தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பதவியேற்பு விழாவில் மாஸ்டர் ரிலீஸ் பற்றி நம்பிக்கை வார்த்தை சொன்ன அமைச்சர் கடம்பூர் ராஜூ
சென்னை கலைவாணர் அரங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. முரளி தலைமையிலான நிர்வாகிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ சான்றிதழ் அளித்து வாழ்த்தினார். அப்போது அமைச்சரிடம் உள்ளாட்சி வரியை ரத்து செய்வது, திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சிறிய பட்ஜெட் படங்களுக்கான பிரத்யேக காட்சிகளை ஒதுக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் முன்வைத்தனர்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி கேட்டிருக்கிறீர்கள். ஆனால் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக தமிழகத்தில் கொரோனாவே இல்லாமல் போகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்றினால் டிசம்பர் மாதமே கொரோனா தமிழகத்தை விட்டு ஓடிப்போகும் என்றும் அமைச்சர் பேசினார்.
ஒரு ஸ்கிரீன் மட்டுமே கொண்ட பெரிய திரையரங்குகளை பல ஸ்கிரீன் கொண்ட சின்ன சின்ன திரையரங்குகள் ஆக மாற்ற அரசு ஒப்புதல் அளிக்கும் உத்தரவு விரைவில் வர இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.