சின்னஞ்சிறுகிளியே விமர்சனம்
இயற்கை உணவகம் நடத்தும் செந்தில்நாதன், மனைவியை இழந்து மகள், மச்சினர், பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆறு வயது மகளின் மேல் அதிக பாசம் வைத்திருக்கும் செந்தில்நாதனுக்கு திருவிழாவின் போது மகள் காணாமல் போக மகளை தேடி அலைகிறார். இறுதியில் முட்புதரில் காயங்களுடன் கண்டெடுத்தாலும் மகளின் நிலை கண்டு கண் களங்குகிறார். இதற்கு காரணமானவர்களை கண்டு பிடிக்க செல்லும் இடத்தில் அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்க அதற்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்து எடுக்கும் முடிவு என்ன? என்பதே கதையின் இறுதிக்கட்டம்.
கதை நாயகனாக செந்தில்நாதன், ரீலில் நடித்தாலும் ரியல் மகளான பேபி பதிவத்தினி, மனைவியாக சாண்ட்ரா நாயர், இயற்கை வைத்தியத்தை படிக்க வரும் அர்ச்சனா சிங், பாலாஜி சண்முகசுந்தரம், குலப்புளி லீலா, செல்லதுரை, விக்ரமாதித்யன் ஆகியோர் தேர்ந்த நடிப்பால் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றனர்.
மஸ்தான் காதர் இசை, பாண்டியன் குப்பனின் ஒளிப்பதிவு, சபரிநாதன் முத்துப்பாண்டியன், பத்மநாபன்.ஜி வசனம் படத்திற்கு பலம்.
உலக ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்த இப்படம் பல விருதுகளை பெற்றிருக்கிறது.முதல் பாதி காதல், பாசம், என்று கலகலப்பாக சென்றாலும் இடைவேளைக்கு முன் நடக்கும் சம்பவங்கள் படபடக்க வைத்தாலும் படத்தின் பின்பாதி கொஞ்சம் பரபரப்பாகவே செல்கிறது. இயற்கை முறை வைத்தியத்தை மறந்ததால் ஆங்கில மருத்துத்தில் சில கார்ப்பரேட் கம்பெனிகள் புகுந்து வியாபார ரீதியாக சதித்திட்டம் தீட்டுவதை துல்லியமாக சொல்லி கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன். சொல்ல வந்த கருத்தை சில இடங்களில் அழுத்தமாக சொல்லாததால் படத்தில் பல காட்சிகள் துண்டு துண்டாக தெரிவது போல் இருந்தாலும், யூகத்துடன் நகர்த்தியிருக்கும் துணிச்சலான முயற்சிக்கு ஒரு ராயல் சல்யூட்.
மொத்தத்தில் செண்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில்நாதன் தயாரித்து நடித்திருக்கும் சின்னஞ்சிறுகிளியே மக்களுக்கு எலும்பு மஜ்ஜை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அசத்தல் படம்.