‘திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.. தற்போதைய பெயர்களை பார்த்து துக்கப்படுகிறேன்’ – ‘பனை’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு!

0
240

‘திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.. தற்போதைய பெயர்களை பார்த்து துக்கப்படுகிறேன்’ – ‘பனை’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு!

ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி பேசும் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார். ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். கீரவாணியிடம் பணியாற்றிய மீராலால் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தில் ஹரிஷ் பிரபாகரன் நாயகனாக நடிக்க, மேக்னா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘பனை’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. கவிப்பேரரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பேரரசு, அரவிந்தராஜ், தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தி பேசிய தயாரிப்பாளர் எம்.ராஜேந்திரன், “கவிப்பேரரசு ஐயா உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைத்து விருந்தினர்களையும் வருக..வருக..என வரவேற்கிறேன். இந்த படத்தை எடுக்க காரணம், பனைத்தொழில் பாதுகாக்கப்பட வேண்டும், பனைதொழிலாளிகளின் வாழ்க்கையை சொல்ல வேண்டும் என்பது தான். என்னுடைய இணை தயாரிப்பாளர் பிரபாகரன் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். யார் யார் என்ன தொழில் செய்தாலும் சரி, பனை மரங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அதன் நன்மைகள் கிடைக்கப்பெற வேண்டும், என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். இதற்காக தான் நம் கவிஞர் ஐயா வைரமுத்து அவர்களை பாடல் எழுத வைத்தோம், அவர் இந்த படத்திற்கு பக்கபலமாக இருக்கிறார். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இசையமைப்பாளரும் நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் பல விருதுகளை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.

நாயகி மேக்னா பேசுகையில், “மேடையில் பெரிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள், அவர்கள் முன்பு பேசும் போது கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படத்தில் எனக்கு ஒரு சோலோ பாடல் இருக்கிறது, அந்த பாடல் வைரமுத்து சார் வரிகளில் அமைந்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி, அவர்கள் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

நாயகன் ஹரிஷ் பிரபாகரன் பேசுகையில், ”எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத தயாரிப்பாளர் ராஜேந்திர அண்ணனுக்கு நன்றி. வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள், வைரமுத்து ஐயா, பேரரசு சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் மீராலால் பேசுகையில், “மேடையில் எனக்கு பேச தெரியாது. இங்க இருக்கிற பெரியவர்கள் அருகில் நான் உடகார்ந்ததே பெருமையாக இருக்கிறது. முதலில் வாய்ப்பு கிடைக்க வேண்டும், அப்போது தான் நாம் நிரூபிக்க முடியும். அதனால், எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. அதேபோல், என்னுடன் பணியாற்றிய் பாடகர்கள், இசைக்கலைஞர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாடல்களை நீங்கள் கேட்டிருப்பீங்க, அதனால நீங்க தான் சொல்லனும். படம் நிச்சயம் வெற்றி பெறும், அதுபோல் பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும், என்று நம்புகிறேன்.” என்றார்.

நடிகை வடிவுக்கரசி பேசுகையில், “அதிகமான விருதுகள் வாங்கியிருக்கும் வைரமுத்து சார் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கிறார் என்றால் இந்த படம் நிச்சயம் நிறைய விருதுகளை வாங்கும். இந்த படத்தில் நாங்கள் கஷ்ட்டப்பட்டு நடித்தோம். அந்த அளவுக்கு வெயில் அதிகமாக இருந்தது. கேரோ வேன் உள்ளிட்ட வசதி எல்லாம் இல்லை. பனைமர ஓலையின் நிழலில் நின்று தான் நடித்தோம். நாங்கள் பட்ட கஷ்ட்டத்தை மேலே இருக்கிற பிரபஞ்சம் ஏற்றுக்கொண்டது என்றால், இந்த படத்திற்கு நிறைய விருதுகள் கிடைக்கும்.

