டிஎன்ஏ (DNA) சினிமா விமர்சனம்

0
368

டிஎன்ஏ (DNA) சினிமா விமர்சனம் : டிஎன்ஏ ரத்த சொந்தத்தை தொலைத்து விட்டு தேடும் பெற்றோரின் மனபோராட்டம், பரிதவிப்பு கலந்த புதிய கோணத்தில் அசத்தும் புலனாய்வு த்ரில்லர் வெற்றி வாகை சூடும் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் :- ஆனந்த்தாக அதர்வா, திவ்யாவாக நிமிஷா சஜயன், சின்னசாமியாக பாலாஜி சக்திவேல், வெங்கட்டாக ரமேஷ் திலக், சிவசுப்பிரமணியமாக சேதன்,புனிதவதியாக ரித்விகா, விஜி சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இணை எழுத்தாளர் – அதிஷா, ஒளிப்பதிவாளர் – பார்த்திபன், பின்னணி இசை – ஜிப்ரான், இசை – சத்ய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சாஹி சிவா, பிரவின் சைவி, அனல் ஆகாஷ், படத்தொகுப்பாளர் – சாபு ஜோசப் வி.ஜே, வெளியீடு – ரெட் ஜெயண்ட் மூவீஸ், பிஆர்ஒ – சுரேஷ் சந்திரா, யுவராஜ்.

அறிவார்ந்த செல்வம் நிறைந்த கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்த் (அதர்வா). காதல் தோல்வி மற்றும் காதலியின் மரணத்தால் பாதிக்கப்பட்டு மது போதைக்கு அடிமையாகும் ஆனந்தை அவரது தந்தை சிவசுப்பிரமணியம் (சேத்தன்) மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டிக்கின்றனர். தந்தையின் செல்வாக்கு, தம்பியின் காதல் திருமணம் ஆனந்தின் நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறது. ஆனந்திற்கு திருமணம் செய்து வைத்தால் மன மாறுதல் ஏற்படும் என்று தந்தை நி​னைக்கிறார். இதற்கிடையே ‘Borderline Personality Disorder’ என்ற மனநிலை பிரச்சனையால் பாதிக்கப்படும் திவ்யாவிற்கு ( நிமிஷா சஜயன்)திருமணம் நடைபெறாமல் தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது. சிவசுப்பிரமணியம் தன் மகன் ஆனந்திற்கு திவ்யாவின் மனநிலை தெரிந்தே திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஆனந்த் மனம் மாறி வேலைக்கு செல்ல, திவ்யாவுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார். ஒரு வருடம் கழித்து திவ்யாவிற்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறக்கிறது. பிறந்தவுடன் குழந்தையை பார்க்கும் திவ்யா, அதன் பிறகு குழந்தையை குளிப்பாட்ட எடுத்துச் சென்று மீண்டும் உறவினர்களிடம் காட்டி விட்டு திவ்யாவின் அறைக்கு குழந்தையை எடுத்து வந்து டாக்டர் முன்னிலையில் நர்ஸ் கொடுக்கிறார்.  மயக்கம் தெளிந்து  கண் விழித்து குழந்தையை வாங்கும் திவ்யா அதிர்ச்சியாகி  அந்தக் குழந்தை தன்னுடையது இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கிறார். மருத்துவமனை டாக்டர்கள்,  செவிலியர்கள் குழந்தை திவ்யாவினுடையது தான் என்று ஆவணங்களை காட்டுகின்றனர். ஆனால் திவ்யா இதனை மறுத்து வேண்டாவெறுப்புடன் குழந்தையை வாங்கிக் கொண்டு செல்கிறார். அதன் பிறகு ஆனந்த் டிஎன்ஏ சோதனை செய்து பார்க்க, குழந்தை தங்களுடையது இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியாகிறார். ஆனந்த் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் விசாரணை நடத்துகின்றனர். போலீஸ் ஏட்டுவாக இருக்கும் சின்னசாமி (பாலாஜி சக்திவேல்) ஆனந்திற்கு பல வழிகளில் உறுதுணையாக இருந்து உதவி செய்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தையை கண்டுபிடித்தார்களா? யார் குழந்தையை கடத்தியது? குழந்தை ஆள் மாறாட்டம் எதற்காக? பின்னணியில் இருந்து செயல்படும் பெரிய கும்பலின் தலைவனை கைது செய்தார்களா? ஆனந்தின் குழந்தையை பத்திரமாக மீட்டார்களா? என்பதே படத்தின் க்ரைம் பின்னணியில் பரபரப்பான க்ளைமேக்ஸ்.

ஆனந்தாக அதர்வா ஆரம்ப காட்சியில் குடி போதையில் தள்ளாடும் நிலையில் தன்னுடைய மனநிலையை விவரித்து புலம்பும் காட்சிகளிலும், தந்தையை அவமானப்படுத்தும் இடங்களிலும், பின்னர் திருமண பந்தத்தில் இணைந்து பழைய நினைவுகளை மறந்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதும், மனைவி சொல்வதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பமான மனநிலை, குழந்தை வடிவில் வரும் சோதனை, தன்னை எதிர்க்க வரும் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் என்று ஒவ்வொரு காட்சியிலும் தன் நடிப்பால் அதிர வைத்துள்ளார். இவரின் முழு நடிப்புத்திறனை வெளிக்கொண்டு வந்திருக்கும் இப்படத்தின் மூலம் தன் திறமையை நிரூபித்து ஜெயித்திருக்கிறார்.

