கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு மலையாள நடிகர்
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் விக்ரம். கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தில் புதிதாக மலையாளத்தின் பிரபல நடிகர் செம்பன் வினோத் இணைந்துள்ளார்.
செம்பன் வினோத் நடிகர் மட்டுமல்ல. லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் அங்கமாலி டை ரிஸ், அஷ்ரப் ஹம்சா இயக்கியிருக்கும் பீமன்டெ வாளி ஆகிய படங்களின் திரைக்கதையையும் செம்பன் வினோத் எழுதியுள்ளார். இது தவிர பல படங்களில் இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
மலையாளத்தில் வில்லன், நாயகன், குணச்சித்திரம் என அனைத்துவகை நடிப்பிலும் கொடிகட்டியவர் தமிழில் கோலிசோடா 2 படத்தில் நடித்தார். இப்போது விக்ரம் படத்தில் இணைந்திருக்கிறார். விக்ரமில் ஏற்கனவே பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ் என நான்கு மலையாள நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஐந்தாவதாக இப்போது செம்பன் வினோத்தும் சேர்ந்துள்ளார்.
விக்ரமை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். செம்பன் வினோத் திரைக்கதை எழுதி, தயாரித்திருக்கும் பீமன்டெ வாளி படத்துக்கும் க்ரிஷ் கங்காதரனே ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் படம் அடுத்த வருடம் திரைக்கு வருகிறது.