இந்தியாவில் முதன்முறையாக மத்திய அரசின் வேளாண் மானியத்தைப் பெற்று ட்ரான் ஸ்டார்ட்அப் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் பல வகையில் பயன்பெற முடியும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் ஷாம்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்னி வணிக மையத்தில் கருடா ஏரோஸ்பேஸின் துணை தலைவர் ராகவேந்திரனுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஷாம்குமார், கருடா ஏரோஸ்பேஸின் இந்த ட்ரான் மூலமாக விவசாயிகளின் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க முடியும் என்றார். விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க தற்போது ஒரு நாள் முழுவதும் எடுத்துக்கொள்வதாக தெரிவித்த அவர் இந்த ட்ரான்கள் இந்த பணியை வெறும் 8 நிமிடங்களில் முடித்துவிடும் என்றார். இதற்கான வங்கிக்கடன்களை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனமே விவசாயிகளுக்கு பெற்றுத்தருவதாகவும் அவர் தெரிவித்தார். ட்ரானின் விலை ஐந்து லட்சமாக இருப்பின் 40 விழுக்காடு மானியத்தொகையான 2 லட்சம் கழித்து மீதமுள்ள பணத்தை தவணை முறையில் விவசாயிகள் செலுத்தலாம் என்று தெரிவித்த அவர், மனிதரின் மூலமாக பூச்சி மருந்து தெளிப்பதால் ஒரு ஆண்டில் ஏற்படும் செலவு சுமார் 20 லட்சம் மற்றும் விவசாயிகள் பூச்சி மருந்தினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்டவற்றை தவிர்க்கலாம் என்றும் கூறினார். குறிப்பாக இந்த ட்ரான் மூலம் ஒரே நாளில் 30 ஏக்கர் நிலத்தில் மருந்து தெளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
