Mandaadi : ‘சம்பாரிச்ச பணம் போதும் – இனிமேல் நல்ல படங்கள் மட்டும்தான் பண்ணணும்’ – மனம் திறந்து பேசிய சூரி

0
215

Mandaadi : ‘சம்பாரிச்ச பணம் போதும் – இனிமேல் நல்ல படங்கள் மட்டும்தான் பண்ணணும்’ – மனம் திறந்து பேசிய சூரி

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் ‘மண்டாடி’. சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகிறது.

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், திரு எல்ரெட் குமார் தலைமையில், தனது 16வது தயாரிப்பு முயற்சியாக “மண்டாடி” எனும் புதிய திரைப்படத்தை உருவாக்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்‌ஷன் டிராமா திரைப்படம், பாரம்பரிய சூழலோடு எதிர்பார்ப்புகளை தூண்டும் படமாக அமையவிருக்கிறது.

“செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இப்படத்தையும் எழுதி இயக்குகிறார். கடந்த படத்தைவிட பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்து வரும் அவர், இப்படத்தினால் மேலும் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வார். இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார், இதனால் படம் தெற்கிந்தியாவில் பரந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கதா நாயகியாக மஹிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சத்யராஜ், ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் தங்களது திறமையான நடிப்பின் மூலம் உணர்வுப்பூர்வான இந்த கதைக்கு பலமளிக்க போகின்றனர்.

இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பங்களிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில்  இதன் டைட்டில் வெளியிடப்பட்டு படத்திற்கான அறிவிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி படத்தை பற்றி கூறியதாவது:

“எனது கனவைப் புரிந்து கொண்டு, என் கதையை கேட்பதற்கு, இந்த வாய்ப்பை அளித்த எல்ரெட் சார் மற்றும் வெற்றிமாறன் சார்க்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். சூரி sir ன் காமெடியன் to கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. சூரி சாரின் விஷன் மற்றும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது — அதை சூரி போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

வெற்றிமாறன், படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக இருக்கின்றது எனக்கு ஒரு ஊக்கமும் வழிகாட்டுதலுமாக இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையும், எஸ்.ஆர். கதிர் அவர்களின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்‌ஷன் படமாக உருவாகிக்கொண்டு வருகிறது” என்றார் .

நடிகர் சூரி கூறியதாவது:

“இப்படத்தின் ஆரம்பத்திலேயே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவே பிரமாண்டாமாக நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் ரொம்ப கொடுத்து வச்சவன். இது எல்லாத்துக்கும் காரணம் வெற்றிமாறன் அண்ணன்தான். எல்லா மேடைகளிலும் இதை நான் சொல்லுவேன்.

சுசீந்திரன் அண்ணன் எனக்கு வாய்ப்புக் கொடுத்து பல படங்களில் நடித்தேன். அதற்குப் பிறகு வெற்றிமாறன் அண்ணன் என் மீது வைத்த நம்பிக்கையில், அவர் கொடுத்த வாய்ப்பில் கதைநாயகனாக மாறியிருக்கிறேன்.

பெயின்டராக இருந்து நடிகராக மாறி இதுவரைக்கு என் தகுதிக்கு மீறி நல்லா சம்பார்ச்சிட்டேன். இனி எனக்குப் பிடிச்ச மாதிரி, நல்ல நல்ல கதையுடன் படங்கள் பண்ணினா போதும்.

கலைத்தாய் எனக்கு வாய்ப்புகள் கொடுத்த நல்லா வச்சிருந்தாலே போதும். எல்ரெட் குமார் அண்ணோட திரும்ப திரும்ப வேலை பார்க்கிறது ரொம்ப சந்தோஷம்.

எல்லா படத்திலும் துணையாக நிற்கிறார் வெற்றிமாறன் அண்ணன். ‘விடுதலை’ வெற்றிமாறன் அண்ணனால சிறப்பாக அமைஞ்சது. அதுக்கு அப்றம் ‘கருடன்’ படமும் அவர் மூலமாக, அவரோட நிறைய பங்களிப்பில் சிறப்பாக அமைஞ்சது.

இப்போது இந்தப் படமும் அவர் மூலமாக, அவரோட பங்களிப்பில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு எப்பவும் துணையாக இருக்கார் வெற்றி அண்ணன்.