திவ்யாவாக நிமிஷா விஜயனின் வெகுளித்தனமாக பேச்சு, BPD பிரச்சனை உள்ள பெண்ணாக,  பிறர் சொல்வதை செய்து விட்டு வரும் மனநிலை, தாயின் அடியை தாங்கிக் கொள்ளாமல் கதறுவது, திருமணம் நிச்சயம் ஆனவுடன் வரும் பூரிப்பு, அதன் பின் மாறும் மனநிலை, குழந்தையை பார்த்து தன்னுடைய குழந்தை இல்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்து பரிதவிக்கும் காட்சிகள், மாறிய குழந்தையை பட்டு என்று அழைத்து பார்த்துக் கொள்வது, பெற்றோர்களிடம் ஒப்படைத்த பிறகு வீட்டிற்கு வந்து கணவனிடம் மாறி மாறி புலம்புவது, இறுதிக் காட்சியில் தன் குழந்தையை தூக்கியவுடன் எற்படும் அதிர்வு, உள்ளுணர்வின் உந்துதல் என்று இயல்பான நடிப்பும், உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்று திவ்யாவாகவே வாழ்ந்துள்ளார்.வெல்டன்.

ஏட்டு சின்னசாமியாக பாலாஜி சக்திவேல், ஆனந்தின் நிலைமையை புரிந்து கொண்டு உதவி செய்யும் நல்ல மனம் படைத்த, இறுதி வரை போராடி குழந்தையை மீட்க எடுக்கும் போராட்டத்தில் பங்கு வகித்து படத்தின் முதுகெலும்பாக பிரகாசிக்கிறார்.

நண்பர் வெங்கட்டாக ரமேஷ் திலக், கண்டிப்பு மிகுந்த ஆனந்தின் தந்தை சிவசுப்பிரமணியமாக சேதன்,டாக்டர் புனிதவதியாக ரித்விகா, திவ்யாவின் தாயாக விஜி சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, ஆதிரா என்று அவரவர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை திறம்பட செய்துள்ளனர்.

முக்கியமாக இரண்டு கட்டைப்பையில் திண்பண்டங்களை விற்கும் பாட்டியாக வரும் சாத்தூர் விஜயலட்சுமி, குழந்தையை கடத்தும் விதமும், மிரட்டும் தோரணையும், எதற்கும் அசைந்து கொடுக்காத ஆணித்தரமான பேச்சு என்று அசத்தியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் பார்த்திபன் மருத்துவ க்ரைம் த்ரில்லருக்கான பங்களிப்பை தன்னுடைய காட்சிக் கோணங்களால் அதிர வைத்து மிளிர வைத்துள்ளார்.

மிரள வைக்கும் பின்னணி இசையில் ஜிப்ரான் மற்றும் பாடல்களின் இசையில் சத்ய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சாஹி சிவா, பிரவின் சைவி, அனல் ஆகாஷ் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பெரும் பலம்.

படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் வி.ஜே படத்தின் காட்சிகளில் ஒரு நொடி கூட  வீணாக்காமல் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். தடங்கலாக வரும் குத்துப் பாடலை தவித்திருக்கலாம்.

முதல் காட்சியில் விபத்தில் தொடங்கும் இரு மனிதர்களின் நட்பு, அதன் பின்னணியையும், நடக்கும் விபரீதங்கள், அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள், குழந்தை கடத்தலை மையமாக வைத்து மருத்துவ பின்னணி கலந்த திரைக்கதைக்கு பொறுத்தமான படத்தின் டைட்டிலுடன் அனைத்து காட்சிகளையும் பரபரப்பாக அதிஷாவுடன் இணைந்து எழுதி இயக்கியுள்ளார் நெல்சன் வெங்கடேசன். இருவரின் வேறுபட்ட மனநிலையை புரிந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் குடும்பத்தார்களின் பிடிவாதத்தால் ஒன்றிணையும் தம்பதியர், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், குழந்தை கடத்தல், அதற்கான காரணம், நரபலி, பெண் குழந்தை கடத்தினால் வடநாடு, ஆண் குழந்தை கடத்தினால் சுடுகாடு என்பதற்கேற்ப காட்சிகள், பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் தந்தையின் பரிதவிப்பு, ஒவ்வொரு குழந்தையையும் கண்டுபிடித்து காப்பாற்ற நெருங்கும் போது ஏற்படும் மனிதநேயம், இறுதியில் தெய்வத்திற்கும், அதர்மத்திற்கும் போராட்டத்தில் வெற்றி யாருக்கு என்று திரைக்கதை எழுதி ஆக்ஷன், சஸ்பென்ஸ் கலந்து மிரண்டு போகும் க்ரைம் த்ரில்லராக கொடுத்துள்ள இயக்குனர் நெல்சன் வெங்கடேசனுக்கு பாராட்டுக்கள்.நேர்த்தியான திரைக்கதை, சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்புடன் த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்து சமூக விழுப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் படத்தை கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

மொத்தத்தில் ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்திருக்கும் டிஎன்ஏ ரத்த சொந்தத்தை தொலைத்து விட்டு தேடும் பெற்றோரின் மனபோராட்டம், பரிதவிப்பு கலந்த புதிய கோணத்தில் அசத்தும் புலனாய்வு த்ரில்லர் வெற்றி வாகை சூடும்.