போஷன் அபியான்- செப்டம்பரில் ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது

0
268

போஷன் அபியான்- செப்டம்பரில் ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது

ஊட்டச்சத்து மதிப்பு மிக்க தாவரங்களை வளர்ப்பதற்கான வீட்டு தோட்டங்களை அமைக்க ஊக்குவிப்பு

திருச்சி, செப்டம்பர் 5, 2020

கோவிட்-19 தொற்று, உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு, ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியம் என்பதை நமக்கு உணர்த்தியுள்ளது. பிரதமர் தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் அழைப்பு விடுத்தத்தற்கிணங்க, இந்த செப்டம்பர் மாதத்தை, ஊட்டச்சத்து மாதமாக நாடு கடைபிடிக்கிறது. போஷன் அபியான் எனப்படும் ஊட்டச்சத்து இயக்கம், பிரதமரின் முழுமையான ஊட்டச்சத்துக்கான திட்டமாக, 2018 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு, ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு மக்களிடையே கருத்தரங்குகள், ஆன்லைன் கலந்துரையாடல் என்னும் டிஜிடல் வடிவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காண இலக்கு நிர்ணயித்து, இந்த ஆண்டு, ஊட்டச்சத்து மாத நடவடிக்கைகளில், வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவித்து வருகிறது. ‘யதா அன்னம் ததா மனம்’ என்பதை குறிப்பிட்டு, மனவலிமைக்கும், அறிவு வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும், குழந்தையின் நலத்துக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், தாய்ப்பால் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட தாய், சேய் சுகாதார அதிகாரி திருமதி பி.உஷா ரமணி, தாய்ப்பால் ஊட்டினால், பிரசவத்துக்குப் பின்பு ஏற்படும் ரத்தக்கசிவு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் எனக் கூறினார். குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள், தாய்ப்பால் ஊட்டினால், 22 சதவீத குழந்தை இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து விடும் என அவர் கூறினார். சீம்பாலில் வைட்டமின் ஏ மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகுந்திருப்பதால், அதனை குழந்தைக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின், மாவட்ட திட்ட அதிகாரி திருமதி டி. புவனேஸ்வரி, குழந்தையின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தாய்ப்பால் மிகவும் முக்கியம் என்பதால், தாய்க்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கொடுப்பது அவசியம் எனக் கூறினார். திருச்சியைச் சேர்ந்த திருமதி பிரியா, வெண்டைக்காய், கத்தரிக்காய், முருங்கை, பச்சை மிளகாய், கீரை வகைகளை மட்டுமல்லாமல், தக்காளியையும் தனது வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து வருவதாகக் கூறினார். பொது முடக்க காலத்தில், காய்கறிகளை வெளியில் வாங்க வேண்டிய அவசியமில்லாமல், வீட்டுத் தோட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முருங்கை கீரை ஊட்டச்சத்து மிக்கது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

திருச்சி கள மக்கள் தொடர்பு பிரிவு உள்ளிட்ட சென்னை மண்டல மக்கள் தொடர்பு பிரிவு இந்த மாதத்தில் ஊட்டச்சத்து குறித்த இணைய கருத்தரங்கு, ஊட்டச்சத்தின் அவசியம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தி வருகிறது. பொதுவாக, செப்டம்பர் மாதங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக, ஊரகப் பகுதிகளில், கள மக்கள் தொடர்பு பிரிவுகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து இந்தப் பிரச்சாரத்தை நடத்துவதுண்டு. மத்திய அரசின் அனைத்து திட்டங்களைப் போல, ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த போஷன் அபியான் இயக்கமும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இந்த ஊட்டச்சத்து மாதத்தின் போது, உணவு மற்றும் ஊட்டச்சத்து வினாடி வினா, மைகவ் வலைதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறித்த மீம் போட்டியும் நடைபெறும்.
நோய்களை எதிர்த்து சமாளிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவு மிகவும் அவசியமாகும். நமது தோட்டங்களில் எளிதில் கிடைக்கும் கீரை வகைகளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் மசாலா மற்றும் மூலிகைகள், நமது எதிர்ப்பு சக்தியை ஒரு வகையில் கூட்டுவதுடன், நோயை எதிர்த்து போராடும் வலிமையை நமக்கு அளிக்கின்றன. இதற்கு நூற்றாண்டுகள் பழமையான சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட நமது இந்திய மருத்துவ முறைகளுக்குதான் நாம் நன்றி கூறவேண்டும்.