை கொலை செய்ய துணித்த கூட்டாளிகளை எப்படி வேட்டையாடினார்? இறுதியில் தான் எடுத்த சபதத்தை நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.கமல்ஹாசன் ரங்கராய சக்திவேலாக எப்பொழுதுமே அதே உற்சாகத்துடன் எத்தகைய கால கட்டமானாலும் வயது முதிர்ந்த கதாபாத்திரமாக இருந்தாலும் உத்வேகத்துடம் அர்ப்பணிப்புடன் பிரதிபலிக்கிறார். அவர் தனது மனைவி ஜீவாவுடன்(அபிராமி) தவறு செய்து விட்டு வந்து பணிவாக, குழைவாக பேசி பணிய வைப்பது முதல் விபாச்சார விடுதியிலிருந்து காப்பாற்றி துணையாக வைத்துக் கொள்ளும் இந்திராணி (த்ரிஷா) உடன் நேரத்தை செலவழிப்பது வரை இளமை வழிய காதல் மன்னனான வலம் வருகிறார் .சின்னவராக தாதா கும்பலை வழி நடத்துவதிலும் சரி, தன்னுடன் இருப்பவர்களின் குடும்பத்திற்கு பாதுகாவலராக இருப்பதிலும் சரி, சந்தேகப்படுவதால் ஏற்பட்ட மோதல்கள், அண்ணன்-தம்பி பிரிவினைகள், சதி வேலைகள், கொடுத்த வாக்கை இறுதியில் காப்பாற்றுவது வரை படம் முழுவதும் தன் தோளில் சுமந்து வித்தியாசமான அணுகுமுறையுடன் அசத்தலாக செய்துள்ளார் கமல்ஹாசன்.

அமரனாக சிம்பு அனாதையான தன்னை தத்தெடுத்த சக்திவேலுக்கு விசுவாசியாக இருப்பதும், அவருக்கு உறுதுணையாக குடும்பத்தில் ஒருவராக இருப்பதும், அதே சமயம் தன் தந்தையின் சாவிற்கு பழி தீர்;க்கும் விதத்தில் எடுக்கும் முடிவு, அதனால் ஏற்படும் விபரீதம் என்று தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிப்பதும், பிரிந்த சகோதரியை மீண்டும் பார்க்கும் கடைசி நேரத் தருணம் ஈர்ப்பு. இருந்தாலும் வளர்ப்புத் தந்தையின் துணையை இணையாக ஆக்கிக்கொள்ளும் போது அவருடைய கதாபாத்திரத்திரம் முக்கியத்துவம் இழக்கிறது.

இப்படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் வேண்டாத திணிப்பு. அதனால் படத்தின் சாராம்சம் பாதித்து சர்ச்சைக்கு வழி வகுக்க காரணமாகிறது படத்திற்கு மைனஸாக அமைந்து விட்டது.

அபிராமி மனைவி ஜீவாவாக கணவனின் நடந்தையின் மேல் கோபம் இருந்தாலும், அதை மறந்து சகஜமாக மாறும் சுபாவத்துடன் கலகலப்புடன் இருப்பது, அதன் பின் மறதி நோயால் அவதிப்படும் இடங்களில் நன்றாக ஸ்கோர் செய்கிறார்.

கூட்டாளியாக இருந்து வில்லனாக மாறும் நாசர்,  ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள் தங்களுடைய இருப்பை படத்தில் மிரளவைத்து பதியவைத்துள்ளனர்.

சிம்புபின் தங்கையாக வரும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி சில காட்சிகள் தான் என்றாலும் அழுத்தமான நடிப்பு. அசோக் செல்வன், மகேஷ் மஞ்சரேக்கர், சஞ்சனா,ரோஹித் சரஃப், தனிகௌ பரணி, வடிவுக்கரசி, சேதன், பாபுராஜ், பாரத் ஜா, அர்ஜுன் சிதம்பரம், வையாபுரி, இரக்லி சபனாட்ஸே, சின்னிஜெயந்த் ஆகிய ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களுக்கு சில காட்சிகளில் வந்து போவதைத் தவிர முக்கியத்துவமில்லை.

ரவி கே சந்திரன் காட்சிக் கோணங்கள் படத்தின் மேம்பட்ட ஹாலிவுட் தரத்தில் அசத்தியுள்ளார். சண்டைக்காட்சிகள், சேசிங், டில்லி, நேபாளம், திருச்செந்தூர் ஆகிய இடங்கள், பனி படர்ந்த மலைகளின் எழில் இவற்றுடன் கேங்ஸ்டர் வாழ்வியலை நன்றாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் விறுவிறுப்பான காட்சிகளுக்கு உத்திரவாதம் தருகிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஹிட் லிஸ்டில் உள்ள அஞ்சு வண்ண பூவே, முத்த மழை, விண்வெளி நாயகா ஆகிய பாடல்களுடன் மிரள வைக்கும் பின்னணி இசையில் அசத்தியுள்ளார்.

மணிரத்னம் கமல்ஹாசனுடன் 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனை கேங்ஸ்டராக களமிறக்கியிருக்கிறார். முதிர்ந்த வயதில் இருக்கும் கமல்ஹாசன் தன்னுடைய கேங்ஸ்டர் வாழ்;க்கையில் நடந்த சம்பவங்கள், கிடைத்த உறவுகள், மனைவி, காதல் துணை, மகளின் வாழ்க்கை, கூட்டாளிகளின் பகைமை, துரோகம், பழிக்குப்பழி, தனிமை, கொடுத்த வாக்கை காப்பாற்றுதல் என்று அனைத்தையும் விவரிப்பது போல் கதைக்களம் விரிவடையும் போது பிரம்மிப்பையும், பிரம்மாண்டத்தையும் ஒருசேர காண்பது போல் படம் முழுவதும் கேங்ஸ்டரின் தனிப்பட்ட ஆதங்கம், பரிதவிப்பு, சோகத்தை திறம்பட கொடுத்து சென்டிமென்ட் கலந்து சிறந்த தொழில்நுட்ப கலைஞர்;களின் பங்களிப்போடு நேர்த்தியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

மொத்தத்தில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள தக் லைஃப் மாஸ், ஆக்ஷன் கலந்த த்ரில்லிங் அனுபவத்தைத் தரும் விஷுவல் ட்ரீட்.