படத்தின் ஒளிப்பதிவாளர், இயக்குநர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். ஹீரோ கதபாத்திரத்திற்கு ஏற்ற இன்னொசண்டாக இருக்கிறார், ஹீரோயின் அழகா இருக்காங்க, இரண்டு பேரும் சேர்ந்து ரொம்ப கஷ்ட்டப்பட்டு நடிச்சாங்க, நிச்சயம் அவங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. வைரமுத்து சார் பாடல் எழுதியதே பெரிய விசயம், இப்போ நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது இன்னும் பெரிய விசயம் என்றாலும் அவர் சினிமாக்காரர் என்று சொல்லலாம். ஆனால், சினிமாவுக்கு சம்மந்தம் இல்லாத விக்கிரமராஜா சார் இதில் பங்கேற்றிருப்பது ஆச்சரியமாக இருந்தது. பிறகு தான் யோசித்தேன் ஒருவேளை அவர் தான் இந்த படத்தை புரோமோட் செய்யப்போகிறார் என்று, அவருக்கு ஏகப்பட்ட தொழில்கள் இருக்கிறது, அதில் ஒன்றாக இந்த படத்தையும் விளம்பரப்படுத்தி வெற்றி பெற செய்தால், இன்னும் பல சிறிய படங்கள் வரும், எங்களை போன்றவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நிச்சயம் அவர் இதை செய்வார் என்று நம்புகிறேன். ஊடகத்தினர் இந்த படத்தை விளம்பரபடுத்தி வெற்றி பெற செய்ய உதவ வேண்டும், என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.” என்றார்.

இயக்குநர் அரவிந்தராஜ் பேசுகையில், “கவிஞர் கவிப்பேரரசு பாடல் வரிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறுவதோடு மட்டும் அல்ல அவரை போல நிறைய விருதுகள் வாங்கும் என்ற நம்பிக்க இருக்கிறது. இந்த படத்தின் அழைப்பிதழை பார்த்த போது வைரமுத்து ஐயா எழுதிய தனிப்பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அது மரத்தை அழிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் ஒரு பாடல், அந்த பாடலில் மனிதன் பிறந்ததில் இருந்து, இறப்பு வரை மரம் அவனது வாழ்வில் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை மிக அழகாக சொல்லியிருப்பார். அந்த பாடலின் இறுதியில், ”மனிதன் வாழ்க்கையில் அனைத்தும் மரம் தான் மரம் தான், ஆனால் மனிதன் இதை ஏனோ மறந்தான் மறந்தான்” என்று சொல்லியிருப்பார், எனக்கு மரங்களை பார்க்கும் போது எல்லாம் அந்த பாடல் தான் நினைவு வரும். அதேபோல் அவருடைய வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு ரசனை மிக்கதாய் இருக்கும், “மல்லிகையை நீ சூடிக்கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்” என்று எழுதியிருக்கிறார், இது யாரும் யோசிக்க முடியாத கற்பனை. இந்த இடத்தில் தான் அவர் என்னை கவர்ந்தார். நிறைய நேரம் அவரது வரிகளால் வியந்திருக்கிறேன். ”இரவின் மீது வெள்ளை அடித்தால் விடியல் என்று அர்த்தம்” என்றார். இதெல்லாம் நான் யோசிச்சி பார்க்க முடியாத கற்பனை. அப்படிப்பட்ட மனிதர் உடன் மேடையில் உட்கார்ந்திருப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

