குபேரா சினிமா விமர்சனம்a

0
1243

குபேரா சினிமா விமர்சனம் : குபேரா சுழன்று அடிக்கும் சுனாமியில் சிக்கி தப்பிக்க விளையாடும் ஆடு புலி ஆட்டம் | ரேட்டிங்: 4/5

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில்  சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் தயாரித்திருக்கும் குபேரா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சேகர் கம்முலா.

இதில் தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சுனைனா, சாயாஜி ஷிண்டே, தலிப் தஹில், பாக்யராஜ், ஹரிஷ் பேரடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள் :- வழங்குபவர் – சோனாலி நரங், இசை – தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பு – தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் – நிகேத் பொம்மி, எடிட்டர் – கார்த்திகா ஸ்ரீPனிவாஸ் ஆர், இணை எழுத்தாளர் – சைதன்ய பிங்கலி, இரண்டாவது யூனிட் இயக்குனர் – சூரி ரவிக்குமா​ர், அதிரடி இயக்குனர் – ‘ஸ்டண்ட்ஸ்’ ஸ்ரீ, விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்கள் – அசோக் மொச்சார்லா, நாகு தலாரி, ஆடை வடிவமைப்பாளர்கள் – காவ்யா ஸ்ரீராம், பூர்வா ஜெயின், விளம்பர வடிவமைப்பாளர் – கபிலன், நிர்வாக தயாரிப்பாளர் – இரலா நாகேஸ்வர ராவ், இணை தயாரிப்பாளர் – அஜய் கைகாலா, தமிழ் உரையாடல்கள் – அகோரம் பன்னீர்செல்வம், ஆடியோ : ஆதித்யா மியூசிக், தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு – ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், பிஆர்ஒ- ஏய்ம் சதீஷ்.

