இந்திய சுதந்திர தினம்: அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கம், உலக வர்த்தக மையத்தில் மூவர்ண கொடி

0
155

இந்திய சுதந்திர தினம்: அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கம், உலக வர்த்தக மையத்தில் மூவர்ண கொடி

நியூயார்க், நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எனினும், கடந்த ஓராண்டாக சுதந்திர தின அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்த சூழலில், இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நியூயார்க் மெட்ரோபாலிடன் பகுதிக்கான இந்திய கூட்டமைப்பு சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.

இதனை முன்னிட்டு இந்திய தூதர் ரன்தீர் ஜஸ்வால் வருகை தந்து இந்திய தேசிய கொடியை ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கலந்து கொண்டார். இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களான தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாடகர் சங்கர் மகாதேவன் நாட்டுப்பற்று பாடல் ஒன்றையும் பாடினார். அவருடன் சேர்ந்து கொண்டு இந்திய வம்சாவளியினரும் உணர்ச்சிப்பூர்வமுடன் இசைக்கேற்ப அசைந்து ஆடியபடி, பாடலை பாடினர். நிகழ்ச்சியில் தேவி ஸ்ரீபிரசாத், இந்திய தேசிய கீதம் பாடினார்.

மூவர்ண கொடியை ஏற்றும்போது, அதனை காண எண்ணற்ற மக்கள் திரண்டிருந்தனர். இதேபோன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தில் இந்திய தேசிய கொடியானது டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.