எலக்சன் சினிமா விமர்சனம் : எலக்சன் விரிவான உள்ளாட்சித் தேர்தலின் உள்குத்து குளறுபடிகளை விவரிக்கும் ஆர்ப்பாட்டமான அழுத்தமான பதிவு | ரேட்டிங்: 4/5
ரீல் குட் ஃபிலிம் சார்பில் ஆதித்யா தயாரித்திருக்கும் எலக்சன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தமிழ்
இதில் விஜய் குமார் – நடராசன், ப்ரீத்தி அஸ்ராணி – ஹேமா,ரிச்சா ஜோஷி – செல்வி, ஜார்ஜ் மரியன் – நல்லசிவம், பவெல் நவகீதன் – கனி, திலீபன் – சுதாகர், ராஜீவ் ஆனந்த் – மூர்த்தி, குலோத்துங்கன் உதயகுமார் – தியாகு ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : வசனம் – அழகிய பெரியவன் – தமிழ் – விஜய் குமார்,ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜு, இசை – கோவிந்த் வசந்தா, படத்தொகுப்பு – சி.எஸ். பிரேம் குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ்
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லசிவம் (ஜார்ஜ் மரியான்) மற்றும் அவரின் 40 வருட நண்பர் தணிகாசலம் ஆளும் தமிழ்நாடு மக்கள் கழகம் கட்சியை சேர்ந்தவர்கள். நல்லசிவத்தின் மகன் நடராசன் (விஜயகுமார்) தணிகாசலத்தின் மகள் செல்வியை (ரிச்சா ஜோஷி) காதலிக்கிறார். கட்சி துண்டு இல்லாமல் வெளியே செல்லாத அளவுக்கு கட்சிக்கு விசுவாசமானவர் நல்லசிவம் கட்சி மேலிடத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, நண்பர் தணிகாசலத்திற்கு வாய்ப்பு கேட்கிறார். ஆனால், அதற்கு தலைமை மறுக்கவே தணிகாசலம் சுயேச்சையாக நிற்க கழக விசுவாசியான நல்லசிவம் தலைமை அறிவித்த கூட்டணிக் கட்சி வேட்பாளர் தியாகுவின் வெற்றிக்குப் தேர்தல் பணியாற்றி வெற்றி பெறச் செய்கிறார். இதனால் நல்லசிவம் தணிகாசலத்தின் நட்பு முறிய, செல்வி – நடராசன் காதலுக்கு தணிகாசலம் எதிர்ப்பு தெரிவித்து செல்வியை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மணமுடித்து அனுப்பி விடுகிறார். இரு குடும்பத்தில் பகை இருந்தாலும் தணிகாசலத்தின் மகன் சுதாகரும் (திலீபன்) நடராசனின் சகோதரி கணவர் கனியும் (பாவல் நவகீதன்) சிறு வயது முதலே நண்பர்கள் என்பதால் நட்பு பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் அனுபவம் வாய்ந்த நல்லசிவத்துக்கு சொந்த கட்சியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் நல்லூரில் அவமானப்படும் தந்தையின் மானத்தைக் காப்பாற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாத நடராசன் தந்தைக்காக உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகிறார். இது நடராசனுக்கு மிகப் பெரிய சிக்கல்களை உண்டாக்கி சில உயிர்களும் போகும் நிலைமை உருவாகிறது. அதன் பின் உள்ளாட்சி தேர்தலால் நடராசன் குடும்பத்தினர்கள் சந்திக்கும் இன்னல்களும், குடும்ப பகை தடைகளைக் கடந்து தேர்தலில் நடராசன் வென்றாரா? எதிர்படும் பிரச்சனைகளை சமாளித்தாரா? என்பதே ‘எலக்சன்’ படத்தின் திரைக்கதை.
நடராசனாக விஜயகுமார் காதல் தோல்வி, பின்னர் அதிலிருந்து மீண்டு திருமணம் செய்து கொள்வதும், ஆர்வமில்லாத அரசியல் களத்தில் களமிறங்கி பல இன்னல்களை சந்திக்கும் இடங்களிலும், துரோகங்களை சந்தித்து, உணர்ச்சிகரமான காட்சிகள், ஆக்ஷன் காட்சிகளிலும் நிறைவான, ஆத்மார்த்தமான உழைப்பினை கொடுத்து தேர்ந்த நடிகராக உருமாறிக்கொண்டிருக்கிறார்.
