போகுமிடம் வெகு தூரமில்லை சினிமா விமர்சனம் : போகுமிடம் வெகு தூரமில்லை உன்னத தியாகத்தை சொல்லி பாராட்ட வார்த்தைகள் இல்லை | ரேட்டிங்: 3.5/5
ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சிவா கில்லாரி தயாரித்திருக்கும் போகுமிடம் வெகு தூரமில்லை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் மைக்கல் கே ராஜா.
இதில் விமலுடன் கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :- இசையமைப்பாளர்: என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ், படத்தொகுப்பு : எம்.தியாகராஜன்,ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ், நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன், கலை இயக்குனர்: சுரேந்தர், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ் ராகவன், நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி, மக்கள் தொடர்பு – சதீஷ் (எய்ம்)
சென்னையில் விபத்து ஒன்றில் மரணிக்கும் திருநெல்வேலியில் பிரபலமான பெரிய குடும்பத்தின் தலைவர். அவருக்கு இரண்டு மனைவிகள் என்பதால் குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை இருந்து கொண்டேயிருக்கும், இவரின் மரணம் குடும்பத்தில் மீண்டும் புகைச்சலைக் கிளப்பி யார் கொல்லி போடுவது என்பதில் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து பெரிய மனிதரின் உடலை எடுத்துக் கொண்டு அமரர் ஊர்தியில் வருகிறார் டிரைவர் குமார் (விமல்). குமாருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மனைவியின் பிரசவ செலவிற்கு பணம் தேவைப்படுவதால் அவசரமாக இதற்கு ஒப்புக் கொண்டு திருநெல்வேலிக்கு உடலுடன் பயணிக்கிறார். வழியில் அமரர் ஊர்தியை வழி மறித்து ஏறிக் கொள்கிறார் தெருக்கூத்து கலைஞர் நளினமூர்த்தி (கருணாஸ்). அதன் பின் வீட்டை விட்டு ஒடி வந்த காதல் ஜோடியும் வண்டியில் ஏறிக்கொள்ள, அவர்களை துரத்தி வரும் உறவினர்கள் வழி மறித்து சண்டை போடுகின்றனர். அவர்களுடன் சண்டையிடும் போது பெரியவரின் உடல் காணாமல் போகிறது. இதனால் அதிர்ச்சியடையும் குமார் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். குமாரிடம் போனில் பேசும் பெரியவரின் குடும்பத்தார்கள் உடனே உடலை எடுத்துவருமாறு வற்புறுத்துகிறார்கள். இந்நிலையில் விபரீதத்தை உணரும் நளினமூர்த்தி குமாருக்கு உதவ முன் வருகிறார். இருவரும் சேர்ந்து அனாதை பிணம் கிடைத்தால் எடுத்து செல்ல முடிவு செய்கின்றனர். ஆனால் அந்த காரியமும் கை கூடாமல் போக, பெரியவரின் குடும்பத்தை எப்படி சமாளித்தார்கள்? பெரியவரின் உடலை கடத்தியது யார்? இரு குடும்பத்தில் யார் கொல்லி போட்டார்கள்? இறுதியில் நளினமூர்த்தி குமாருக்கு என்ன உதவி செய்தார்? குமாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் என்ன? என்பதே படத்தின் பதற வைக்கும் க்ளைமேக்ஸ்.
அமரர் ஊர்தி ஒட்டுனர் குமாராக விமல் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். இரண்டு குழந்தைகளை இழந்த சோகம், மனைவியின் பிரசவ செலவு, பெரிய மனிதரின் குடும்பத்தார்கள் ஏற்படுத்தும் அழுத்தங்கள், கலப்பு காதல் ஜோடிக்காக சண்டையிடும் தருணங்கள், கருணாஸின் வளவள பேச்சில் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சிகள், உடலை தொலைத்து விட்டு பரிதவிக்கும் இடங்கள், நண்பரின் உதவியோடு உடலை தேடி அலைவது, இறுதியில் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவத்தால் நிலை குலைந்து மரண ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்டு அழுவது என்று புது தெம்போடு, வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் விதத்திற்கு பாராட்டுக்கள்.
கூத்து பட்டறை கலைஞர் நளினமூர்த்தியாக கருணாஸ், தாய் மீது இருக்கும் பாசத்தால் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து, தாய் இறந்த பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள நினைப்பது, தெருக்கூத்தின் அழிவால் வேலை இல்லாமல் கஷ்டப்படுவது என்று தன்னுடைய உள்மனதில் ஏற்பட்ட மனஅழுத்தத்தை சொல்லி புலம்பும் நேரத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறார். அதன் பின் விமலுக்கு உதவ எடுக்கும் திடீர் முடிவு ஒரு பெரிய சிக்கலை தீர்ப்பதற்கு வழிவகுத்தாலும், அவரின் தியாகத்தால் அனைவரையும் கண் கலங்க செய்து விடுகிறார். இறுதியில் தெருக்கூத்தில் கர்ணனின் இறப்புடன் வசனம் பேசி இவரை தொடர்புபடுத்தி காட்டியிருக்கும் விதத்தில் தனித்து நிற்கிறார்.வெல்டன்.
இவர்களுடன் விமலின் மனைவியாக மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி என்று அவரவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அசத்தலாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர்: என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ், படத்தொகுப்பு : எம்.தியாகராஜன்,ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ், நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன், கலை இயக்குனர்: சுரேந்தர் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் சென்னை டூ திருநெல்வேலி பயணத்தை யதார்த்தமாக காட்சிப்படுத்தியதில் முக்கிய பங்களிப்பிற்கு கை தட்டல் பெறுகின்றனர்.
விபத்தில் இறந்த பெரிய மனிதரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் அமரர் ஊர்தியிலிருந்து கதைக்களம் தொடங்கி இரண்டு பேர்களின் வாழ்வியலை சுற்றி நடக்கும் சம்பவங்களை, பிரச்சனைகளை, தேவைகளை, நினைத்ததை செய்து முடிக்க துடிக்கும் சொந்தங்களின் பகையை எந்த இடத்திலும் தோய்வு ஏற்படாத வண்ணம் விறுவிறுப்பாக கொடுத்து அதில் கலப்பு காதல், சண்டை, மனிதநேயம், நட்பு, கொஞ்சம் காமெடி, அடிதடி கலந்து அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் மனிதர்களின் மாறும் குணாதியங்களை நயம்பட சொல்லி ஆச்சர்யம் ஏற்படுத்தும் வகையில் அசத்தலுடன் கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் மைக்கல் கே ராஜா. ஹாட்ஸ் ஆஃப்.
மொத்தத்தில் ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சிவா கில்லாரி தயாரித்திருக்கும் போகுமிடம் வெகு தூரமில்லை உன்னத தியாகத்தை சொல்லி பாராட்ட வார்த்தைகள் இல்லை.