மத்திய அரசின் நிதியில் நடுக்கடலில் பல ஆண்டுகள் எரிவாயு ஆராய்ச்சியில் திடீர் திருப்பமாக பதினைந்து ஆண்டுகளுக்கு தேவையான எண்ணெய் கிணறு கண்டுபிடிக்க, அதனை அங்கு பணிபுரியும் விஞ்ஞானி மூலம் அறிந்து கொள்கிறார் இந்தியாவின் பெரும் பணக்கார கோடீஸ்வர தொழிலதிபர் நீரஜ் மித்ரா (ஜிம் சர்ப்). உடனே டெல்லிக்கு பறந்து சென்று மத்திய அமைச்சர் சித்தப்பா(ஹரிஷ் பேரடி) சந்தித்து ஒரு லட்சம் கோடி லஞ்சப் பரிவர்த்தனையை பேசி முடிக்கிறார். 50 ஆயிரம் கோடி வெள்ளையாகவும், மீதி 50 ஆயிரம் கோடி கருப்பு பணமாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரித்து கொடுக்குமாறு பட்டியலிட்டு மத்திய அமைச்சர் கொடுக்க, அதற்கு ஒப்புக்கொள்கிறார் நீரஜ். இந்த பண பரிவர்த்தனையை முடிக்க நீரஜ் தன் தந்தையின் மூலம் முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக் (நாகர்ஜுனா அக்கினேனி) பற்றி தெரிந்து கொள்கிறார். நேர்மையான அதிகாரி தீபக் பொய் வழக்கால் பத்து ஆண்டுகள் சிறைவாசத்தில் இருக்கிறார். அவரை சந்தித்து நேர்மைக்கு மாறாக அவரை மூளைச் சலவை செய்து தன் பக்கம் இழுக்கிறார் நீரஜ். குடும்பத்தை பிரிந்து தவிக்கும் தீபக், நீரஜ்ஜின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு எந்த காரணமும் கேட்காமல் பணபரிவர்த்தனை வேலைக்கு ஒப்புக் கொள்கிறார். அதன் பின் தீபக் லஞ்சப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற 50 ஆயிரம் கோடி பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டுவிட்டு,  போலியாகச் சில பினாமிகளை உருவாக்கி பண பரிவர்த்தனை செய்ய முடிவெடுக்கிறார்.  அதற்காக இந்தியா முழுவதும் அலசி ஆராய்ந்து படிப்பறிவில்லாத, எதுவுமே தெரியாத 4 எளிய மற்றும் அப்பாவி பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து இடைத்தரகராக பயன்படுத்த தீபக் திட்டம் போட்டு கொடுக்கிறார். அவர்களைப் பணக்காரர்களைப் போல நடிக்க வைத்து, தங்களின் காரியம் முடிந்த உடன் எந்த ஒரு தடையும் இருக்கக் கூடாது என்று அவர்களை கொல்ல ரகசியமாக முடிவு செய்கிறார் நீரஜ் மித்ரா. அந்த நான்கு பிச்சைக்காரர்களில் ஒருவரான தேவா (தனுஷ்) திருப்பதியிலிருந்து கூட்டி வரப்படுகிறார். படிக்கவில்லை என்றாலும் அபார ஞாபக சக்தி நிறைந்தவராக, அப்பாவி மனிதரான தேவா (தனுஷ்)  இவர்களின் வஞ்சக வலையில் சிக்குகிறார். ஒரு கர்ப்பிணிப்பெண், மூன்று ஆண்கள் என்று நான்கு பேரையும் ஒரு பங்களாவில் அடைத்து வைத்து உண்ண உணவு, உடுக்க உடை, பேசும் பயிற்சி, கையெழுத்து போடுவது என்று பல நாட்கள் பயிற்சியில் தேறும் இவர்களுக்கு ஆதார் அட்டை வாங்கி கொடுத்து பரிவர்த்தனைக்கு தயார் படுத்துகிறார் தீபக். இந்த வில்லன் கூட்டத்தில் தீபக்கை மட்டுமே நல்லவராக தேவா நம்புகிறார்.  இவர்களின் பண வர்த்தகம் முடிந்தவுடன் பிச்சைக்காரர்களில் ஒவ்வொருவராக கொல்லப்பட, இதனை அறிந்து கொள்கிறார் தேவா.இதனிடையே தேவாவின் பண பரிவர்த்தனையின் போது, காரியம் முடிந்தவுடன் கொல்ல அழைத்துச் செல்லப்படும் நேரத்தில் தப்பித்து விடுகிறார். அதே சமயம் தேவா வங்கி கணக்கு பண பரிவர்த்தனை சரியாக செயல்படாததால் தோல்வி ஏற்படுகிறது. அதனால் அதிர்ச்சியாகும் தீபக், தேவாவை திரும்பி அழைத்து வர சொல்லும் நேரத்தில் தேவா காணவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். நீரஜ் மற்றும் தீபக் தங்களின் லஞ்சப் பரிவர்த்தனை வெளி உலகிற்கு தெரிந்து விடப் போகிறது என்ற பதட்டத்தில் தேவாவை தீவிரமாக தேடுகின்றனர். இதனிடையே வில்லன்களிடமிருந்து தப்பித்து செல்லும் தேவா காதலனால் கைவிடப்பட்ட சமீராவை (ராஷ்மிகா மந்தனா)சந்திக்க நேரிடுகிறது. அவரின் செல்போன் மூலம் தேவா தீபக்கை தொடர்பு கொள்ள முயற்சிக்க முடியாமல் போகிறது.  அந்த செல்போன் சிக்னல் மூலம் தேவாவை கண்டுபிடிக்க முயற்சிக்கும் கும்பலிடமிருந்து தேவா தப்பித்தாரா? தேவாவால் சமீரா சந்திக்கும் பிரச்சனை என்ன? தேவா தப்பித்து செல்லும் இடங்களிலெல்லாம் சந்திக்கும் இடையூறுகள் என்ன?  தீபக் தேவாவிற்கு உதவி செய்தாரா? இறுதியில் தேவா எடுக்கும் முடிவு என்ன? அதிகாரத்திற்கும் பணத்திற்கும் நடுவே உயிரோடு தேவா தப்பிக்க முடிந்ததா? இதில் குபேரா யார்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

பிறருக்கு உதவும் குணம், பாசம் நிறைந்த வெள்ளேந்தி மனமுடைய தேவாவாக தனுஷ். படம் முழுவதும் காட்சிகளுக்கேற்ப மாறும் குணாதியங்கள், பிச்சைக்காரர்களின் மனநிலை, உணவிற்காக படும் அல்லல்கள், பரிதாபத்தின் விளிம்பில் இருக்கும் அவர்களின் வாழ்க்கை என்று ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் பிரதிபலித்து, அனாதையான தன்னை அரவணைத்த உப்பளியண்ணன், வயதான தந்தை ஸ்தானத்தில் இருக்கும் பாக்யராஜிடம் காட்டும் மரியாதை, சிறு வயதில் கையில் ஏற்பட்ட ஊனம், கர்ப்பிணி பெண்ணின் மேல் இரக்கம் காட்டும் இடம், தீபக்கை தன்னுடைய வழிக்கு கொண்டு வந்து உதவி செய்ய வைக்கும் மனதைரியம்,  சமீராவை ஒட வைத்து செய்யும் அலப்பறை, பணத் திமிரை அடக்க செய்யும் தந்திரம் என்று தன் புத்தி கூர்மையால் தப்பித்து வாழ துடிக்கும் போராட்ட இளைஞராக தன்னுடைய அசாத்திய நடிப்பால் கவர்ந்து அசத்தியுள்ளார் தனுஷ். இவரின் அபரிதமான உழைப்பு பல விருதுகளை அள்ளித் தரும்.