கனியாக பாவல் நவகீதன் அற்புதமான நடிப்பையும், சுதாகராக திலீபன் அரசியல் சூழ்ச்சி நிறைந்த வில்லனாகவும், நல்லசிவமாக ஜார்ஜ் மரியன் உண்மையான விசுவாசமான தொண்டனின் குணாதிசயங்களை பிரதிபலித்து யதார்த்தமாக வாழ்ந்துள்ளார்.
இவர்களுடன் ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ராஜீவ் ஆனந்த், நாஞ்சியால் சுகந்தி, குலோத்துங்கன் உதயகுமார் ஆகியோரின் அழுத்தமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
நெத்தியடி வசனங்கள் அழகிய பெரியவன், தமிழ், விஜய் குமார், உள்ளாட்சி தேர்தல் பற்றிய அசத்தல் ஒளிப்பதிவு மகேந்திரன் ஜெயராஜு, கதையின் நடுவே பிரேக் கொடுக்கும் பாடல்கள் மற்றும் இசையில் கோவிந்த் வசந்தா, சில காட்சிகளை டிரிம் செய்திருந்தால் கூடுதலாக அசத்தியிருக்கும் படத்தொகுப்பு சி.எஸ்.பிரேம் குமார் என்று தொழில்நுட்ப கலைஞர்களின் பணி அரசியல் சார்ந்த கதைக்களத்திற்கு உயிர்நாடியாக விளங்குகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலின் புள்ளி விவரங்களோடு ஆரம்பிக்கும் மையக் கதையிலிருந்து பல துணைக்கதைகளை விவரித்து அரசியலுக்காக தங்களை நம்பியிருப்பவர்களை நேசிப்பது, வெறுப்பது, நம்புவது, கொல்லவும் துணிவது, காப்பாற்றவும் முற்படுவது என்று பல பரிணாமங்களுடன் கதைக்களம் பயணிப்பதை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி இயக்கியிருக்கிறார் தமிழ். முதல் பாதி காதல், அரசியல் கலந்த குடும்ப பகை என்று சுவாரஸ்யமாகவும், அதன் பின் தேர்தலுக்காக எடுக்கும் மெனக்கெடல்கள், வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள், சூழ்ச்சிகள், பிரச்சனைகள் விறுவிறுப்பாகவும் கொடுத்துள்ளார். திரைக்கதையை அலட்சியமாக கையாண்டிருந்தால் விவரிப்பு குழப்பமானதாக மாறியிருக்கும் ஆனால் அதை திறமையாக கையாண்டு நண்பர்கள் எதிரிகளாக மாறுவது, துரோகம், கூட்டாளிகளை மாற்றுவது, கட்சி விசுவாசத்தை மாற்றுவது மற்றும் நம்பிக்கையைப் பெறுவது மற்றும் இழப்பது என்று கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும்; அரசியல் வாழ்க்கையை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தைக் கொண்டிருப்பதால், நம் கவனமும் சிதறாமல் செல்ல வழி வகை செய்து சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் தமிழ். அரசியல் சூழ்ச்சி, பகை, வஞ்சகம் ஆகியவற்றை உள்ளாட்சி தேர்தல் களத்தை மையமாக கொண்டு மற்ற தீவிர தேர்தல் த்ரில்லர்களில் இருந்து வேறுபட்டு தனித்து நின்று ஜெயித்திருக்கிறார் இயக்குனர் தமிழ்.
மொத்தத்தில் ரீல் குட் ஃபிலிம் சார்பில் ஆதித்யா தயாரித்திருக்கும் எலக்சன் விரிவான உள்ளாட்சித் தேர்தலின் உள்குத்து குளறுபடிகளை விவரிக்கும் ஆர்ப்பாட்டமான அழுத்தமான பதிவு.