பனை மரத்தை பாதுகாக வேண்டும் என்பது அற்புதமான விசயம், நாம் செய்ய வேண்டிய விசயம். இதை படத்தில் சொல்லியிருப்பது பாராட்ட வேண்டிய விசயம். இதற்கு அற்புதமாக இசையமைப்பாளர் மணிலால் இசையமைத்திருக்கிறார். படம் நிச்சயம் திரையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்ற எனது ஆசிகளை கூறி, படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இங்க நான் பேசுவதற்காக வரல, கவிப்பேரரசு பேச்சை கேட்பதற்காக தான் வந்திருக்கிறேன். அவருடைய பேச்சை, அவரது கவிதையை நேரடியாக கேட்பதே பெரிய விசயம், அந்த பெருமைக்காக பெற தான் இங்க வந்திருக்கிறேன். கவிப்பேரரசு வைரமுத்து, என்பது வெறும் பேரல்ல. தமிழுக்கு கிடைத்த பெருமை, தமிழுக்கு கிடைத்த கெளரவம், தமிழர்களுக்கு கிடைத்த தவப்புதல்வன். அவரிடம் இருந்து தான் ஒரு விசயத்தை பின்பற்றுகிறேன். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்களுக்கு எல்லா படங்களிலும் ஒரு அறிமுக பாடல் இருக்கும். அந்த பாடல்கள் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும். உதாரணத்திற்கு ரஜினிகாந்தின் “வந்தேண்டா பால்காரன்”, “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்” போன்ற பாடல்களை சொல்லலாம். இந்த பாடல்கள் தியேட்டரோடு செல்லாமல், மக்களிடம் ஆழமாக சேரும். அப்படிப்பட்ட பாடல்களில் மெட்டுக்கு வரிகளை நிரப்பாமல், மக்களுக்கு தேவையான விசங்களை சேர்த்து எழுதுவார்கள். அந்த பாடலில் ரஜினிகாந்த் நடித்தாலும், அதன் உண்மையான ஹீரோ வைரமுத்து சார் தான். அப்படி நான் சில உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கும் போது, ஹீரோவுக்கு அறிமுகப்பாடல் வைக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது அதற்கான பாடலை வைரமுத்து சார் போல் எழுத வேண்டும், என்று நினைத்து எழுதினேன். அதனால், நான் இந்த வழியில் அவரை காப்பியடித்தேன். அதனால், என் படங்களின் தொடக்க பாடல்களை நான் எழுதினாலும், என்னை எழுத தூண்டியது வைரமுத்து சார் தான். ஆம், இந்த பேரரசை எழுத தூண்டியது கவிப்பேரரசு தான். ஒரு இசையமைப்பாளரின் ட்யூனுக்கு பாடலசியராக பாடல் எழுதுவது வேறு, ஒரு கவிஞனாக கவிதை எழுதுவது வேறு. நிறைய பாடல் ஆசிரியர்கள் பாடல் வரிகளை எழுதுவார்கள். ஆனால், வைரமுத்து சார் ட்யூனுக்கு கவிதையை மட்டுமே எழுதுவார். அவர் எழுதிய வரிகள் அத்தனையும் கவிதை. அவர் பாடல்களை சினிமா பாடல்கள் என்று சொல்லக்கூடாது, சினிமா கவிதை என்று சொல்ல வேண்டும்.

சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி செல்லும் போது கும்பகோணம் டிகிரி காபி என்று பல இடங்களில் இருக்கும். இப்போது அதுபோல் விளம்பரங்களை காணவில்லை, இப்போது இருப்பது கருப்பட்டி காபி வந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் கருப்பட்டி தான். அதிகமாக பிரபலமடைந்திருக்கும் கருப்பட்டியை மேலும் பிரபலமடைய செய்வதற்காக தான விக்கிரமராஜா அவர்கள் இந்த படத்தின் நிகழ்ச்சிக்கு கலந்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இன்று ஏகப்பட்ட பானங்கள் வந்துடுச்சி ஆனால் பனை பானத்திற்கு நிகரான பானம் எதுவுமில்லை. பனைமரம் ஏறுவது இளைஞர்களுக்கான ஒரு வீரவிளையாட்டு போல் இருந்தது. அதேபோல் பனை ஓலை போல் ஒரு ஏசி இல்லை. வெயில் காலத்தில் குளிர்ச்சியை கொடுக்கும் பனை ஓலை, குளிர் காலங்களில் வெப்பத்தை கொடுக்கும், இது அதிசயம் தானே. வைரமுத்து எழுதியிருக்கும் வரிகள் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது, பனை மரம் இல்லை என்றால் பரவைகள் எங்கே போகியிருக்கும், பனை ஓலை இல்லை என்றால் தமிழ் அழிந்துபோயிருக்கும், என்று எழுதியிருக்கிறார், அடங்கப்பா என்ன ஒரு வார்த்தை. பனை ஓலை இல்லை என்றால் தமிழ் என்னவாயிருக்கும். இன்று திருவள்ளுவரின் ஆடையை சில காவியாக மாற்றுகிறார்கள், சில கருப்பு ஆடை அணிவிக்கலாம். ஆனால், அவர் கையில் இருக்கும் பனை ஓலை என்பதை யாராலும் மாற்ற முடியாது. அது தமிழரின் அடையாளம். இவ்வளவு சிறப்புகள் நிறைந்திருக்கும் பனை படத்திற்கு வைரமுத்து பாடல் எழுதியிருப்பது அதைவிடவும் சிறப்பு. எனவே இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், “பனை மரம் என்பது என்பது ஒரு காலத்தில் சாதாரணமாக இருந்தது. அப்போது பனை பொருட்களை பயன்படுத்துபவர்கள் ஏழைகள். அப்போது அரிசி சோறு சாப்பிடுபவர்கள் பணக்காரர்கள், கம்ப கூழ், கேப்பங்கூழ் சாப்பிடுபவர்கள் ஏழைகள். ஆனால், இன்று கம்ப கூழ், கேப்பங்கூழ் சாப்பிடகிறவர்கள் பணக்காரர்கள், அரிசி சோறு சாப்பிடுகிறவர்கள் ஏழைகள். அதுபோல் தான் பனைக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. பனை மரம் என்பது நாங்கள் ஆண்டு அனுபவித்தவர்கள். 30 வருடங்களாக பனை பொருட்களை உண்டு, குடித்து நான் வாழ்ந்திருக்கிறேன். பனை மரத்தின் ஓலையில் செருப்பாக பின்னி பயன்படுத்துவோம், பனை நாரை பின்னில் கட்டில் செய்து படுப்போம், நல்லா குளிர்ச்சியாக இருக்கும். எல்லா வகையிலும் பனை பயன்பெறும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் பனைக்கெழுங்கு சாப்பிட்டால் கேன்சர் வராது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு இருந்த உணவு, சுகாதாரம் இன்று இல்லாமல் போய்விட்டது. இந்த படத்தின் பாடல் வரிகளில் கவிப்பேரரசு எழுதியிருக்கிறார், வியாபாரிகள் பனைவெள்ளத்தில் கலப்படம் செய்கிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு நான் விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். வியாபாரிகள் கலப்படம் செய்யவில்லை, அதற்கு சட்டமே இருக்கிறது. இன்று கலப்படம் இல்லாத எண்ணெய் சாப்பிடுபவர்கள் இருக்கிறீர்களா?, இன்று பாமாயில் எண்ணெய் விலை கூடினால் தேங்காய் எண்ணெய் விலை கூடும், கடலை எண்னெய் விலையும் கூடும். அப்படியானால் என்ன அர்த்தம், பாமாயில கலந்தால் தான் தேங்காய் எண்ணெய், கடலெண்ணெய். சட்டம் சொல்லுது இனிப்போட இனிப்பை கலந்துக்கொள்ளலாம் என்று. அதனால் தான் நாங்க இன்று பனைவெள்ளம் சாப்பிட வேண்டும் என்றால், ஊரில் ரூ.360 கொடுத்து ஒரு கிலோ வாங்குகிறோம். ஆனால், இங்கு ரூ.160-க்கு ஒரு கிலோ பனைவெள்ளம் விற்கிறார்கள், அது பனை வெள்ளம் இல்லை, சர்க்கரையோடு கலந்த பனைவெள்ளம். சில ஊரில் தேன் கூடு வளர்ப்பவர்களின் வீடுகளில் சர்க்கரை மூட்டை இருக்கும். பதநீர் என்பது அவ்வளவு வலிமையை கொடுக்கும் உணவு. நாங்கள் அன்று பசிக்காக பதநீர் குடித்தேன், அதன் பிறகு தான் தெரிந்தது, 120 கிலோ உப்பு மூட்டையை தூக்குகிற அளவுக்கு என் எலும்பு மற்றும் தசைக்கு வலிமை கொடுத்தது பதநீர் என்பது தெரிந்தது. தமிழகத்தில் இருந்து வேலை வாய்ப்பு இல்லை, என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மை இல்லை, இங்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறது. இங்கு வட இந்திய இளைஞர்களுக்கு தான் வேலை கொடுப்பதாக சொல்கிறார்கள், என்னிடமே பலர் கேட்கிறார்கள். ஆனால், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வேலை செய்வதற்கு நம் ஆட்களின் உடம்பில் வலு இல்லை. அதனால் தான் வட இந்தியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டி இருக்கிறது. அதற்கு காரணம் நம் உணவு முறை மாற்றம். இன்று அரசு பனை மரத்தை தேசிய மரமாக அறிவித்திருக்கிறது என்றால், அதனை பாதுகாக்க வேண்டும் என்பது தான்.