முன்னாள் நேர்மையான சிபிஐ அதிகாரி, குடும்பத்திற்காக எதிரிகளிடம் கூட்டு சேர்ந்தவுடன் குணம் மாறி உதவி செய்தாலும், பணக்கார அதிகார துரோகத்தை கண்டுபிடித்து, அதற்கு ஒத்துழைக்காமல் காப்பாற்ற துடிக்கும் துடிப்பு மிக்க அதிகாரியாக படத்தின் முக்கிய கிங் மேக்கராக வலம் வருகிறார் நாகார்ஜுனா அக்கினேனி. தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் காட்சிகள் அனைத்துமே யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டு கை தட்டல் பெறுகிறது.

ராஷ்மிகா மந்தனா எந்த ஒரு கவர்ச்சி தூக்கல் இல்லாமல் எளிமையான நடுத்தர வர்க்க பெண்ணாக அழுது புலம்பும் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். தனுஷ{க்கும் இவருக்கும் நடக்கும் உரையாடல்கள் காட்சிகள், உயிரோட்டமாக மெல்லிய புன்னகையை வரவழைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெரும் கோடீஸ்வர தொழிலதிபராகவும், அரசாங்கத்தையே தன் பண பலத்தால் ஆட்டிப் படைக்கும் வில்லனாக ஜிம் சர்ப் ஒல்லியான தேகம், நரைத்த முடி, திமிர் கலந்த ஆணவ பேச்சு என்று தன்னுடைய கதாபத்திரத்தை உணர்ந்து மிரட்டலுடன் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். இறுதிக் காட்சியில் தனுஷிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தை அரங்கமே அதிர்கிறது.

சுனைனா, சாயாஜி ஷிண்டே, தலிப் தஹில், பாக்யராஜ் மற்றும் ஹரிஷ் பேரடி மற்றும் பலர் படத்திற்கேற்ற பங்களிப்பை கொடுத்து திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதையின் ஒட்டத்துடன் இணைந்து பிரித்து பார்க்க முடியாதவாறு இசை மற்றும் பின்னணி இசையால் அதிர வைத்துள்ளார்.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு பிரம்மாண்ட காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, இயக்குனரின் எண்ணத்தை பிரிதிபலித்து அசத்தலாக கண்களுக்கு சமபந்தி விருந்து படைத்துள்ளார்.

எடிட்டர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பு அரைமணி நேர காட்சிகளை எடிட் செய்திருந்தால் இன்னும் விறுவிறுப்பை எகிற செய்திருக்கும்.

பணம், அதிகாரம் இரண்டையும் எதிர்த்து போராடும் ஒரு எளிய ஏழை இளைஞனின் சாமர்த்தியத்தை தன்னுடைய அழுத்தமான மூன்று மணி நேர திரைக்கதையால் கட்டிப் போட்டு முதல் பாதி கதாபாத்திரங்களின் விவரிப்பு, பினாமிகளின் தேர்வு, இரண்டாம் பாதி எதிரிகளிடமிருந்து தப்பித்து பழி வாங்கும் கதைக்களமாக திறம்பட கையாண்டு இயக்கியுள்ளார் சேகர் கம்முலா. படம் முழுவதும் எதிர்பார்ப்பை எகிற செய்யும் காட்சிகளுடன், திறமையான நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்;களின் அளப்பரிய பணி, தெளிந்த நீரோடைப் போல செல்லும் திரைக்கதை என்று இயக்குனர் சேகர் கம்முலா வித்தியாசமான அணுகுமுறையுடன் உணர்ச்சிகளின் குவியலாக சென்டிமெண்ட் கலந்து சிறப்பாக கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரித்திருக்கும் குபேரா சுழன்று அடிக்கும் சுனாமியில் சிக்கி தப்பிக்க விளையாடும் ஆடு புலி ஆட்டம்.