‘மாமன்’ படத்தோட கதைக்கூட வெற்றிமாறன் அண்ணன்கிட்ட சொன்னேன். அவர் சில விஷயங்களை மாற்ற வேண்டும் எனப் பல அறிவுரைகளைக் கொடுத்து, “இந்தப் படம் நல்லா வரும். நல்ல குடும்பக் கதை, எல்லோருக்கும் பிடிக்கும்” என்று சொன்ன பிறகுதான் நடிச்சேன்.

இந்தப் படத்திலயும் அவரது நிறைய அறிவுரைகளைக் கேட்பேன். இந்தப் படமும் சிறப்பாக எனக்கு அமையும்.

‘கருடன்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைக்கணும்னு எவ்வளவோ முயற்சி செய்தேன், நடக்கல. ‘மாமன்’ படத்துக்கும் ரொம்ப முயற்சி செய்தேன், அது எதுவும் நடக்கல. இப்போ இந்தப் படத்துல அது நிறைவேறி இருக்கு.

ஜல்லுக்கட்டு மாதிரிதான் பாய்மரப் போட்டியும். அலைகளோட மல்லுக் கட்டி, கடலில் நடக்கும் வீரமிக்கப் போட்டியைக் கதையாக எடுக்க நினைத்த இயக்குநர் மதிமாறன் புகழேந்தி அண்ணனுக்கு நன்றி.

கடல் சார்ந்த மக்களின் வீரமிக்கப் போட்டியைத் திரையில் கொண்டு வந்து, எல்லோருக்கும் சொல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு மாதிரி நம் தமிழ் மக்களின் வீரமிக்க விளையாட்டு இது.

இதைத் திரைபடமாக எடுக்கிறோம். முதலில் அம்மக்களுக்கு எங்களுடைய நன்றியைச் சொல்லி இப்படத்தைத் தொடங்குகிறோம்.” என்றார்.

படத்தின் முக்கிய தொழில்நுட்பக் குழு:

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர் ISC

கலை இயக்கம்: டி.ஆர்.கே. கிரண்

எடிட்டிங்: பிரதீப் ஈ. ராகவ்

ஆக்‌ஷன்: பீட்டர் ஹைன்

சத்த ஒலி வடிவமைப்பு: பிரதாப்

VFX: ஆர். ஹரிஹரசுதன்

மற்ற குழுவினர்:

இணை தயாரிப்பு: வி. மணிகண்டன்

உடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன்

நடன அமைப்பாளர்: ஆசர்

கூடுதல் எழுத்து: ஆர். மோகனவசந்தன், திரள் சங்கர்

மேக்கப்: என். சக்திவேல்

உடைதாரர்: நாகு

DI: கிளெமெண்ட்

பப்ளிசிட்டி ஸ்டில்ஸ்: கபிலன்

ஸ்டில் புகைப்படம்: ஜி. ஆனந்த் குமார்

விளம்பர வடிவமைப்பு: எஸ்தடிக்ஸ் குஞ்சம்மா

தயாரிப்பு நிர்வாகி: எஸ்.பி. சொக்கலிங்கம்

நிர்வாக தயாரிப்பாளர்: ஜி. மாகேஷ்

பி.ஆர்.ஓ: ரேகா

மண்டாடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏப்ரல் 19ஆம் தேதி ஊடகங்களின் முன்னிலையில் மிக விமர்சையாக வெளியிடப்பட்டது. அதன் தாக்கம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் look test முடிந்த கையோடு pre production பணிகளுக்காக பட குழு ராம்நாடு சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் குழுமி இருக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. காதல், விடாமுயற்சி, மீட்பு மற்றும் உறவுகளின் பின்னணியுடன் விளையாட்டு உலகத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான பயணமாக, இது உருவாகிறது.

பத்திரிகையினருக்காக “மண்டாடி” படக்குழுவால் தயாரிக்கப்பட்ட படகுப் பந்தய உலகம் குறித்த ஒரு ஆவண வீடியோ வெளியிடப்பட்டது. அதில் உள்ள டிராமா, இப்படத்தின் வித்தியாசமான பின்னணியைக் காட்டியது.

மண்டாடி என்றால் என்ன?

காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர்.

மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல,பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக்கூடியவர் மண்டாடி.

மண்டாடி விரைவில் வருகிறது. ஆவலுடன் காத்திருக்குங்கள்!