‘நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் வரும் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாடு பரவலாக கடுமையான மழைப்பொழிவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் இதுவரை கண்டிராத மழையை சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு தினங்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. இவையல்லாமல், மற்ற மாவட்டங்களிலும் மழையின் அளவு வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி உள்ளது. அங்கு அமைச்சர்கள், துணை முதலமைச்சர் ஆகியோர் தீவிட களபணியில் ஈடுபட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து தனது சமுகவலைத்தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொடர் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள செய்யூர், மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு வெள்ளச்சேதம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன்.
நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவிகளை வழங்கியதோடு, வீடுகள் சேதம், கால்நடை இறப்பு, பயிர்ச்சேதம் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலைமையைச் சீர்செய்ய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள்; அத்தியாவசியச் சேவைகளை மீட்டெடுத்து வரும் மின்சாரத் துறை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, முக்கியமாகப் பேரிடர் தடுப்புப் படைப் பிரிவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளும், நன்றியும்!” என்று கூறியுள்ளார்.