இன்று தக்காளி, வெங்காயம் பத்து ரூபாய் விலை கூடி விட்டால், ஐயயோ என்று சொல்கிறார்கள். ஆனால், தங்கம் விலை கூடிவிட்டால் எதாவது கேட்கிறீர்களா?, வருடத்திற்கு ஒரு முறை திருவிழா போல் கூட்டம் இருக்கிறது. பெரிய பணக்காரர்களாக இருப்பார்கள், ஆடம்பர காரில் வந்து இறங்குவார்கள், அவர்கள் பூ வியாபாரிடம் பேரம் பேசுவார்கள். நான் சொல்வதென்றால், பூ வியாபாரிகளிடமும், நுங்கு விற்பனையாளர்களிடமும் பேரம் பேசாதீர்கள்.

பனை மரத்தை மையமாக வைத்து இந்த படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் ராஜேந்திரன் அண்ணனுக்கு பாராட்டுக்குள். வியாபாரி என்பவர் ஜெயிக்க வேண்டும், இந்த படத்தை தயாரித்த ராஜேந்திரன் அண்ணனும் ஜெயிக்க வேண்டும். பனைமரம் பாதுகாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை எடுத்திருக்கும் அவர் நிச்சயம் ஜெயிப்பார். பனை மரம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், இந்த படத்தை நாம் தியேட்டரில் பார்க்க வேண்டும். தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை இந்த படத்திற்கு பக்கபலமாக இருக்கும், என்று சொல்லி வாழ்த்து விடைபெறுகிறேன்.” என்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில், பனை என்பது படத்தின் பெயர் அல்ல மண்ணின் பெயர், மக்களின் பெயர் மற்றும் நம்முடைய கலாச்சாரத்தின் குறியீடு என்றுதான் கருதுகிறேன்.  ஒரு படத்திற்கு தலைப்பு மிக மிக முக்கியம். இப்போது வருகிற தமிழ்த் திரைப்படங்களின் பெயர்களை பார்த்தால் தான் கொஞ்சம் துக்கப்படுகிறேன். சில நேரங்களில் வெட்கம் படுகிறேன்.

அந்தப் பெயர் எனக்கு ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை அது வெறும் ஒரு
சொல்லாக இருக்கிறது. தமிழில் சொற்களுக்கா பஞ்சம். தமிழில் தலைப்புகளுக்காக
பஞ்சம். தமிழில் அழகான சொல்லாடலுக்கா பஞ்சம். நல்ல பெயர்களை தனித்துவமான பெயர்களை ஏன் நீங்கள் சூடக் கூடாது என்று பார்க்கிறேன். இதற்காக பத்திரிகைகளில் அதிகாலை செய்திகளை புரட்டிப் பார்க்கிறேன்.

படத்தின் தலைப்புகளை பார்க்கிறபோது அடுத்த பக்கம் செல்வதற்குள் அந்த தலைப்பு ஒரு மின்னலைப் போல் என் மூளையை கடந்து முடித்து விடுவதை பார்க்கிறேன்.  தலைப்பு என்றால் நெஞ்சில் தைக்க வேண்டாமா என் இருதயத்தில் சென்று பசை போட்டு ஒட்டிக்கொள்ள வேண்டாமா? என்னை திருப்பி உச்சரிக்க வைக்க வேண்டாமா?

ஒரு தலைப்பு என்பது ஒரு படத்திற்கு ஒரு கருத்தை சொல்வதாகவும் இன்னொன்று ஒரு காட்சியை விரியச் செய்வதாகவும் அது குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்று தான் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் தலைப்பு வைத்தார்கள். பழைய தலைப்புகளை எல்லாம் பார்த்தா அந்த தலைப்பில் கதை வரும் மங்கையர் உள்ளம் மங்காத செல்வதென்றால் ஒரு சமூகத்தின் பண்பாடே வந்துவிடும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொன்னவுடன் ஒரு கலாச்சாரத்தின் ஞாபகத்திற்கு வந்து விடுகிறது.

