மக்களுக்காக சேவை செய்யும் கட்சி தி.மு.க. தான்- ராஜபாளையத்தில் கனிமொழி எம்.பி. பிரசாரம்

0
150

மக்களுக்காக சேவை செய்யும் கட்சி தி.மு.க. தான்- ராஜபாளையத்தில் கனிமொழி எம்.பி. பிரசாரம்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கனிமொழி எம்.பி. இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- அ.தி.மு.க.வின் சாதனைகள் கஜானாவை காலி செய்து வீட்டிற்கு எடுத்துச் செல்வது ஒன்றுதான். வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் மூன்றரை கோடி ரூபாய் லஞ்சமாக பெற்று தலைமறைவாக சென்றுவிட்டார். இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

மக்களுக்காக சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்து மக்களோடு இருக்கும் கட்சி தான் தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக சேவை செய்யும் கட்சி தி.மு.க. தான். அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது உள்ளாட்சி பிரதிநிதிகள் தான். எனவே உள்ளாட்சியில் நல்லாட்சி பெற தி.மு.க. வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள்.

தவறான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து தவறான முன்னுதாரணம் ஆகி விடக்கூடாது. இப்பகுதியில் செயல்படுத்த வேண்டிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் போன்ற திட்டங்கள் விரைவில் செயல்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சியில் நல்லாட்சி மலர உதயசூரியன் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களியுங்கள்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.