அதெல்லாம் பழசு என்று நமக்குத் தெரியும் ஆனால் அந்த வழியில் வருகிறவர்கள்
தலைப்புகளில் ஒரு ஆழ்ந்த கவனத்தை செலுத்தி நிகழ்காலத்தில் பொருள் குறித்தும்
நிகழ்காலத்தில் மாற்றம் குறித்தும்  ஏதாவது மக்களுக்கு சொல்லிச் செல்ல வேண்டும்
என்று நான் விரும்புகிறேன். தலைப்பு வைக்கிற தமிழ் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கதாசிரியர்கள் தயவு செய்து அழகான தமிழ் பெயர்களை படத்துக்கு சூட்ட வேண்டும் என்று நான் அன்போடு விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இது ஒரு கவிஞனுடைய வேண்டுகோள் அல்லது ஒரு பாடலாசிரியரின் வேண்டுகோள் என்று நினைத்து விடாதீர்கள் இது தமிழ் மக்களின் வேண்டுகோள். பாமரனின் வேண்டுகோள் உழவனின் வேண்டுகோள். அதேபோல மூட்டை தூக்குகிற தொழிலாளி, விறகு வெட்டியின் வேண்டுகோளாகும். அவன் தமிழோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு தலைப்பை மாறுபட்ட முறையில் தமிழுக்கு விரோதமாக வைத்து அந்த படம் வெற்றி பெற்றுவிட்டது என்று நீங்கள் சொன்னால் நான் ஏற்றுக்கொள்கிறேன் வெற்றியும் பெறுவதில்லை.

மேலும் இந்த படத்திற்கு எனக்கு கதை சொன்ன இயக்குனர் இந்தப் படத்திற்கு விதை என்று பெயர் வைத்திருக்கிறேன் என்று சொன்னார் நான் சொன்னேன் விதை நல்ல பெயர் தான் ஆனால் நீங்கள் சொல்ல விரும்புகிற கதையை விட்டு விதை தள்ளி இருக்கிறது எனவே இந்த படத்தின் ஒட்டுமொத்த இருதய துடிப்பும் தலைப்புக்குள் வரவேண்டும் என்றால் பனை என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னேன்.விதையை விட பனை எனக்கு இன்னும் பக்கத்தில் இருக்கிறது ஐயா என்று சொன்னார் அவருக்கு வாழ்க என்று சொன்னேன்.

மேல்நாட்டில் எப்படி எல்லாம் தலைப்பு வைப்பார்கள் தெரியுமா?  ஒரு ஆங்கில
படத்துக்கு தலைப்பு காற்றுக்கு படிக்க தெரியாது என்று வைத்திருந்தார்கள்.  எப்படி
தலைப்பு வைத்தான்  தெரியுமா?  காற்று வீசுகிறது..  ஒரு மரத்தின் மீது வீசுகிறது ஒரு மாளிகை மீது வீசுகிறது ஒரு புல்வெளியின் மீது வீசுகிறது ஒரு குழந்தையின் மீது வீசுகிறது ஒரு சாலையில் வீசுகிறது ஒரு சோலையில் வீசுகிறது.. என வைத்துக் கொள்வொம்.

அப்போது ஓரிடத்தில் பூக்களை பறிக்காதீர்கள் என்று ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது இப்போது காற்று வேகமாக அடிக்கிறது பூக்கள் புல்வெளியில் உதறுகின்றன.  எனவே தான் காற்றுக்கு படிக்க தெரியாது என தலைப்பு வைத்திருக்கிறான்.   ஒரு தலைப்பு உங்களுக்குள் ஒரு பரவசத்தை உண்டாக்க வேண்டும்.

டெல்லியில் ஒருவன் தன் சுயசரிதையை எழுதிவிட்டு “மை ஸ்டோரி” என்று
தலைப்பு வைத்தால் நூறு பிரதிகள் கூட விற்கவில்லை என்ன என்று யோசித்துப்
பார்த்தார் அட்டையை கிழித்து எறிந்து விட்டு இன்னொரு தலைப்பு வைத்தான் ஒரே
நாளில் 3000 பிரதிகள் விற்று விட்டன.  அவர் வைத்த தலைப்பை மாற்றி
”என் மகனின் தந்தையின் கதை” என்று தலைப்பு  வைத்தான்.” என கவிஞர் வைரமுத்து பேசினார்.

நிகழ்ச்சியில் இறுதியில் இசை குறுந்தகடை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பெற்றுக்கொண்டார்.